Home Blog Page 48

நல்லூர் கந்தன் ஆலய வளாகத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதற்கமைய, ஆலய வளாகத்திலும், அதனை அண்மித்தப் பகுதிகளிலும் சி.சி.ரி.வி காணொளிகள் ஊடாக கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் குறிப்பிட்டுள்ளது.
நல்லூர் வருடாந்த மகோற்சவத்தில் நேற்று (18) முதல் எதிர்வரும் ஐந்து நாட்கள் விசேட உற்சவங்கள் இடம்பெறவுள்ளன.

அதற்கமைய நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பெருந்திரளானவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். உற்சவத்தில் கலந்துக் கொள்ளும் அடியார்களின் பாதுகாப்பின் நிமித்தம் அதிக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களில் இருந்தும் சிவில் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஆலய வளாகத்திற்குள் பிரவேசித்து திருட்டுச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதால், அவ்வாறானவர்களை கண்காணிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்

அத்துடன், கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்ட விசேட சி.சி.ரி.வி வாகனம், கண்காணிப்பில் இன்றுமுதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான முறையில் எவரேனும் அடையாளம் காணப்பட்டால் உடனடியாக சீருடையுடன் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல்களை வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை!

வடக்கு மற்றும் கிழக்கு இராணுவ முகாங்களில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட நிர்வாக முடக்கல் குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொய்யான தகவல்களை முன்வைத்தே, நிர்வாக முடக்கலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் இதற்கும் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு தொடர்பான பிரச்சினைக்கும் தொடர்பில்லை என்றும் அவர் தெரிவித்தள்ளார்.
வடக்கு கிழக்கில் தற்போது உள்ள இராணுவ முகாம்களை வேறு இடத்துக்கு கொண்டுசெல்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இராணுவ முகாம்கள் இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னர் அந்த காணிகளை அரசு வேறு பணிகளுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ வழங்க முடியும் என்றும் அவ்வாறானதொரு வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரவித்துள்ளார்.

இராணுவ முகாம்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டிய தேவை இருப்பதானாலேயே, 200 பேர் இருந்த இராணுவ முகாம்களில், இராணுவ சிப்பாய்களின் எண்ணிக்கை 25ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  அதன்படி, சுமார் 7 முதல் 8 மாதங்களாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு ஹர்த்தால் தோல்வியில் நிறைவு

இலங்கை தமிழரசுக் கட்சியினால் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு அமைய, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒரு சில பகுதிகளில் இன்றைய தினம் அரை நாள் ஹர்த்தால் என்ற நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய தினம் முழுவதும் நிர்வாக போராட்டத்திற்கு முன்னதாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது
எனினும் இன்று முற்பகல் வேளையில் மாத்திரம் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றிரவு அறிவித்தார்.
பலரின் நன்மை கருதி இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்
எவ்வாறாயினும் இன்றைய தினம் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் வழமைபோலவே தமது நாளாந்த செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.

வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கண்டித்து இந்த நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அதற்கமைய, சில பகுதிகளில் மாத்திரம் வர்த்தக நிலையங்கள் சில மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் பொது போக்குவரத்து என்பன வழமைபேலவே இயங்கின. இந்தநிலையில், கிழக்கு மாகாணத்தின், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் சில வர்த்தக நிலையங்கள் மூடப்பட்ட போதிலும், பெரும்பாலான செயற்பாடுகள் வழமைப்போன்றும் முன்னெடுக்கப்பட்டன.

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு – கிழக்கில் கையெழுத்துப் போராட்டத்துக்கு ஏற்பாடு

வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டு அகழப்பட்டு வரும் மனித புதைகுழிகள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். மனித குலத்திற்கு எதிராக, இந்த பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் கையெழுத்துப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

யுத்த காலத்தில்  தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட  இன அழிப்பு நடவடிக்கைக்கு நீதி கோரி தமிழ் மக்கள் இன்றும் போராடி வருகின்றனர். குறிப்பாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் வருடக்கணக்கில் போராட்டம் நடாத்தி வருகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி எந்த அரசும் இதுவரை எந்த பதிலும் வழங்கவில்லை. இதேவேளை புதிது புதிதாக மனித புதைகுழிகளும் கண்டுபிடிக்கப்பட்டு அதற்குள் இருந்து சிறுவர்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களின் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

ஆனாலும் இந்த மனித புதைகுழிகள் தொடர்பில் உள்நாட்டில் நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும், குற்றம் இழைத்தவர்களுக்கான தண்டனையும் கிடைக்கும் என  தமிழ் மக்கள் எதிர்பார்க்கவில்லை.  ஆகவேதான் தமிழ் மக்கள் இந்த விடயங்களில் சர்வதேச விசாரணை ஒன்றை  கோருகின்றனர்.

