“மாவீரன் கர்ணன்” என்ற வாசகம் உள்ள ஸ்டிக்கரை தனது முச்சக்கர வண்டியின் பின் புறத்தில் ஒட்டியிருந்த முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இரு இளைஞர்களை முல்லைத்தீவு காவல்துறையினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
முன்னதாக மாவீரன் என்ற சொல் பதிக்கப்பட்டிருப்பதற்காகவே வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள முல்லைத்தீவு காவல் நிலையத்துக்கு முச்சக்கர வண்டியோடு வருகைதருமாறு சகோதரர்களான புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த தர்மராசா பிந்துசன் (வயது 21) மற்றும் தர்மராசா கனிஸ்ரன் (வயது 19 ) ஆகியோரை முல்லைத்தீவு காவல்துறையினர் அழைத்திருந்தனர்.
இந்நிலையில், ஊடகங்களுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்துக்கும் குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப் பட்டவர்களால் உடனடியாக தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து கைது செய்யும் நடவடிக்கையிலிருந்து பின்வாங்கிய காவல் துறையினர், போக்குவரத்துத்து காவல்துறையினரின் கடமைக்கு ஒத்துழைக்க வில்லை என்ற குற்றச்சாட்டை சுமத்தி இவ்வருடம் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பாடசாலை மாணவனை கைது செய்து முல்லைத்தீவு காவல் நிலையத்தில் தடுத்துவைத்து பின் பிணையில் விடுவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளரான இளைஞர் கருத்து தெரிவிக்கையில்,
“எனது முச்சக்கரவண்டியை என்னுடைய தம்பி நேற்று முன்தினம் முல்லைத்தீவு நகரத்துக்கு கொண்டுவந்த நிலையில், முல்லைத்தீவு காவல்துறையினர் அவரை வீதியில் இடைமறித்து முச்சக்கரவண்டியின் பின்பக்கத்தில் ஒட்டபட்டிருந்த ‘மாவீரன் கர்ணன்’ என்ற ஸ்டீக்கர் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வேறுவிதமாக அந்த ஸ்டீக்கரை சித்தரித்து அவரை கைது செய்யும் முயற்சியோடு அவரது சாரதி அனுமதி பத்திரத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறும் கூறி, காவல் நிலையத்துக்கு வருகைதருமாறும் கூறியுள்ளனர்.
மாகாபாரதத்தில் வரும் கர்ணன், பாத்திரத்தின்மீது நான்கொண்டுள்ள பற்றின் காரணமாக நான் அந்த பெயரை வடிவமைத்து எனது முச்சக்கரவண்டியில் ஒட்டியிருந்தேன். ஆனால் அந்த மாவீரன் என்ற வாசகத்துக்காகவே என்னை கைது செய்யும் முயற்சியில் காவல்துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்திருந்தனர் என மேலும் தெரிவித்துள்ளார்.