Home Blog Page 128

இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்கா – கொந்தளிக்கும் ஈரான்!

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் நடான்ஸில் உள்ள யுரேனியம் செறிவூட்டல் மையத்தின் ஒரு பகுதி அழிக்கப்பட்டதாக சர்வதேச அணுசக்தி நிறுவனத்திடம் ஈரான் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் ஆபரேஷன் ரைசிங் லயன் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேலை பல நீண்ட தூர ஏவுகணைகளால் தாக்கத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவிய இந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க இராணுவம் உதவியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

”இஸ்ரேலில் பொதுமக்கள் வாழும் பகுதிகளை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தி ஈரான் எல்லை மீறிவிட்டது. இந்த கொடூரமான நடவடிக்கைகளுக்கு ஈரான் பெரும் விலை கொடுக்கப்போகிறது.” என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் விமான நிலையத்தின் அருகே மிகப்பெரிய வெடிப்புச்சத்தம் கேட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டமைக்கு விசாரணை கோரி பொலிஸ்மா அதிபருக்கு மனு

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் சரணடைந்த இசைப்பிரியா, பாலச்சந்திரன் பிரபாகரன் உட்பட பலர் கொல்லப்பட்டமை குறித்த போர் குற்றச்சாட்டு விசாரணைகளை கோரி தனுக ரணஞ்சக கஹந்தகமகே எனும் சட்டத்தரணி பொலிஸ்மா அதிபருக்கு மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.
‘சரணடைந்தவர்களை கொன்றது தொடர்பான புகார் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்’ என்ற விடயத்தின் கீழ் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற குறித்த செயற்பாடு கடுமையான சர்வதேச மனிதாபிமான சட்டமீறலை குறிக்கின்றது. இந்த சம்பவங்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் போர்க்குற்றங்களின் கீழ் அடங்கும் என்பதுடன் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் தமது கடிதத்தில் கோரியுள்ளார்.
இசைப்பிரியா மற்றும் பாலசந்திரன் தொடர்பான சம்பவங்கள் போர் நேரத்தில் சரணடைந்தவர்களிற்கான மீறல்களை குறிக்கும் முக்கிய எடுத்துக்காட்டுகளாகும்.

இவர்களின் இறப்புகள் குறித்து விசாரணை செய்யப்படாமல் விடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை பொலிஸ் உண்மை, பொறுப்பு நியாயத்திற்கு வழிவகுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் தனுக ரணஞ்சக கஹந்தகமகே எனும் சட்டத்தரணி தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஈரான் : இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஈரானுக்கு எதிராக அந்நாட்டின் இராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் நாட்டின் உச்ச தலைவரும், மதகுருவுமான அயதுல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.

இன்று ( ஜூன் 13) ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது வான்வழி தாக்குதலை தொடுத்தது இஸ்ரேல். இதில் தெஹ்ரான் நகரில் உள்ள குடியிருப்புகள் உட்பட பல்வேறு கட்டிடங்கள் சிதிலமடைந்தன. இந்த தாக்குதலை அடுத்து ஈரான் வான்வெளி மூடப்பட்டது. இதை ஈரான் நாட்டின் அரசு ஊடக நிறுவனமான ஐஆர்என்ஏ உறுதி செய்தது.

வான்வழி தாக்குதல் மட்டுமல்லாது இஸ்ரேலின் மொஸாட் (MOSSAD) அமைப்பும் ஈரானில் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டதாக இஸ்ரேல் ராணுவ வானொலி தெரிவித்தது. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதிகள், வீரர்கள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர ராணுவ அதிகாரி ஹுசைன் சலாமி உயிரிழந்திருப்பதாவும் தகவல் வெளியாகி உள்ளது. இது மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட தாக்குதல் என சர்வதேச செய்திகளை வெளியிடும் ஊடக நிறுவனங்கள் கூறியுள்ளன.   ஈரான் தரப்பில் முடிவெடுக்க கூடிய முக்கியஸ்தர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல்.