மனித புதைகுழிகள் தொடர்பான நவீன தொழில்நுட்ப உதவிகள் உட்பட சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் இக்கோரிக்கையினை வலியுறுத்தி ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியானது வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் கையெழுத்துப் போராட்டத்தை அடுத்த வாரம் முன்னெடுக்கவுள்ளது என்றார்.

இரகசியத்தன்மை ‘அரசியல் சிதைவின்’ ஆரம்பம் – விதுரன் 

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில், அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம், ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பணிகளை முன்னெடுத் துள்ளதாக அறிவித்துள்ளது.
பிரதமர் கலாநிதி.ஹரிணி அமரசூரிய பாராளுமன்றில் முதன்முதலாக புதிய அரசியல மைப்பு சீர்திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப் பட்டதாக அறிவித்தார். அதில் கூட மயக்கமான நிலைமை தான். புதிய அரசியலமைப்பு பணியா அல்லது அரசியலமைப்பு சீர்திருத்தமான என்பதில் தெளி வில்லை.
இந்த விடயத்தினை மையப்படுத்தி ஜே.வி.பி.தலைமையிலான அரசாங்கம் புதிய அரசியமைப்புக்கான பணிகளையோ அல் லது, சீர்திருத்தத்துக்கான பணிகளையோ முன் னெடுக்குமாக இருந்தால் அதற்கான திரை மறைவு நோக்கங்களை இம்மாதத்தின் 2ஆம் திகதியன்று வெளியான இலக்கு வாரஇதழ்  ‘மீண்டும் அரசியலமைப்பு’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார அரசியலமைப்பு பணிகள் வினைத்திறனாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளார். ஆனால் அந்தப் பணிகள் எங்கு நடைபெறுகின்றது என்பதை கூறுவதற்கு அவர் மறுத்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்வதற்கு மாறாக ‘மக்களின் அபிலாசைகளை’ நிறைவேற்றுவதாகவும், ‘யாப்புருவாக்கப் பணிகள் வினைத்திறனான முறை யில் மேற்கொள்ளப்படுவதாகவும்’ கூறுகிறது.
அரசாங்கத்தின் இத்தகைய இரகசியத் தன்மை, அதன் நோக்கம் குறித்து பல சந்தேகங்களை எழுப்புகிறது. புதிய அரசியலமைப்பொன்றின் உருவாக்கத்தில் வெளிப்படைத்தன்மை ஏன் அவசியம் என்பதையும், சிறுபான்மை மக்களின் உரிமைகளை உள்ளடக்குவதில் உலக நாடுகள் எவ்வாறு வெற்றிகரமாகச் செயற்பட்டுள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
ஒரு நாட்டின் அரசியலமைப்பு என்பது அதன் சட்டங்களுக்கு எல்லாம் மேலான உயர்ந்த சட்டம். அது மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை வரையறுக்கிறது. எனவே, அத்தகையதொரு ஆவணத்தை உருவாக்கு வது என்பது ஒரு சிலரின் அல்லது குழுவொன்றின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு உட்பட்டதாக இருக் கக்கூடாது. அவ்வாறு இருக்கவும் முடியாது.
அரசியலமைப்பு உருவாக்கம் என்பது பொது விவாதங்களுக்கும், அனைத்துத் தரப்பி னரின் பங்களிப்புக்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும். ஆனால் அநுர அரசாங்கம் புதிய அரசியலமைப்புருவாக்கப் பணிகளை இரகசிய மாக வைத்திருப்பது, மக்களின் நம்பிக்கையைக் குறைப்பதுடன், அதன் உண்மையான நோக்கங்கள் குறித்து சந்தேகங்களை வலுவாக ஏற்படுத்துகிறது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகள் சட்டவாக்க சபையான பாராளு மன்றத்தில் அனைத்து தரப்புக்களையும் உள்ளடக்கியதாக உரிய நடவடிக்கைகள் மூலமாக முன்னெடுக்கப்
படாமையானது, ஜனநாயக மரபுகளுக்கு முரணா னது.
உலகம் முழுவதும் பல நாடுகள் புதிய அரசியலமைப்பை உருவாக்கும்போது வெளிப் படைத்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித் துள்ளன. உதாரணமாக, தென்னாப்பிரிக்காவின் அரசியலமைப்பு உருவாக்கமொரு சிறந்த உதாரண மாகும்.
நிறவெறிக் கொள்கை முடிவுக்கு வந்த பின்னர், ஜனநாயக அரசியலமைப்பை உரு வாக்குவதற்கு பரந்த மக்கள் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதற்காக, ஒரு அரசியலமைப்பு சபை அமைக்கப்பட்டு, அது நாட்டின் அனைத்து சமூகங்களையும், கட்சிகளை யும், தொழிற்சங்கங்களையும், சிவில் சமூக அமைப்புகளையும் உள்ளடக்கியிருந்தது.
பொதுமக்கள் கருத்துக்களைக் கேட்பதற் காக நாடு முழுவதும் பொது விவாதங்கள், கருத்
