Home Blog Page 4

இந்திய கடற்படைத் தளபதி பிரதமரைச் சந்தித்தார்

இலங்கைக்கு வருகை தந்த இந்திய கடற்படைத் தளபதி, Admiral Dinesh K Tripathi, செவ்வாய்க்கிழமை (23) பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை சந்தித்தார்.

இந்திய கடற்படைத் தளபதி மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் நீண்டகால நட்புறவை வலுப்படுத்துதல் உள்ளிட்ட இரு தரப்பினருக்கும் முக்கியமான பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் உள்ளிட்ட சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் கூட்டு அணுகுமுறையுடன் செயற்படுவதன் முக்கியத்துவமும் பற்றி வலியுறுத்தப்பட்டது. மேலும், இந்நாட்டு கடற்படை அதிகாரிகளுக்கான பயிற்சி வாய்ப்புகளை இந்திய அரசாங்கத்தினால் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை கடற்படை 12ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யும் காலி கலந்துரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு – 2025 இல் கலந்துகொண்டதன் பின்னர், 2025 செப்டம்பர் 25ஆம் திகதி இந்திய கடற்படைத் தலைவர் Admiral Dinesh K Tripathi மீண்டும் நாடு திரும்ப இருக்கின்றார்.

இச்சந்திப்பில் இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரீ, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் தெற்காசிய மற்றும் SARCC பிரிவின் பணிப்பாளர் நாயகம் சமந்த பத்திரண ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்காவின் திறனுக்கு அருகில் கூட இல்லை: அதிபர் டிரம்ப் தெரிவிப்பு

காஸாவில் சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்த தான் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக பேச்சுவார்த்தை நடத்தும் தரப்பினர் அது நடக்க பணியாற்ற வேண்டும்என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இன்று ஐ.நாவில் அவர் ஆற்றிய உரையில்,

சமீபத்தில் பல அதிகாரமிக்க நாடுகள் பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. அந்த நடவடிக்கை ஹமாஸின் கொடுமைகளுக்கான வெகுமதியாக இருக்கும்.

அமைதியை விரும்புபவர்கள், ‘பணயைக்கைதிகளை இப்போதே விடுவிக்க வேண்டும்’ என்ற ஒற்றைச் செய்திக்கு பின்னால் இணைய வேண்டும் என்றார்.

ஐநாவையும் விமர்சித்தார். அவர் கூறுகையில், போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் “ஐநா எங்களுடன் இல்லை.’ “ஐநாவின் நோக்கம் என்ன?” என அவர் ஐநா பொதுச்சபையை நோக்கி கேள்வியெழுப்பினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபைக் கூட்டத்தொடருக்குக் கூடியிருந்த உலகத் தலைவர்களிடம், டொனால்ட் டிரம்ப் போரை நிறுத்துவது தொடர்பான தன் கூற்றுகளை மீண்டும் வலியுறுத்தினார்.

அவர் கூறுகையில், “எப்போதும் முடிவுறாது என கருதப்பட்ட ஏழு போர்களை வெறும் ஏழு மாதங்களில் நான் நிறுத்தியுள்ளேன். அதில் இரண்டு போர்கள் 31 ஆண்டுகளாக நடந்தன. ஒரு போர், 36 ஆண்டுகளாக நடந்தது. மற்றொரு போர் 28 ஆண்டுகளாக நடந்தது. அதில் தாய்லாந்து-கம்போடியா, கொசோவா-செர்பியா, காங்கோ-ருவாண்டா, பாகிஸ்தான் – இந்தியா, இஸ்ரேல்-இரான், எகிப்து-எத்தியோப்பியா மற்றும் அர்மேனியா-அஸர்பைஜான் ஆகியவை அடங்கும்.” என கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபை தங்கள் நாட்டின் திறனுக்கு அருகில் கூட இல்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.