இந்த தாக்குதலுக்கு என்ஐஏசி அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அப்பாவி மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இதில் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. மேலும், இது அமெரிக்காவை உள்ளடக்கிய பெரிய அளவிலான போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்த தாக்குதலை தன்னிச்சையாக நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதை இஸ்ரேலின் ஐநா தூதர் டேனி டானன் கூறியுள்ளார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதலை அடுத்து இஸ்ரேலுக்கு தக்க பதிலடி தரப்படும் என ஈரானின் ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் அபோல்பஸ்ல் ஷேகார்ச்சி கூறியுள்ளார்.

மின்கட்டண உயர்வு: உன்னிப்பாக அவதானம் செலுத்தியிருப்பதாக IMF தெரிவிப்பு

மின்கட்டண உயர்வு உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகள் தொடர்பில் உன்னிப்பாக அவதானம் செலுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜுலி கொஸாக், கடினமான மறுசீரமைப்புக்களின் ஊடாக எட்டப்பட்ட அடைவுகளை நிலையாகத் தக்கவைத்துக்கொள்வதற்கு விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தை முழுமையான நடைமுறைப்படுத்தவேண்டும் என வலியுறுத்தினார்.

வொஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் மாதாந்த செய்தியாளர் சந்திப்பின்போது ‘இலங்கையைப் பொறுத்தமட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் செயற்திட்டம் நிதியியல் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டிருப்பதனால் அதுவே இலங்கை நாடும் இறுதிச்செயற்திட்டம்’ என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருப்பது பற்றி நாணய நிதியத்தின் நிலைப்பாடு என்னவென்று ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஜுலி கொஸாக் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் குறித்த நான்காம் கட்ட மீளாய்வு தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் அரசாங்கத்துக்கும், சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும் இடையில் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது.

இந்நிலையில் கடந்த 11 ஆம் திகதி அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் நாம் உன்னிப்பாக அவதானம் செலுத்தியிருக்கின்றோம். அந்த அறிவிப்பு 15 சதவீத மின்கட்டண உயர்வு மற்றும் மொத்த விநியோகக் கொடுக்கல், வாங்கல்களுக்கான கணக்கு வழிகாட்டல்களை வெளியிடல் என்பவற்றை உள்ளடக்கியிருக்கின்றது. அதன்படி ஏற்கனவே எட்டப்பட்ட உத்தியோகத்தர்மட்ட மீளாய்வு முடிவடைந்து, அதற்கு நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதி அளித்ததன் பின்னர் இலங்கைக்கு 334 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படும்.

அதேவேளை கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஆட்சியியல் மறுசீரமைப்புக்கள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட செயற்திட்டத்தை அரசாங்கம் வெளியிட்டது. அச்செயற்திட்டத்தில் பொது கொள்வனவுச்சட்டம், குற்றச்செயல்களின் வரும்படிகள் சட்டம் மற்றும் ஏற்கனவே நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைவான நடவடிக்கைகள் என்பன உள்வாங்கப்பட்டிருந்தன.

அதேபோன்று விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின் ஆதரவுடன் இலங்கையினால் முன்னெடுக்கப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வரவேற்கத்தக்க பெறுபேறுகளைத் தந்திருக்கின்றன. அதற்கமைய நாட்டின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்களவு விரிவாக்கத்தைப் பதிவுசெய்திருக்கின்றது.

பொருளாதாரத்தின் சகல துறைகளும் விரிவடைவதற்கான குறிகாட்டிகள் தென்படுகின்றன. பணவீக்கம் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. வெளிநாட்டுக்கையிருப்பு உயர்வடைந்திருக்கின்றது. வருமானத்திரட்சி மற்றும் நிதியியல் நிலை என்பன முன்னேற்றமடைந்திருக்கின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் இந்த அடைவுகளை நிலையாகத் தக்கவைத்துக்கொள்வதற்கு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தை முழுமையான நடைமுறைப்படுத்தவேண்டும் என வலியுறுத்தினார்.

பொன்மலைக்குடாவில் ஜனாஸா நல்லடக்கத்திற்கு பௌத்த பிக்குவின் தடையால் பதற்றம்…

WhatsApp Image 2025 06 13 at 12.39.46 1 பொன்மலைக்குடாவில் ஜனாஸா நல்லடக்கத்திற்கு பௌத்த பிக்குவின் தடையால் பதற்றம்...