தரங்குகள் மற்றும் ஊடகக் கலந்து ரையாடல்கள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக, தென்னாப் பிரிக்காவின் அரசி யலமைப்பு அனைத்து சமூகத் தினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, வலுவான மற்றும் நிலைத்தன்மையுள்ளதொரு ஆவணமாக உருவெடுத்தது.
இவ்வாறான நிலையில் இரண்டாவது முக்கியமான விடயம் இலங்கையில் உள்ள சிறு பான்மை தமிழ் மக்களின் நீண்டகால தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாகும். இலங்கையைப் பொறுத்தவரை, சமஸ்டி முறைமைக்கான கோரிக்கை என்பது தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசையாக உள்ளமை வரலாறு. ஆனால், இந்த கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. சமஸ்டி என்பது அதிக செறிவு நிறைந்த விடயமாகவே இன்னமும் பார்க்கப்படுகின்றது.  அவ்வாறான நிலையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளில் தமிழ் மக்களின் அபிலாசைகளை எவ்வாறு உட்புகுத்துவது என்பதற்கு அப்பால் அதுபற்றிய உரையாடலை எவ்வாறு ஆரம்பிப்பது என்பதே தற்போது பெருங்கேள்வியாக மாறியுள்ளது.
சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, தேசிய ஒருமைப்பாட்டை உறுதி செய்துள்ள பல உலக உதாரணங்கள் உள்ளன. கனடா ஒரு சிறந்த உதாரணமாகும். கியூபெக் மாகாணத்தில் உள்ள பிரெஞ்சு மொழி பேசும் மக்கள், தமது மொழி மற்றும் கலாசார உரிமைகளைப் பாது காப்பதற்காக ஒரு தனித்துவமான நிலையை அனு பவிக்கின்றனர். கனடாவின் அரசியலமைப்பு, மொழி உரிமைகளையும், மாகாணங்களுக்கு பரந்த அதிகாரங்களையும் வழங்கியுள்ளது.
இது கனடாவை ஒரு பலமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாடாக நிலை நிறுத்தியுள்ளது. அதேபோல, சுவிட்சர்லாந்து ஒரு கூட்டாட்சி முறைமையைக் கொண்டுள்ளது. அங்கு ஒவ்வொரு மாகாணமும் தமது சொந்த சட்டங் களையும், நிர்வாகத்தையும் கொண்டுள்ளன. அங்கு ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் இத்தாலிய மொழி பேசும் சமூகங்கள் அமைதியான முறையில் ஒன்றாக வாழ்வதற்கு உதவியுள்ளது.
இந்த உதாரணங்கள் மூலம், அரசியல மைப்பு சீர்திருத்தம் என்பது வெறும் நிர்வாக கட்டமைப்பை மாற்றுவது மட்டுமல்ல, அது நாட்டின் அனைத்து சமூகங்களின் உரிமைகளையும், அபிலாஷைகளையும் அங்கீகரித்து, அவற்றைப் பாதுகாப்பது என்பதற்கு உதாரணமாக உள்ளது.
தமிழ் மக்களின் சமஷ்டிக் கோரிக்கைகளை கவனத்தில் கொள்ளாமல், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமானால், அது மீண்டுமொருமுறை அரசியல் ஸ்திரமின்மைக்கும், சமூகப் பிரிவினைக் கும் வழிவகுக்கும். அது அநுர அரசாங்கம் செய்யும் வரலாற்றுத் தவறாகவே அமையும். நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்காரவின் கூற்றுக்கள், அரசாங்கத்தின் நோக்கங்கள் குறித்து பல கேள்விகளை எழுப்புகின்றன. ‘எதிர்க்கட்சிகளின் அரசியல் பேசுபொருளுக்காக அரசியலமைப்புப் பணிகளை முன்னெடுக்க முடியாது’ என்று அவர் கூறுகிறார். ஆனால், அரசியலமைப்பு சீர்திருத்தம் என்பது எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு இல்லாமல் நிறைவேற்றப்பட முடியாதவொரு விடயம்.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அநுர அரசாங்கம் பெற்றுக் கொண்டாலும், அரசியலமைப்பை ஜனநாயக ரீதியில் நிறைவேற்றுவதற்கு அனைத்துத் தரப்பின ரின் ஆதரவும் அவசியம்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதற்கான கோரிக்கையை நிராகரிப்பது, அரசாங்கம் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இல்லை என்பதையும், இரகசியமான முறையில் தனது நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற முற்படுகிறது என்பதையும் காட்டுகிறது.
‘மக்களின் அபிலாஷைகளை நிறை வேற்றுவோம் ’ என்று அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். ஆனால், ‘மக்களின் அபிலாஷைகள்’ என்பது யார்? இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களையும், குறிப்பாக நீண்டகாலமாக அரசியல் உரிமைகளுக்காகப் போராடிவரும் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் சமூகங்களின் அபிலாஷைகளையும் இது உள்ளடக்கியுள்ளதா? அல்லது பெரும்பான்மை மக்களின் அபிலாஷைகளை மட்டும் உள்ளடக் கியுள்ளதா? இந்த விடயங்களில் தெளிவின்மை காணப்படுகிறது.
