இந்திய உதவிகளின் பின்னணியில் திருகோணமலை துறைமுகத்தை பெறும் நோக்கமே உள்ளது

திருகோணமலை துறைமுகத்தை பெறும் நோக்கம்

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவிகளின் பின்னணியில் திருகோணமலை துறைமுகத்தை பெறும் நோக்கமே காணப்படுகிறது. அவ்வாறு திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் அதனை அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னைய காலங்களில் இந்திய பிரதிநிதிகள் நாட்டுக்கு விஜயம் செய்தால் , எதிர்கால உதவிகள் குறித்து பகிரங்கமாக அறிவிப்பர். ஆனால் இம்முறை நாட்டுக்கு விஜயம் செய்த இந்திய உயர்மட்ட குழு அவ்வாறு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்தியா ஏற்கனவே வழங்கியுள்ள கடன்களுக்காக பல வேலைத்திட்டங்களை தமக்கு வழங்குமாறு கோரியுள்ளது.

அத்தோடு திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த நிலப்பரப்பினையும் கோரியுள்ளதாகவும் தெரியவருகிறது. திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த நிலப்பரப்பினைக் கோரினால், அடுத்த கட்டமாக திருகோணமலை துறைமுகமே அவர்களது இலக்காகக் காணப்படும். அரசாங்கத்தினால் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து அதனை எதிர்க்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டுக்கு விஜயம் செய்துள்ள இந்த சந்தர்ப்பத்தில், அமெரிக்காவின் எமில்டன் வங்கி ராஜபக்ஷாக்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது. நாட்டுக்காக வழங்கப்பட்ட பல நிதி உதவிகள் வெளிநாட்டு வங்கிகளில் ராஜபக்ஷாக்களின் பெயர்களில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக குறித்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு ஆட்சியாளர்கள் மீது வெளிநாடுகளில் வழக்கு தொடரப்பட்டதில்லை.

எனவே தற்போது இலங்கைக்கு உதவுவதானது ராஜபக்ஷாக்களை மேம்பாடடையச் செய்யும் செயற்பாடாகும் என்று சர்வதேசத்தின் மத்தியில் ஒரு நிலைப்பாடொன்று தோற்றம் பெற்றுள்ளது. காரணம் இந்த அரசாங்கம் சர்வதேசத்தின் மத்தியில் பொய்யாகியுள்ளது.

தற்போது முடக்கம் என்று அறிவிக்கப்படாவிட்டாலும், நாடு இயல்பாக முடங்கியே காணப்படுகிறது. கோட்டாபய ராஜபக்ஷ பதவியிலிருக்கும் வரை சர்வதேசத்தின் உதவிகள் கிடைக்கப் பெறாது என்பதை அவர் உணர வேண்டும்.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் நல்லாட்சி அரசாங்கத்தில் கொண்டு வரப்பட்ட 19 ஆவது திருத்தம் அல்ல. மாறாக இந்த திருத்தமானது எந்த வகையிலும் நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதாக இல்லை.

இந்த அரசாங்கம் தற்போதாவது ஆட்சியை ஒப்படைத்து வெளியேற வேண்டும். தற்போது தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கு நிதியுதவியளிப்பதாக வெளிநாடுகளின் தூதுவர்கள் எம்மிடம் தெரிவித்துள்ளனர். அதே போன்று அரச உத்தியோகத்தர்களும் இலவசமாக தேர்தல்கள் கடமைகளில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். எனவே விரைவில் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.

Tamil News