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்மோட்டை 02 – பொன்மலைக்குடா பகுதியில் ஜனாஸா நல்லடக்கத்திற்கு பௌத்த பிக்கு தடை விதித்ததால் அப்பகுதியில் பதற்றமான நிலை தோன்றியது.

குறித்த சம்பவம் வெள்ளிக்கிழமை (13) காலை இடம்பெற்றிருந்தது.

புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன்மலைக்குடா பகுதியில் இன்று காலை ஆண் ஒருவர் சுகவீனமுற்று மரணமாகியிருந்த நிலையில் குறித்த ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்கு மயானத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள குறித்த காணியில் ஜனாஸா நல்லடக்கம் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் ஜனாஸா அடக்கத்திற்கு எதிராக புல்மோட்டை அரிசிமலை விகாரையின் விகாராதிபதியினால்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொண்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் குறித்த ஜனாஸா நல்லடக்கத்தினை நிறுத்தக்கோரியும் புல்மோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டதையடுத்து அவ்விடத்திற்கு வந்த பிரதேச செயலாளரின் தடையீட்டினால் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

புல்மோட்டை பகுதியில் மக்களுடைய பெருமளவான காணிகளை பூஜா பூமி என்ற பெயரில் குறித்த பௌத்த பிக்கு ஆக்கிரமித்து வருவதாகவும் இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் மற்றும் இயல்புநிலை பாதிக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி குறித்த பகுதியில் ஜனாஸா நல்லடக்கத்திற்காக குழி  தோண்டப்பட்டபோது புல்மோட்டை அரிசிமலை விகாரையின் விகாராதிபதி குறித்த காணி “பூஜா பூமி” என புல்மோட்டை பொலிஸார் சிலரை அப்பகுதிக்கு அனுப்பி ஜனாஸா நல்லடக்கத்தை தடை செய்திருந்தார்.

இதனையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் தோன்றியது. குறித்த விடயம் பிரதேச செயலாளர் உட்பட பலருடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் குறித்த பகுதியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விமான விபத்து – அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக இலங்கை தெரிவிப்பு

அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்திய விமான விபத்தில் பல உயிர்கள் பலியானது குறித்து, இலங்கை மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தம் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகரின் ஆட்சியைத் தனதாக்கியது தமிழரசுக் கட்சி: முதல்வராக மதிவதனி தெரிவு!

யாழ்.மாநகர சபையின் முதல்வராக  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி  தெரிவு செய்யப்பட்டார்.
யாழ்.மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றையதினம் (13)யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
45 உறுப்பினர்களை கொண்ட யாழ் மாநகர சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தன.
இதன்படி இலங்கை தமிழரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக விவேகனந்தராசா மதிவதனியும் அகில இலங்க்சி தமிழ் அரசு கட்சியின் முதல்வர் வேட்பாளராக கனகையா ஸ்ரீகிருஸ்ணகுமார் ஆகியோர் போட்டியிட்டனர்.
வெளிப்படையான வாக்கெடுப்பில் விவேகானந்தராஜா மதிவதனிக்கு 19 வாக்குகளும் கனகையா ஶ்ரீ கிருஷ்ணகுமாருக்கு 16 வாக்குகளும்  கிடைத்தது. தேசிய மக்கள் சக்தியின் 10 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர்.
இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட விவேகானந்தராஜா மதிவதனி வெற்றி பெற்றதுடன், பிரதி முதல்வர் பதவிக்கு இம்மானுவேல் தயாளன் தெரிவானார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஆதரித்து வாக்களித்து வெற்றிபெறச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

 

யாழ். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை முன் போராட்டம்

புற்றுநோய் சிகிச்சையை குழப்பம் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து  வெள்ளிக்கிழமை (13) யாழ். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இது குறித்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த வைத்தியசாலையானது வடக்கு மாகாணத்தில் உள்ள விசேடமான ஒரே ஒரு புற்றுநோய் வைத்தியசாலையாகும். வடக்கிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இந்த வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர்.

தெற்கில் இருந்து கூட பல நோயாளிகள் இந்த வைத்தியசாலைக்கு அன்றாடம் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கடந்த காலத்தில் 11 சதவீதமான மக்கள் வெளி மாவட்டத்திலிருந்து இங்கே வருகை தந்து சிகிச்சையை பெற்று சென்றனர். இதிலிருந்து நமது வைத்தியசாலை எவ்வாறு சிறப்பான சேவையை வழங்குகின்றது என்பது அனைவருக்கும் தெரியும்.