இந்த இரகசியமான அணுகுமுறை, தமிழ் மக்களுக்கு எதிராக மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக நாட்டின் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான ஒரு நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் கொண்டிருக்கலாம் என்ற அச்சத்தை வெகுவாகத் தோற்றுவிக்கிறது.
இந்த நிலையில் தமிழினம் இந்த விடயத்தினை தவிர்க்க முடியாது கையாள வேண்டியுள்ளது. முதலில் புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகள் பற்றிய தகவல்களை திரட்டி அரசாங்கத்துடன் உரையாடல்களை ஆரம்பிப்பதற் காக நகர வேண்டியுள்ளது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அடிப்படையானது, அதிகாரப் பகிர்வு மறுக் கப்பட்டமையே என்பதை சர்வதேச சமூகத்திற்கும், உள்ளுர் மக்களுக்கும் மீண்டும் எடுத்துரைக்க வேண்டும். சமஷ்டி முறைமை எவ்வாறு தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும், தேசிய அடையாளத்தையும் பாதுகாக்கும் என்பதைத் தெளிவாக விளக்க வேண்டும் என்ற வரலாற்றுத் தர்க்கத்தை சுட்டிக்காண்பிக்க வேண்டியுள்ளது.
சமஷ்டி முறைமை ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டைக் குலைக்காது, மாறாக, பல்வேறு சமூகங்களை உள்ளடக்கி, தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் கருவி என்பதை கனடா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளின் உதாரணங்களைக் கொண்டு நிரூபிக்கப்பதற்கான அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்த வேண்டும்.
தமிழினத்தின் பிரதிநிதிகள் அனைவரும் ஒருமித்த குரலில் பேசக்கூடிய ஒரு பலம் வாய்ந்த கூட்டமைப்பை உருவாக்குவது மிக அவசியம். தமிழ்த் தேசியக் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் புலம்பெயர் சமூகத்தின் பிரதிநிதிகள் அனைவரும் பொதுவான நிலைப்பாட்டை எடுத்து, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கோரிக்கைகள் குறித்து அனைத்துத் தரப்பினருக்கும் இடையே ஒருமித்த கருத்து இருக்க வேண்டும். இது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது, பலவீனமான விடயங்கள் புதிய அரசியல மைப்புக்குள் உள்வாங்கப்படுதலை தடுக்கும்.
புலம்பெயர் சமூகத்தின் உதவியுடன், சர்வதேச நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் அமைப்புகளின் ஆதரவைத் திரட்டி, அரசியலமைப்புச் சீர்திருத்தங்களில் வெளிப்படைத்தன்மையையும், தமிழ் மக்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்த சர்வதேச அழுத்தங்களை உருவாக்க வேண்டும்.
கடந்தகாலங்களில் நடந்த தவறுகளை மீளவும் செய்யாமல் கவனமாகச் செயற்பட வேண்டும் என்பதோடு கடந்த காலங்களில் தனிப்பட்ட தலைவர்கள் அரசாங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் தோல்வியடைந் தன. எனவே, முழு தமிழினத்தையும் பிரதிநி தித்துவப்படுத்தும் ஒரு கூட்டமைப்பின் ஊடாக மட்டுமே எந்தவொரு உடன்பாடும் செய்யப்பட வேண்டும்.
வெறுமனே சமஷ்டிக் கோரிக்கையை முன்வைக்காமல், அதிகாரப் பகிர்வுக்கான திட்டவட்டமான நடைமுறையில் சாத்தியப் படக்கூடியவாறான புதிய வரைவை உருவாக்கி அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அது, நிதி அதிகாரம், காணி அதிகாரம், சட்டம் ஒழுங்கு போன்ற விடயங்களில் தமிழினத்தின் பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்தும் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
ஒட்டுமொத்தமாக புதிய அரசியல மைப்புச் செயற்பாடுகளைத் தமிழினம் கையாள் வது என்பது, கடந்தகால அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்டு, ஒற்றுமையுடனும், தந்திரோபா யத்துடனும், வெளிப்படைத்தன்மையுடனும், சர்வதேச ஆதரவுடனும் செயற்படுவதில் தான் தங்கியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு கண்டுபிடித்த புதிய மருந்துகள்

