தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தும் தொடர்ச்சியான செயற்பாடு-எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கண்டனம்

இலங்கையில் தமிழ்  ஊடகவியலாளர்கள் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தும் செயற்பாடுகளை கண்டிப்பதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊடக சுதந்திரத்தை ஆபத்தான முறையில் குறைமதிப்பிற்குட்படுத்தும் சட்டவிரோத மற்றும் தவறான நடைமுறைகள் பயன்படுத்துவதை நிறுத்துமாறு குறித்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் ஊடக சுதந்திரத்தின் மீதான பெரும் அத்துமீறலாக உள்ளது என எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை தன்னிச்சையாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என இலங்கையின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுப்பதாக குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தமிழர் பிரச்சினையைப் பரப்பும் எந்தவொரு ஊடகவியலாளரையும் வேட்டையாடுவதைப் பாதுகாப்புப் படையினர் நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களான பாலசிங்கம் கிருஷ்ணகுமார் மற்றும் செல்வகுமார் நிலாந்தன் ஆகியோர் பயங்கரவாத தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திற்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளமையே இதற்கு ஒரு உதாரணமாக கூற விரும்புவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு என்பது ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தும் ஒரு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.