இதனை சிதைக்கும் செயற்பாடு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகின்றன. தனிப்பட்ட இலாபத்தை கருத்தில் கொள்ளாத, தன்னலமற்ற மருத்துவர்கள், நிர்வாகத்தினரால் அடக்குமுறை, பழிவாங்கல் மற்றும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

பொய்யான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பி சிறந்த மருத்துவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முனைகின்றனர். இதனால் இனிமேல் மக்கள் தனியார் அல்லது மகரகம வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கி நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டமானது தனி மனிதனுக்கானது அல்ல ஏழை மக்களுக்கானது.

ஏழை மக்கள் இலவச சிகிச்சை பெறுகின்ற உரிமையை பாதுகாக்க வேண்டும். தரமான, இலவசமான சிகிச்சையை பெறுவதை மறுக்கும் சட்டவிரோத செயற்பாடுகளிலிருந்து பாதுகாத்து, நோயாளிகளின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

இதன்போது போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி, கோசமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், வைத்தியர்கள், சமூக மட்ட அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

”இதனால்தான் யாரையும் காப்பாற்ற முடியவில்லை” – விமான விபத்து குறித்து அமித்ஷா!

”விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் சுமார் 1,25,000 லிட்டர் எரிபொருளை எடுத்துச் சென்றது. இதனால் விபத்தின்போது வெப்பம் அதிகரித்ததால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்கும் முயற்சி கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், இறந்தவர்களை அடையாளம் காண உதவும் வகையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த அமித்ஷா, காயமடைந்தவர்கள் குணமாகத் தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அதே நேரம்  ”30 நொடிகளில் எல்லாம் முடிந்துவிட்டது.”  என  விமான விபத்தில் உயிர் பிழைத்தவர்  தெரிவித்துள்ளார்.

”ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சுமார் 30 விநாடிகளில் நிலைமை தலைகீழாக மாறியது. ஒரு பெரிய சத்தம் கேட்டது. அடுத்த சில நிமிடங்களில், விமானம் விபத்துக்குள்ளானது” என கண்ணீருடன் தெரிவித்துள்ளார் விமான விபத்திலிருந்து உயிர் பிழைத்த ஒரே நபரான 40 வயதான விஸ்வாஸ் குமார்.

”நான் எழுந்தபோது, என்னைச் சுற்றி உடல்கள் சிதறிக் கிடந்தன. எனக்குப் பயமாக இருந்தது. நான் வெளியேறியபோது, என்னைச் சுற்றி விமானத்தின் பாகங்கள் கிடந்தன.” எனத் தெரிவித்துள்ளார். தனது சகோதரர் அஜய்யும் தன்னுடன் பயணித்ததாக தெரிவித்துள்ள விஸ்வாஸ் அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

லண்டனில் வசிக்கும் இந்தியரான விஸ்வாஸ் விடுமுறைக்கு அகமதாபாத் வந்து திரும்பும்போது இந்த விபத்தில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வாய்ப்பு : சர்வதேச நாணய நிதியம்

இலங்கையில் நடைபெறவிருக்கும் ‘மீட்சிக்கான இலங்கையின் பாதை: படுகடன் மற்றும் ஆளுகை’ மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் துணை முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத், இது இலங்கையின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களில் கவனம்செலுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) நாட்டுக்கு வருகைதரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் துணை முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத், எதிர்வரும் திங்கட்கிழமை (16) நடைபெறவிருக்கும் குறித்த மாநாட்டில் கௌரவ அதிதியாகப் பங்கேற்கவுள்ளார்.

நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பன இணைந்து நடாத்தவுள்ள இம்மாநாடானது பேரண்டப்பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தல், கடன்மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்தல், ஏனைய மறுசீரமைப்புக்கள் தொடர்பில் இலங்கையின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை ஆராய்தல் என்பவற்றைப் பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றி தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டிருக்கும் கீதா கோபிநாத், இம்மாநாடு இலங்கையின் அனுபவங்கள் மற்றும் எதிர்வரும் சவால்களிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களில் கவனம் செலுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.