மருந்து எதிர்ப்பு கோனோரியா மற்றும் MRSA ஆகியவற்றைக் கொல்லக்கூடிய இரண்டு புதிய சாத்தியமான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை செயற்கை நுண்ணறிவு கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சி யாளர்கள் கடந்த வியாழக்கிழமை (14) தெரிவித்துள்ளனர்.
இந்த மருந்துகள் செயற்கை நுண்ணறிவால் அணுவுக்கு அணுவாக வடிவமைக்கப்பட்டு, ஆய்வக மற்றும் விலங்கு சோதனைக ளில் எதிர்ப்பு சக்தியுள்ள தொற்று நோய்க்கிருமிகளை அழித்துள்ளன.
இரண்டு மருந்துகளும் பரிந்துரைக்கப்படுவதற்கு முன்பு இன்னும் பல ஆண்டுகள் சுத்தி கரிப்பு மற்றும் மருத்துவபரி சோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள் ளன.
ஆனால், அதன் பின்னணியில் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் குழு, AI ஆண்டிபயாடிக் கண்டுபிடிப்பில் “இரண்டாவது பொற்காலத்தை” தொடங்கக்கூடும் என்று கூறுகிறது.நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பாக்டீரியாவைக் கொல்லும், ஆனால் சிகிச்சையை எதிர்க்கும் தொற்றுகள் இப்போது ஆண்டுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளை ஏற் படுத்துகின்றன.
நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை அதிகமாகப் பயன்படுத்துவது, மருந்துகளின் விளைவுகளைத் தவிர்க்க பாக்டீரியாக்கள் உருவாக உதவியுள்ளது, மேலும் பல தசாப்தங் களாக புதிய நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் பற்றாக்குறை உள்ளது.
புதிய நுண்ணுயிர் எதிர்ப்பிகளாக மாறக் கூடிய சாத்தியக்கூறுகளைக் கண்டறியும் முயற்சியில், ஆயிரக்கணக்கான அறியப்பட்ட இரசாயனங்களை ஆராய, ஆராய்ச்சியாளர்கள் முன்பு செயற்கை நுண்ணறிவைப் பயன் படுத்தியுள்ளனர்.
இப்போது, ஒரு படி மேலே சென்று, பாலியல் ரீதியாக பரவும் கோனோரியா தொற்று மற்றும் ஆபத்தான MRSA ஆகியவற்றிற்கு முதலில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை வடிவமைக்க, ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவைப் பயன் படுத்தியுள்ளது.
செல் இதழில் வெளியிடப்பட்ட அவர்களின் ஆய்வு, இல்லாத அல்லது இன்னும் கண்டு பிடிக்கப்படாத மருந்துகள் உட்பட 36 மில்லியன் மருந்துகளை ஆய்வுக்குட்படுத்தியுள்ளது.

