சுயாதீன ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸ் கொரோனா தொற்றால் காலமானார்.

ஊடகவியலாளர் பிரகாஸ் கொரோனாவில் மரணம்
கொடிகாமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரகாஸ் கொரோனாவில் மரணம். ஞானப்பிரகாசம் பிரகாஸ் சுயாதீன ஊடகவியலாளராக யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், செய்திகள் எழுதி வந்ததுடன், உள்நாட்டு, வெளிநாட்டு இணையத்தளங்களிலும் செய்திகள், கட்டுரைகளை எழுதி வந்தார். சில இணையத்தளங்களில் செய்தி பதிவேற்றும் பணியையும் மேற்கொண்டிருந்தார்.

கடந்த ஐந்து நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததையடுத்து அன்ரிஜன் பரிசோதனையை தானாக முன்சென்று நடத்திய போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்தத் தகவலை தனது முகநூலில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் நேற்று (02) மாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் உயிரிழந்தார்.
தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாட்டு(Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்பட்டதால் நடக்க முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. அவற்றை எல்லாம் தாண்டியும் அவர் ஊடகத்துறையில் தனக்கென்று ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தனது உடலை யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு வழங்குமாறு மரணசாசனம் எழுதி வைக்க முற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.