ஐ.நா.வில் புதிய வரைவு யாருக்கு வெற்றி  – விதுரன் 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வையின் 60ஆவது அமர்வு நடைபெற்று வருகையில், பிரித்தானியா தலைமையில் கனடா, மாலாவி, மொன்டேனெக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் ‘இலங்கையில் மனித நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்’ எனும் தலைப்பில், இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் வரைவு (A/u;RC/60/L.1) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வரைவானது, 2027 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறும் 66ஆவது அமர்விலேயே இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதால் அதுவரை  இலங்கைக்கு காலஅவகாசத்தை அளிக்க வேண்டும் என்று கூறுகின்றது.
அதற்கிடையில், பேரவையின் 61ஆவது மற்றும் 64ஆவது அமர்வுகளில் வாய்மொழி அறிக்கைகளையும், 63ஆவது அமர்வில் எழுத்து மூல அறிக்கையும், 66ஆவது அமர்வில் இறுதி அறிக்கையையும், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ் தானிகர் அலுவலகம் சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்த வரைவு கால அட்டவணையை குறிப் பிட்டுள்ளது.
கடந்த கால தீர்மானங்களின் தொடர்ச்சி யாக, கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த வரைவு பொதுப்படையில் ‘ஆகக்குறைந்த மென்மை யான உள்ளடக்கப் பெறுமானங்களைக் கொண்டிருக் கின்றபோதும்’ பெரும் விவாதங்களுக்கு உள்ளாகி யுள்ளது.
குறித்த வரைவு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட ஆணையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்குமாறு கோருகின்ற நிலையில் ஆணை வழங்கும் காலப்பகுதி எவ்வாறாக இருப்பினும் முதலில் குறித்த வரைவை மையப்படுத்திய தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்பதில் நிச்சய மற்ற நிலைமை காணப்படுகிறது.
ஏனெனில், இலங்கையில் ஆட்சிக்கு வந்துள்ள ஜனாதிபதி அநுரகுமார தலைமையி லான புதிய அரசாங்கம் ‘உள்நாட்டுப் பொறி முறைகள்’ மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கலாம், பொறுப்புக்கூறல் செய்யப்படலாம் என்று உறுதி யளித்துள்ளதால், பல நாடுகள் அந்த வாக்குறுதியை நம்புவதற்குக் தயாராக இருக்கின்றன. இது இலங்கை மீதான புதிய தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டுவதில் சவாலான நிலைமையை தோற்று வித்துள்ளது.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் மொத்தம் 47உறுப்பு நாடுகள் வாக்களிக்க தகுதி பெற்றவையாக உள்ளன. அவற்றில், 13 நாடுகள் வரை மட்டுமே இலங்கைக்கு நேரடியாக ஆதர வளிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவை ஆசிய-பசுபிக், ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளாக இருக்கலாம் என்பதும் எதிர் பார்ப்புத்தான்.
பல நாடுகள், தாங்கள் எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்ற அச்சத்தில் இலங்கைக்கு ஆதரவாக நிற்கின்றன. இது தீர்மானத்தை நிறைவேற்ற விரும்பும் நாடுகளுக்கு பெரும் தடையாக உள்ளது.
பிரேரணையைக் கொண்டுவருவதற்கு இணை அனுசரணை வழங்கும் நாடுகளின் தலைமையாளரான பிரித்தானியாவும் கனடாவும் கூட அமெரிக்காவின் ஆதரவை எதிர்பார்க்கின்றன. ஆனால், அமெரிக்கா தற்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கவில்லை.  இது இணை அனுசரணை நாடுகளின் இராஜதந்திர பலத்தை வெகுவாகக் குறைக்கிறது. இருப்பினும், பிரித்தானியா தம்மால் கொண்டு வரப்பட்ட வரைவு தீர்மானமாக நிறைவேற்றப் படும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றது. கள நிலைமையைப் பார்க்கையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இம்முறை இலங்கை குறித்த புதிய பிரேரணையை நிறைவேற்றுவதற்குப் போதிய வாக்குகளைப் பெறுவது கடினமானதாக உள்ளது.
பல நாடுகள் தத்தமது உள்நாட்டுப் பிரச்சி னைகளில் சர்வதேசத் தலையீட்டை விரும் பாததால், இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக் கின்றன. இதனால், குறைந்தபட்சம் ஒரு பிரேர ணையை நிறைவேற்றுவதற்காக, அதன் உள்ளடக் கத்தை நீர்த்துப் போகச் செய்ய வேண்டிய துரதிஷ் டமான நிலைமை தோன்றியுள்ளது.
எவ்வாறாயினும், தீர்மானம் பலவீனமான தாக இருந்தாலும், அது நிறைவேற்றப்படுவது மிக முக்கியம். ஏனெனில், இதுவே ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங் கையின் மனித உரிமை நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பதற்கும் ஆவணப் படுத்து வதற்கும் தீர்மான நிறைவேற்றம் அவசியமானதாகும்.
அவ்வாறில்லாத பட்சத்தில், 2012ஆம் ஆண்டிலிருந்து இலங்கை மீது தொடர்ந்து வரும் கண்காணிப்பு நிறுத்தப்படும், அது இலங்கை யின் பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவாக அமையும். அதேநேரம், இலங்கை யில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் விடயம் சர்வதேச அரங்கிலிருந்தே அகற்றப்பட்டுவிடும் பேராபத்தும் உள்ளது.
அடுத்தபடியாக, புதிய வரைவின் உள்ளட கத்தைப் பார்க்கின்றபோது, பாதிக்கப்பட்ட மக் களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவே உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள், கடந்த தசாப் தங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க சர்வதேச சுயாதீன நீதிமன்றப் பொறிமுறை நிறுவப்பட வேண்டும் என்றே நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.
