மன்னார் மனிதப் புதைகுழியை பார்வையிட அனுமதிக்க வேண்டும்- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

மன்னார் மனிதப் புதைகுழி

மன்னார் மனிதப் புதைகுழி மீண்டும் அகழ்வு செய்யும் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அதனை நேரடியாக பார்வையிட்டு உண்மைகளை கண்டறிய அனுமதிக்க வேண்டும் என மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க செயலாளர் பி.ஷர்மிளா கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் மன்னார் நுழைவாயிலில் சதொச கட்டிடம் இருந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட இடத்தில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.

மன்னார் தீவு பகுதியில் 1990ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் வீடுகளுக்கு வந்து ராணுவம் எமது உறவுகளை பிடித்துச் சென்றுள்ளனர்.

இதனால் குறித்த பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் எமது உறவுகள் உடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தோம்.

ஆனால் எமக்காக வாதாட வந்த சட்டத்தரணிகளை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எமக்காக ஆஜராக கூடாது என்று தடுத்து நிறுத்தினார்கள்.

இதனால் மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆகிய நாங்கள் இவ்வழக்கினை வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தோம்.

அதனடிப்படையில் நேற்று முந்தினம் (22) வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் அவர்களால் எமக்கு நல்லதொரு தீர்ப்பு வழங்கப்பட்டது. இது எமக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விடயமாக உள்ளது.

எனினும் நாங்கள் கேட்டுக் கொள்வது எமக்கான உண்மை தன்மை மற்றும் நீதி என்பன எங்களுக்கு கிடைக்க வேண்டும்.

இந்த மனித எச்சங்கள் யாருடையது? என்பதை தெரியப்படுத்த வேண்டும். அத்தோடு அகழ்வு பணியின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாங்கள் அங்கு சென்று அதனை நேரடியாக பார்வையிட்டு கண்டறிவதற்கான சுதந்திரத்தை எங்களுக்குத் தர வேண்டும்.

அத்துடன் எதிர் வரும் மாதத்தில் நடைபெற இருக்கின்ற ஜெனிவா கூட்டத்தொடரில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக உண்மை மற்றும் நம்பிக்கை தன்மையுடன் கூடிய சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஏனெனில் இங்கே நீதிக்காகவும்,காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காகவும் போராடும் தாய் தந்தையர் 100க்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டார்கள்.

நாங்கள் 13 வருடங்களுக்கு மேலாக வீதியிலும் கொட்டில்களிலும் எமது ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் எம்மைக் கண்டு கொள்வார் யாருமில்லை.

ஓ. எம்.பி அலுவலகம் திறக்கப்பட்டது. அவர்கள் எம்மிடம் வந்து பதிவுகளை எடுத்துச் செல்லும் வேலை மட்டும் தான் நடை பெறுகின்றது. அதற்கான முடிவு இன்று வரை கிடைக்கவில்லை. என அவர் மேலும் தெரிவித்தார்.

Tamil News