யாழ். பலாலி அபிவிருத்திக்கு இந்தியா உதவும்

யாழ்.பலாலி சர்வதேச விமான நிலைய வசதிகளை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம்- சென்னைக்கு இடையே விமான சேவை மீண்டும் ஆரம்பமானதை குறிக்கும் வகையில், நேற்று முன்தினம் விமான நிலையத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சியிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்திக்காக இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்த கோபால் பாக்லே, இந்தியா – யாழ்ப்பாணம் மற்றும் இலங்கையின் பிற இடங்களுக்கிடையேயான நேரடி மற்றும் விரைவான விமானப் பயணங்கள், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவில் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றங்களை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இது, இரு நாடுகளின் மக்களிடையே பாரம்பரிய உறவுகளை வலுப்படுத்துவதுடன் சிறிய மற்றும் நடுத்தர வணிகர்களுக்கும் பயனளிக்குமென்றும் தெரிவித்துள்ளார்.