அத்தகைய பொறிமுறையில், சர்வதேச வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் ஆய்வாளர்கள் உள்ளடங்குவர். பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறைகளின் மீது நம்பிக்கை இல்லாத நிலைமையே உள்ளது.
இலங்கையின் நீதித்துறை மற்றும் சட்ட அமுலாக்கல் துறைகள் வெகுவாக ஆட்சியில் உள்ள மற்றும் எதிரணியில் உள்ள அரசியல் தரப்புக்களின் ‘அரசியல் தாக்கங்களுக்கு’ உட்பட் டவை, அவை நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளன. தற்போதும் தவறியே வருகின்றன என்பது பாதிக்கப்பட்ட தரப்பினர் வெளிப்படையாக உறுதிப்படுத்தக்கூடிய நிலைப்பாடாகும். ஆனால், புதிய வரைவானது, இலங்கையி னுள் ஒரு பிரத்தியேக நீதித்துறை பொறிமுறையை நிறுவுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரு கிறது. அதாவது சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலக மொன்றை ஸ்தாபிக்கும் இலங்கை அரசாங்கத்தின் முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாக கூறுகின்றது.
ஆகவே புதிய வரைவில் வலியுறுத்தப் பட்டுள்ள பொறிமுறை, பெரும்பாலும் உள்நாட்டு நீதித்துறை வழிமுறைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இந்த நிலைமையானது, கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தில் அதியுச்சமாகக் காணப்பட்ட ‘சர்வதேச கலப்பு நீதிமன்றம்’ என்ற கோரிக்கையிலிருந்து குறிப்பிடத்தக்க பின் வாங்கலாகும். அதுமட்டுமன்றி, பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை கோரிக்கையிலிருந்தான சர்வதேசத்தின் பாரியதொரு விலகலாகும்.
போரின் பின்னரான இலங்கையின் எந்த அரசாங்கமும் சர்வதேச தலையீட்டை தொடர்ச்சி யாகவும் கடுமையாகவும் எதிர்த்தே வந்திருக் கின்றன. இலங்கையின் இறையாண் மைக்கு உட் பட்டதொரு உள்நாட்டுப் பொறிமுறையே பொறுப் புக்கூறலுக்கு உகந்தது என்பதிலும் உறுதியாகவே இருந்துள்ளன.
இலங்கையின் இந்த நிலைப்பாட்டிற்கு சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் தாராளமான ஆதரவு இலங்கைக்கு உள்ளது. இந்த நாடுகள், உள் விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடுகளை எதிர்ப்பதால், சர்வதேச விசாரணைகள் தொடர்பான தீர்மானங்களுக்கு எதிராக நிற்கின்றன. குறித்த நாடுகளின் மேற்குல எதிர்ப்பும், இலங்கைக்கான ஆதரவும் சர்வதேச சமூகத்தை ‘இராஜதந்திர நெருக்கடிக்குள்’ தள்ளியிருக்கின்றன.
குறிப்பாக, இம்முறை ஐ.நா.மனித உரி மைகள் பேரவையின் அமர்வில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைத் தாண்டி, எரித் திரியா, லாவோஸ் ஆகிய நாடுகளும் பகிரங்கமாக இலங்கைக்கான ஆதரவினை வெளிப்படுத்துவதில் மும்முரமாக இருக்கின்றன.
இதனைவிடவும் தமக்கு ஆதரவாக, பஹ்ரைன், குவைத், ஓமான், கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எதியோப்பியா, ஐவரிகோஸ்ட், பிலிப்பைன்ஸ், ஜப்பான், லாவோஸ், தாய்லாந்து, வனூட்டு, தென்கொரியா, எரித்ரியா, ஈரான், நேபாளம், இந்தியா, சிம்பாப்வே, வியட்நாம், சீனா, அஜர்பைஜான், இந்தோனேசியா, துருக்கி, பெலாரஸ், எகிப்து, வெனிசுவேலா, மாலைதீவுகள், கியூபா, தென்சூடான், சூடான், ரஷ்யா மற்றும் புரூண்டி உள்ளிட்ட 33நாடுகள் இருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறான நிலைமை தோன்றியுள்ளமை யால் தான் இணை அனுசரணை நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சமூகம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், ஒரு முழுமையான சர்வதேசப் பொறிமுறையை வலியுறுத்துவதை விட, இலங்கையுடன் ஒத்துழைத்து, ஒரு உள்நாட்டுப் பொறிமுறையை நிறுவுமாறு கோருவது, நடை முறைக்கு உகந்ததாக இருக்கும் என்று கருதி யிருக்கிறது.
உண்மையில் ஜெனிவாவில் நடைபெற்று வரும் 60ஆவது அமர்வு இலங்கைக்கும், பாதிக் கப்பட்ட மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் முக்கியமான தருணம். ஒவ்வொரு தரப்பும் தமது பிடிமானங்களை தக்கவைப்பதற்காக கடுமையாக உழைக்க வேண்டியதொரு நிலைமை.
ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் பக் கத்திலிருந்து அதற்கான போதுமான முனைப் புக்கள் முன்னெடுக்கப்படவில்லை. லொபி யிங்கிலும் பாரிய பின்னடைவுகளே காணப் படுகின்றன. அரசியல் கட்சிகள், சிவில் சமூகங் கள், பாதிக்கப்பட்ட தரப்பினர், புலம் பெயர் அமைப்புக்கள் ஆகியவற்றுக்குள் காணப்படு கின்ற ‘அக முரண்பாடுகள்’ இந்த மிக மோசமான நிலைமையை தோற்றுவித்துள்ளன என்பதை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.
சர்வதேச சமூகத்தைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக குரல் கொடுப் பதற்கு வரையறைகள் உள்ளன. ‘நாடுகளுக்கும் நாடுகளுக்குமான உறவு’ ‘அரசுக்கும், அரசுக்குமான இருதரப்பு உறவு’ போன்ற பல்வேறு காரணங்கள் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளன. இவற்றையெல்லாம், பயன்படுத்தி, இலங் கையின் புதிய ஆட்சியாளர்கள், சர்வதேசத்தின் தலையீட்டை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதுடன் உள்ளகப் பொறிமுறையை சர்வதேச சமூகத்தால் ஏற்கவும் செய்துள்ளமையானது அவர்களின் வெற்றியே.