இலங்கையை இன்னமும் கண்காணிப்பது அவசியம்!

இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்த கட்டமைப்பு ரீதியான காரணிகள் இன்றும் தொடர்வதை ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய மனித உரிமைகள் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தின் அவசியத்தை இந்த அறிக்கை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

இவ்வாறு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதிப்பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:-
அடுத்த மாதம் ஜெனிவாவில் நடக்கவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை முன்னிறுத்தி இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்த அறிக்கை, இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பாக ஒரு கவலைக்குரிய சித்திரத்தை முன்வைப்பதுடன், சர்வதேச சமூகம் ஏன் இலங்கை விடயத்தில் தனது கண்காணிப்பைத் தளர்த்தக்கூடாது என்பதற்கான ஓர் எச்சரிக்கை மணியாகவும் உள்ளது.

ஐ.நா. அறிக்கை குறிப்பிடும் கட்டமைப்பு ரீதியான காரணிகள் தற்காலிகப் பிரச்சினைகள் அல்ல. அவை நாட்டின் நிர்வாக சட்ட மற்றும் பாதுகாப்பு இயந்திரங்களில் ஆழமாக வேரூன்றியுள்ள நீண்டகாலப் பிரச்சினைகளாகும். சர்வதேசக் கண்டனங்கள் இருந்த போதும், தன்னிச்சையான கைதுகளுக்கும், சித்திரவதைகளுக்கும் வழிவகுக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் முழுமையாக நீக்கப்படவில்லை.

போர்க்குற்றங்கள் மற்றும் பெரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மீது நம்பகரமான விசாரணைகள் இன்றி, அவர்கள் தொடர்ந்தும் பதவிகளில் நீட்டிக்கப்பட்டுள்ளனர். கடந்தகால மீறல்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான முயற்சிகள் இல்லாமை மற்றும் உள்நாட்டு நீதிப்பொறி முறைகள் தோல்வியடைந்தமை என்பன சர்வதேசத்தின் தலையீட்டை வலியுறுத்துகிறன.

ஐ.நா. ஆணையாளரின் பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் என்பது, இலங்கையில் இடம்பெற்றன என்று கூறப்படும் பெரும் மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்து, பாதுகாத்து, பகுப்பாய்வு செய்யும் ஒரு சர்வதேசப் பொறிமுறையாகும். இலங்கை இத்தகைய சர்வதேசப் பொறிமுறைகளைத் தொடர்ச்சியாக நிராகரித்து, நாட்டின் இறைமையில் தலையிடுவதாகக் குற்றம் சுமத்துகிறது.

எதிர்வரும் ஜெனிவாக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான ஒரு புதிய தீர்மானத்தின் மூலம் பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தை மேலும் வலுப்படுத்தவும், அதன் ஆயுள்காலத்தை நீடிக்கவும் சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை இந்த அறிக்கை வலுப்படுத்துகிறது. இலங்கையின் கட்டமைப்பு மாறாத வரை, சர்வதேசத்தின் கண்காணிப்பும் தளரக்கூடாது – என்றார்.

