உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை முற்றாக நிராகரித்து சர்வதேச நீதிப் பொறிமுறையே வேண்டும் என்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் நிறைவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினர் ஐ. நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கான மகஜர் ஒன்றை ஜ.நா. வின் யாழ்ப்பாண அலுவலகத்தில் கையளித்தனர்.
அந்த மகஜரில் உள்நாட்டு விசாரணை பொறிமுறையை முற்றாக நிராகரித்து சர்வதேச நீதிப் பொறிமுறையைக் கோருகின்றோம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
“இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம், உலகளவில் அதிக எண்ணிக்கையிலான காணாமல் போனவர்களைக் கொண்ட ஒரு நாட்டில் நீதிக்கான எங்கள் போராட்டத்தில் உறுதியாக இருந்து வருகிறோம்’. ‘இந்த சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், நீதியை நிலைநாட்டுமாறு சர்வதேச சமூகத்தை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம்’.
‘வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது உலகளவில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் முழு மக்களுக்கும் எதிரான ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகிறது’ என்றும் குறித்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல்கள் இலங்கை போன்ற நாடுகளில் உள்ள சமூகங்களை இலக்கு வைத்து இன ஒடுக்குமுறையின் கருவியாக மாறியுள்ளன. பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல் என்பது மிகவும் நயவஞ்சகமான ஆயுதமாகும்.
இது முழு சமூகத்திற்கும் நீண்டகால துயரத்தையும் உளவியல் சித்திரவதைகளையும் ஏற்படுத்துகிறது என்றும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஈழத்தைப் பொறுத்தவரையில், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் முள்ளிவாய்க்காலில் ஆரம்பிக்கவில்லை.
எமது உரிமைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டே இலங்கை அரசானது ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட இன ஒடுக்குமுறைக் கருவியாக இதனை பாவித்து வந்துள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் உச்சக்கட்டத்தை அடைந்த இலங்கையின் இனப்படுகொலைப் போரின் இறுதிக் கட்டத்தில், 146,679 பேர் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர்,
அவர்களது உறவினர்களால் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் 21,000 க்கும் மேற்பட்டவர்கள் ஒப்படைக்கப்பட்டு பலவந்தமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் ஒரு திட்டமிட்ட தந்திரோபாயமாக இலங்கையால் பலவந்தமாக காணாமல் போகச் செய்தல் நிகழ்த்தப்பட்டுள்ளது என்றும் குறித்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது அவர்களின் திட்டமிட்ட இனவழிப்புக்கு கணிசமாக பங்களித்துள்ளது.
போரின் இறுதிக் கட்டத்தில், 59க்கும் மேற்பட்ட குழந்தைகள் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன் பின்னர் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் என்ன நடந்தது என சர்வதேசத்திடம் நீதி வேண்டி தொடர்ந்து போராடி வருகிறோம்.
இனப்படுகொலையை வரையறுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசை திருப்திப்படுத்துவதும் கால அவகாசம் கொடுப்பதும் எமது மக்களுக்கு ஆழ்ந்த வேதனையை அளிக்கின்றது என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழர் உரிமைப் போராட்டத்தின் போது, வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் உட்பட சரணடைந்தவர்களின் கதி என்ன என்பதை இலங்கை அரசு வெளிப்படுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்து மிக விரைவாக சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் 350க்கு மேற்பட்ட உறவினர்கள் நீதிக்காக போராடும் போது, தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என அறியாமலேயே இறந்துள்ளனர்.
இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழி மன்னாரில் உள்ள சதொச புதைகுழி ஆகும். அங்கு 28 சிறுவர்களின் என்புக் கூடுகள் உட்பட 376 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
இலங்கையில் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியாக தற்போது அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுவரும் செம்மணி சித்துப்பாத்தி புதைகுழி பதிவாகியுள்ளது. வருகின்ற 8ம் திகதி தொடங்கவுள்ள ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் உறவுகளுக்கு சர்வதேச நீதிப்பொறிமுறை ஊடாக உண்மை கண்டறியப்பட்ட பதில் விரைந்து வழங்குவதுடன், பாதிக்கப்பட்டோரின் சாட்சியங்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திட்டமிட்ட இனப்படுகொலை மேற்கொண்ட இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்திடம் பாரப்படுத்தி விசாரணையை ஆரம்பிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரையும் உறுப்பு நாடுகளையும் கோருகின்றோம் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.