அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் உள்ள அகதிகளை மீள்குடியமர்த்துவதில் தாமதம்: ஆம்னெஸ்டி அமைப்பு கவலை 

நவுருத்தீவில் உள்ள அவுஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாமில் இருக்கும் அகதிகளை மீள்குடியமர்த்துவதில் இன்னும் கூடுதலான முன்னேற்றம் தேவை என மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் குறிப்பிட்டுள்ளது. 

கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்தில் மீள்குடியமர்த்தப்படுவதற்காக 6 அகதிகள் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மேலும் 4 அகதிகள் நவுருத்தீவிலிருந்து நியூசிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதாக அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளில் ஆண்டுதோறும் 150 பேரை நியூசிலாந்தில் மீள் குடியமர்த்துவதற்கான ஒப்பந்தத்தினை கடந்த மார்ச் 2022ல் அவுஸ்திரேலியா ஏற்றுக்கொண்டது.

“அவுஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பில் பல ஆண்டுகளாக நிச்சயத்தன்மையற்ற நிலையில் தவித்து வந்த மக்களுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க முன்வந்த நியூசிலாந்து அரசாங்கத்துக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அதே சமயம், இதனை நடைமுறைப்படுத்துவது மிக மந்தமான நிலையிலேயே இருக்கிறது,” ஆமென்ஸ்டி அமைப்பின் ஆஸ்திரேலிய அகதிகள் உரிமைகள் ஆலோசகர் கிரஹாம் தாம்.

இன்றைய நிலையில், நவுரு மற்றும் பப்பு நியூ கினியாவில் உள்ள அவுஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு முகாம்களில் இருக்கும் 170 அகதிகள் மீள்குடியேற்றத்துக்காகக் காத்திருக்கின்றனர்.

அத்துடன், கடல் கடந்த தடுப்பு முகாம்களில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட சுமார் 1000 அகதிகளும் நியூசிலாந்தில் மீள்குடியமர்த்துவதற்கான பட்டியலில் இருக்கின்றனர்.