அமெரிக்க – ரஸ்ய பேச்சுக்குறித்து ஐரோப்பா கவலை

அமெரிக்க அதிபர் டொனா ல்ட் ட்ரம்ப் அலாஸ்காவில் ஒரு “மோசமான ஒப்பந்தம்” செய்து, ராஜதந்திர வெற்றியை அறிவிக்கலாம் என்று ஐரோப்பிய தலைவர்கள் கவலைப்படுகிறார்கள் என தி எகனாமிஸ்ட் என்ற ஊடகம் கடந்த வியாழக்கிழமை (14) தெரிவித்துள்ளது.
உக்ரைனையும் அதன் நட்பு நாடுகளையும் ஒரு மீளமுடியாத நிலைக்கு இந்த உடன்பாடு கொண்டுசெல்லக்கூடும். ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடனான ட்ரம்பின் இந்த வாரம் இடம்பெற்ற காணொளி உச்சிமாநாட்டிற்குப் பிறகும், ஜெலென்ஸ்கியால் செயல்படுத்த கடினமாக இருக்கும் ஒரு பிராந்திய பரிமாற்றத்தை அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்துகிறார் என்று உக்ரைனின் நட்பு நாடுகள் கவலைப்படுகின்றன.
ட்ரம்பின் சமீபத்திய அணுகுமுறை மாற்றத்தில், அவரது ரியல் எஸ்டேட் வணிக கூட்டாளியான விட்காஃப் முக்கிய பங்கு வகித்துள்ளார். விட்காஃப் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு பெரிய ஒப் பந்தத்தை ஆதரிக்கிறார். பேச்சுவார்த்தைகளில் அவர் ஈடுபடுவது பொதுவாக உக்ரைனுக்கு தீங்கு விளைவிக்கும். எப்படியோ, ரஷ்யா தனது வசம் வைத்திருக்கும் பிரதேசங்களின் மீதான கட்டுப்பாட்டை அங்கீகரிப்பது குறித்த விவாதம், ரஷ்யாவிடம் இன்னும் அதிகமான பிரதேசங்களை ஒப்படைப்பது பற்றிய பேச்சு வார்த்தைகளாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரேனிய துருப்புகள் இருந்தது முதல், நிலப்பரிமாற்றக் கருத்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது, உக்ரைன் குர்ஸ்க் பிராந்தியத்திலிருந்து கிட்டத்தட்ட முற்றிலுமாக வெளியேற்றப்பட்டதால், இந்த திட்டம் சர்ச்சைக் குரியதாக மாறியுள்ளது.
இருப்பினும், பரிமாற்றக் கருத்து வாஷிங்டனில் தொடர்ந்து வாழ்வதாகத் தெரி கிறது. சமீபத்திய உக்ரேனிய திட்டங்களில் ஒரு தெளிவான நிபந்தனை இருப்பதாக வட்டாரங்கள் கூறுகின்றன. பிராந்திய சலுகைகள் குறித்த எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் முன்னதாக முழுமையான போர்நிறுத்தம் இருக்க வேண்டும் என்பதே அது. ஆனால், உக்ரைனை அதன் சொந்த பிரதேசத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கிய ஒரு எதிர்த்திட்டத்தை முன்வைக்க அழைப்பு விடுக் கும் அமெரிக்கர்களுக்கு இது போதாது,” என்று தி எகனாமிஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

