தமிழர்களை அழித்த ராஜபக்சேக்களின் பாவக் கர்மாவே சிங்கள மக்களை வரிசையில் நிற்க வைத்துள்ளது- சிறிதரன் எம்.பி

தமிழர்களை அழித்த ராஜபக்சேக்களின் பாவக் கர்மாவே

தமிழர்களை அழித்த ராஜபக்சேக்களின் பாவக் கர்மாவே சிங்கள மக்களை வரிசையில் நிற்க வைத்துள்ளது

முள்ளிவாய்க்காலில் உணவுக்காக வரிசையில் நின்ற குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மீது குண்டுகளை வீசிக்கொன்ற, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் பாவக் கர்மாவே, சிங்களவர்களையும் அத்தியாவசியப் பொருள்களுக்காக வரிசையில் நிற்க வைத்துள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழான 2251/48, 2262/50 மற்றும் 2266/5 இலக்க வர்த்தமானப் பத்திரிகையின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மீதான நேற்றைய விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது,

“இலங்கையில் அத்தியாவசியப் பொருள்களுக்குக்கூட நாட்டு மக்கள் வரிசைகளில் நிற்கிறார்கள். இந்த பொருளாதார நெருக்கடியை தமிழ் மக்கள் 20 வருடங்களுக்கு முன்பே அனுபவித்து இருக்கிறார்கள் என்றார்.

நாட்டில் நிலவும் கடதாசி தட்டுப்பாட்டால் பரீட்சைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, பல பத்திரிகை நிறுவனங்களும் தங்களது பக்கங்களை குறைத்துள்ளன. 20 வருடங்களுக்கு முன்னர் இந்திய அமைதிப் படையினர் தமிழர் பகுதிகளுக்கு நுளைந்தபோதும் தமிழர்கள் இந்நிலைமைக்கு முகங்கொடுத்தனர் என்றார்.

வரிசைகளில் நின்றவாரே மடிந்து விழுகிறார்கள். தமிழ் மக்களுக்கு இந்த வரிசைகள் புதிதல்ல. ஆனால் இப்போதே சிங்கள மக்கள் இதனை அனுபவிக்கிறார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரனின் காலத்தில் எவரும் பட்டினியால் உயிரிழக்கவில்லை. வரிசைகளில் நிற்கவில்லை. சிங்கள தலைவர்கள் எவரும் நேர்மையுடன் சிந்திக்க தயாராக இல்லை என்பதை சிங்கள மக்களுக்குக் கூற விரும்புகிறேன் என்றார்.

அத்தியாவசிய பொருள்களுக்காக வரிசையில் நின்ற நால்வர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர். இது நாட்டுக்கு வெட்கமில்லையா? கேவலமில்லையா எனவும் கடுமையாக சாடிய ஸ்ரீதரன் எம்.பி, பிரபாகரனிடம் நாட்டை கொடுத்திருக்கலாமென சிங்களவர்களே கூறுகின்றார்கள். சிங்கள மக்களின் நிலைமைக்கு நாம் அனுதாபங்களை தெரிவிக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

தமிழ், சிங்களம் என்கிற இரு தேசிய இனங்களையும் அரவணைத்து செல்லக்கூடிய தலைவன் வராதவரையில் இந்நாடு இதைவிட மோசமான நிலைமைகளை சந்திக்கும் எனவும் எச்சரித்தார்.

மேலும், அதிகாரங்களை பகிர்ந்து சமஸ்டி அடிப்படையில் தீர்வினை வழங்க கூடிய ஒரு சிங்கள தலை மகன் எப்போது வருகின்றானோ அன்றுதான் நாடு மீளும். அந்த சிங்களமகன் மகா மனிதனாக மாறுவான். அவ்வாறான ஒரு சிங்கள மகனை உருவாக்க சிங்கள மக்கள் முன்வரவேண்டும்” என்றார்.

Tamil News