IMF கடனுதவி:இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஆதரவுக்கு அமெரிக்கா பாராட்டு

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி பெற இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஆதரவை அமெரிக்கா பாராட்டியுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவு குறித்து மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு விரிவான கடன் தொகையை பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்தியா மற்றும் பாரிஸ் கிளப்புடன் ஒருங்கிணைந்து வெளிப்படையான முறையில் கடன் நிவாரணம் வழங்குவதற்கான அர்ப்பணிப்புடன் மகிழ்ச்சியடைவதாக அவர் கூறியுள்ளார்.

அனைத்து கடனாளிகளும் நியாயமான மற்றும் சமமான கடன் நிவாரணத்துக்கு ஒப்புக்கொண்டதன் பின்னர், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் தொகையைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கைக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியதன் மூலம், இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்துக்கு இந்தியா வலுவாக ஆதரவளிப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படும் நிதி நிவாரணத்தைப் பெறுவதற்கு ஒரு நாடு என்ற வகையில் இலங்கைக்கு நிச்சயமாக ஆதரவளிக்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக நேற்று நாட்டை வந்தடைந்தார்.