ட்ரம்பின் நடைவடிக்கையால் திணறும் கார் நிறுவனங்கள்

அமெரிக்க அதிபர் டொனா ல்ட் ட்ரம்பின் வரிக் கொள்கைகளால் அமெரிக்க கார் விற்பனை சரிவைச் சந்திக்க ஆரம்பித்துள்ளது. இது கார் உற்பத்தி யாளர்களை கடுமையாக பாதிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த மாதம் காக்ஸ் ஆட்டோமோட்டிவ் வெளியிட்ட தரவுகளின்படி, புதிய கார் விற் பனை கடந்த ஜூன் மாதம் 15.6 மில்லியனில் இருந்து 15.3 மில்லிய னாக, அதாவது 300,000 கார் விற்பனை குறைந்துள்ளது.
தேவைக்கு மீறிய செலவு மற்றும் விலைகள் உயர்ந்துள்ளன. நுகர்வோர் அந்த அதிக விலைகளுக்கு பணம் செலுத்தும் மன உறுதியைக் கொண்டிருக்கவில்லை என்பதால், அவர்கள் கொள்முதல் செய்வதில் இருந்து பின்வாங்கு கின்றனர் என ஜார்ஜியா மாநிலத்தின் ராபின்சன் வர்த்தகக் கல்லூரியின் விநியோகச் சங்கிலி மேலாண்மை உதவிப் பேராசிரியர் ஜினோ கோலாரா அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபரின் வரிக் கொள்கைகள் மீதான ஒழுங்கற்ற அணுகுமுறை, சிலவற்றை நடைமுறைப்படுத்தி பின்னர் அவற்றை நீக்குவது போன்ற நடவடிக்கைகள் வர்த்தகத் திட்டமிடலில் சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம், ஸ்டெல்லாண்டிஸ், போர்ட் மற்றும் வோல்வோ போன்ற கார் நிறுவனங்கள் இந்த நிச்சயமற்ற தன்மை காரணமாக தங்களது நிதித் திட்டமிடலை நிறுத்தி வைத்திருந்தன.
இரண்டாவது காலாண்டில் வரிகள் காரணமாக 1.2 பில்லியன் டாலர்களை இழந்ததாக வோல்வோ நிறுவனம் கடந்த மாதம் தெரிவித்தது. போர்ட் நிறுவனமும் கடந்த காலாண்டில் 800 மில்லியன் டாலர்களை இழந்துள்ளது. எனவே இந்த ஆண்டு அது 3 பில்லியன் டாலர்களை இழக்கலாம் என தெரிவித்துள்ளது. ஜி.எம். நிறுவனம் தனது இழப்பு 5 பில்லியன் டாலர்கள் என தெரிவித்துள்ளது. ஜப்பானின் டொயோட்டா நிறுவனம் 9.5 பில்லியன் டாலர்களை இழக்கலாம் என தெரிவித்துள்ளது.
மே மாதத்தில், ஃபோர்டு நிறுவனம் மெக்சிகோவில் தயாரிக்கப்படும் அதன் சில கார்களின் விலையை உயர்த்த வேண்டியிருக்கும் என்று அறிவித்தது. இதில் மஸ்டாங் மேக்-ஈ எலக்ட்ரிக் எஸ்யூவி, மேவரிக் பிக்-அப் டிரக் மற்றும் ப்ரான்கோ ஸ்போர்ட் போன்றவை அடங்கும். சில சந்தர்ப்பங்களில் $2,000 வரை விலை உயர்த்தப்படலாம் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை கடந்த ஆண்டை விட 2.3 சதவீதம் அதிகரித்துள்ளது என எட்மண்ட்ஸின் ஆட்டோமோட்டிவ் துறை நுண்ணறிவு தளமான கோஸ்டு கார் இன்டெக்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால்

முத்தையன்கட்டு இளைஞன் மரணம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் திங்கட்கிழமை (18) காலை முதல் மதியம் வரை பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது.

இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த ஹர்த்தாலுக்கு அரசியல் கட்சிகள்,சிவில் அமைப்புக்கள் மற்றும் வணிக பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் முழுமையான ஆதரவு வழங்குகின்றனர்.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் முழுமையாக முடங்க வேண்டும்.அதனுடாக அரசாங்கத்துக்கு வலுவான செய்தியை எடுத்துரைக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுமக்களிடம் வலியுறுத்துகிறது.

முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய இளைஞனின் சடலம் கடந்த 8 ஆம் திகதி முத்தையன்கட்டு குளத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டது.முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த இளைஞர்களை இராணுவத்தினர் ஆகஸ்ட் 7 ஆம் திகதி முத்தையன்கட்டு முகாமிற்குள் அழைத்துச் சென்றதாகவும், இராணுவத்தினரால் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாகவும்,அதனால் ஒரு இளைஞர் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு ‘முத்தையன்கட்டு முகாமிற்குள் ஒருதரப்பினர் அனுமதியின்றி சென்றதாகவும், அவர்களை விரட்டியடிக்கும் போது ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக குறிப்பிட்டு,.இந்த சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணைகளை மேற்கொள்வதாக’குறிப்பிட்டிருந்தது.

முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடிகொண்டுள்ள இராணுவ பிரசன்னத்துக்கும், இளைஞனின் மரணத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தது.இந்த தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதிக்கு எழுத்துமூலமாக அறித்து கடந்த 15 ஆம் திகதி ஹர்த்தாலில் ஈடுபட அறிவித்திருந்தது.

இருப்பினும் பல்வேறு நியாயமான காரணிகளால் ஹர்த்தால் இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த பூரண ஹர்த்தாலுக்கு பாராளுமன்றத்தை பிரதிநிதிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள், சிவில் தரப்பினர்,வணிக அமைப்பினர் முழுமையாக ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

இதற்கமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் காலை முதல் மதியம் வரை பூரண ஹர்த்தாலில் அமுல்படுத்தப்படுகிறது.பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஹர்த்தாலில் ஈடுபடுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி சகல தரப்பினரிடமும் வலியுறுத்துகிறது.