சுதந்திரமாக செயற்பட நிதி அவசியம்: தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல்கள் ஆணைக்குழு சுதந்திரமாகச் செயற்பட வேண்டுமானால் அதற்கு நிதி சுதந்திரம் இருக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அவர், தேர்தல் ஆணைக்குழுவின் அதிகார வரம்பு இல்லாததும் பிரச்சினையாக உள்ளதாக தெரிவித்தார்.  இதேவேளை அடுத்த வருடத்துக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்தார்.

அரசாங்கம் முன்வைக்கும் தீர்வை ஏற்றுக்கொள்ள முடியாது : சாணக்கியன்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் இருந்ததை விட மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (23) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ளது.  இந்த ஒருவருட காலப்பகுதிக்குள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு என்னவென்று பார்த்தால் ஒன்றுமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்குச் சென்று சில அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்கள், கொழும்பில் அவசர அவசரமாக சில அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்கள்.
ஒருவருட ஆட்சியில் என்ன செய்தீர்கள் என யாரும் கேட்டால் அவமானப்படாமல் இருக்க அவசர அவசரமாக இந்த அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுகள் இதுவரைக்கும் கிடைக்கவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இராணுவ மூகாம்களை விடுவிப்பத்தாக சொன்னார்கள், வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வைத்திருக்கும் காணிகளை விடுவிப்பதாக சொன்னார்கள் ஆனால் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை.

தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்த அரசாங்கத்தின் தீர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார். யாழ்ப்பாணத்தில் செம்மணியில் மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த விடயத்திற்கு இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைகள் இருந்ததை விட மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றன.

ஏனெனில் கடந்த கால அரசாங்கங்கள் தங்களால் செய்ய முடியாது என்று வெளிப்படையாகச் சொன்னார்கள்.
ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் மீது எங்களுக்கே அதிக கரிசனை இருப்பதாக சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை எதிர்த்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனம்!

எக்ஸ்-பிரஸ் பேர்ள் பேரழிவிற்கு இழப்பீடு வழங்குவதற்கான நீதிமன்ற உத்தரவை அந்த கப்பல் நிறுவனம் மதிக்க மறுப்பது மிகவும் கவலையளிப்பதாக இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் தெரிவித்துள்ளது.

மக்கள், கடற்கரைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்ட சேதங்களின் அளவை மறுபரிசீலனை செய்யவும், சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புக்கான நீதியை நிலைநாட்டவும் குறித்த நிறுவனத்தை இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

எக்ஸ் – பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட கடல்சார் பாதிப்புகளுக்காக இலங்கையின் உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 01 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீட்டைச் செலுத்த முடியாது என்று குறித்த கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த சிங்கப்பூர் கப்பல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை செலுத்தினால், அது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று அவர் கூறியுள்ளார். இழப்பீட்டை செலுத்துவதால், சர்வதேச கப்பல் போக்குவரத்தில் பரந்த அளவிலான தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்று தாம் நம்புவதாகவும் எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடல் எல்லைக்குள் கொழும்பை அண்மித்த பகுதியில், 2021ஆம் ஆண்டு ஜுன் மாதம் எக்ஸ் – பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலினால் நாட்டின் கடற்சூழலுக்கு பாரிய பாதிப்புகள் ஏற்பட்டன.
கப்பலில் கொண்டுவரப்பட்ட 81 கொள்கலன்களில் நைட்ரிக் அமிலம் மற்றும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஈயம் மற்றும் பிளாஸ்டிக் துகள்கள் காணப்பட்டன.

இலங்கை கடல் எல்லைக்குள் வருவதற்கு முன்பு கசிந்த நைட்ரிக் அமிலத்தை இறக்குவதற்கு கத்தார் மற்றும் இந்தியாவில் உள்ள துறைமுகங்கள் குறித்த கப்பலுக்கு அனுமதி வழங்க மறுத்தன.  இந்த நிலையில் அப்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைய குறித்த கப்பல் இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் தனது பயணத்தை முன்னெடுத்தது.

விபத்தின் போது, கப்பலிலிருந்து டன் கணக்கில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இலங்கையின் மேற்கு கடற்கரையில் 80 கிலோமீற்றர் நீளமுள்ள கடற்கரையை மூழ்கடித்தன.  இதனால் பல மாதங்களுக்குக் குறித்த கடற்பிராந்தியத்தில் கடற்றொழிலுக்குத் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் செயற்பாடு சர்வதேச அரங்கில் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் : சஜித்

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட இளைஞர் ஒருவரின் தந்தை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு அளித்த அறிக்கை, இலங்கைக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதியான விசாரணையை வேண்டி நின்கின்றனர். அது நிறைவேறாத நிலையில் ஜெனீவாவில் தற்போது நடந்து வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொல்லப்பட்ட இளைஞர் ஒருவரின் தந்தை, இலங்கையில் நடந்து வரும் விசாரணைகளில் நீதி கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற விடயங்கள் நாட்டிற்குப் பொருத்தமில்லாத விடயங்கள் என்பதால், இங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதேவேளை, பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான அவநம்பிக்கைப் பிரேரணையை நிராகரிப்பதற்கு ஏதுவாக அமைந்த காரணங்களை சபைக்கு சமர்ப்பிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தொடர்பில் எமக்கு தனிப்பட்ட எந்தப் பிரச்சினைகளும் இல்லை. அவர் தற்போது பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றைக் கொண்டு வந்ததன் பின்னர், அதனை நிராகரிப்பதற்கு அடிப்படையாக இருந்த செயலாளர்கள் குழாமின் அறிக்கைகள் மற்றும் சட்டமா அதிபரின் அறிக்கை உள்ளிட்ட ஏனைய விடயங்கள் இந்த சபைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் கோரினார்.

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான தங்கம், மத்திய வங்கியிடம் ஒப்படைப்பு

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் 10,000 தங்கப் பொருட்களில் 6,000 தற்போது இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இந்த தகவலை மன்றுக்கு தெரியப்படுத்தினர். உள்நாட்டு போரின் போதும் அதற்குப் பின்னரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள முகாம்கள், வங்கிகள் மற்றும் கட்டடங்களில் இருந்து மீட்கப்பட்ட இந்த தங்கப் பொருட்கள், நீதிமன்ற உத்தரவின் பேரில் தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் திணைக்களத்திடம் முன்னர் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

தங்கப் பொருட்களின் அளவு மற்றும் எடை உட்பட விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் திணைக்களத்திற்கு நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, நடத்தப்பட்ட ஆய்வுக்குப் பிறகு 6,000 தங்கப் பொருட்கள் இலங்கை மத்திய வங்கிக்கு மாற்றப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பித்தே அவர்கள் இந்தத் தகவலை முன்வைத்தனர்.

மனிதாபிமான நடவடிக்கையின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் உள்ளூர்வாசிகளால் தானாக முன்வந்து விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டன அல்லது அவர்களிடமிருந்து விடுதலைப் புலிகளால் பலவந்தமாக எடுத்துச் செல்லப்பட்டன என்று முன்னர் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விடயங்களைக் கண்டறிய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஜனாதிபதியை படுகொலை செய்ய திட்டம் : அஜித் தர்மபால தகவல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை படுகொலை செய்வத்கான திட்டம் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை  காவல்துறையினரை அரசியலிலிருந்து விடுவிப்பதற்கான சர்வதேச அமைப்பின் உறுப்பினரும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியுமான அஜித் தர்மபால இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நேர்காணலில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அல்லது பாதுகாப்பு பிரிவின் உறுப்பினராக மாறுவேடமிட்ட ஒரு கொலையாளி மூலம் இந்த திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக ஜனாதிபதியின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தத் தகவல் மிகவும் நம்பகமான ஆதாரங்களில் இருந்து பெறப்பட்டதாகவும், அதைப் புறக்கணிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசின் அடக்குமுறைகளை ஒன்றிணைந்து எதிர்ப்போம்: எதிர்க்கட்சிகளுக்கு சஜித் அழைப்பு

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக, நாம் ஒன்றிணைந்து அணிதிரள வேண்டும். மாறாக அமைதியாக இருப்போமானால் அனைத்தையும் இழந்து விடுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஏனைய கட்சிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்குப் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுடனான சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மிகவும் திட்டமிட்டவகையில் இந்த நாட்டில் ஒரு கட்சி மட்டுமே அரசாங்கத்தை அமைத்து ஆட்சியை நடத்தும் எண்ணக்கருவை முன்னெடுத்துவருகின்றது. மரண உதவிச் சங்கம், விவசாயிகள் சங்கம், மீனவர் சங்கம் மற்றும் இளைஞர் கழகம் முதல் மதஸ்தலங்களின் பரிபாலன சபை வரை அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சித்து வருகின்றனர்.

சகல சமூக அமைப்புகளினதும் அதிகாரத்தை வலுக்கட்டாயமாகக் கைப்பற்ற முயற்சித்துவருகின்றனர். எனவே, நாம் அமைதியாக இருந்தால், அரசாங்கம் எல்லாவற்றையும் கைப்பற்றிவிடும். இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் ஒருங்கிணைந்து அணிதிரள வேண்டும். அது நடந்தால், தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்கும் ஒரு கட்சி ஆட்சி என்ற எண்ணக்கருவைத் தோற்கடிக்கமுடியும்- என்றார்.