Home Blog Page 126

பல சர்வதேச நாடுகளின் கவனம் இலங்கையின் பக்கம்!

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையின் பிணைப்பு அதிகரித்துவரும் பின்னணியில், பல சர்வதேச நாடுகளின் கவனம் இலங்கையின் பக்கம் திரும்பியுள்ளது. அதற்கமைய, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான பல தொடர்புகளை மேம்படுத்துவதில், பல நட்பு நாடுகள் இலங்கையுடன் அண்மைய காலமாக, முனைப்புடன் செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

அந்த வகையில், கடந்த மாத இறுதியில் போலந்தின் வெளிவிவகார அமைச்சர், மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்ததுடன், அவுஸ்திரேலியாவின் துணை பிரதமரும் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதனிடையே, கடந்த 11 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழுவினர்   (15) காலை நாடு திரும்பினர்.

கடந்த 11 ஆம் திகதி ஜேர்மனிக்கான தமது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை தொடங்கிய ஜனாதிபதி, இருதரப்பு அரசியல் சந்திப்புகள், வணிக வட்டமேசை மாநாடு மற்றும் ஜேர்மன் சுற்றுலாத் துறையுடனான சந்திப்புடன் வெற்றிகரமாக தமது விஜயத்தை நிறைவு செய்துள்ளதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடு திரும்பிய இன்றைய தினத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் 2 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது, நிதி அமைச்சும், இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியமும் இணைந்து நடத்தும் ‘இலங்கையின் மீட்புக்கான பாதை – கடன் மற்றும் நிர்வாகம்’ என்ற தலைப்பில் நாளை (16) இடம்பெறவுள்ள மாநாட்டில் கீதா கோபிநாத் விசேட அதிதியாக கலந்துக்கொள்ளவுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் அபிவிருத்தி குறித்து கவனம் செலுத்தும் சர்வதேசம் பொறுப்புகூறல் மற்றும் மனித உரிமை மீறல் விடயத்திலும் கவனம் செலுத்தி வருகிறது.

அதனடிப்படையில், எதிர்வரும் 23 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர் யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் கண்டிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில், அவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, சில அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் சிவில் சமூக குழுக்களை சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளுக்கு முன்னர் அவரது இந்த விஜயம் அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி பேச்சுவார்த்தை

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியுடன் திருகோணமலை உள்ளூராட்சி சபைகளில் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விடயத்தில் இதுவரை இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் திருகோணமலை மாநகர சபையில் தமக்கு துணை மாநகர முதல்வர் பதவி தரவேண்டும் எனக் கேட்டிருந்தார்கள்.

பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் இரண்டு ஆண்டுக்கு தவிசாளர் பதவி தரவேண்டும் எனக் கேட்டிருந்தார்கள்.அத்துடன், மூதூர் பிரதேச சபையில் இரண்டு ஆண்டுக்கு உப தவிசாளர் பதவி தரவேண்டும் எனவும் கோரியிருந்தனர்.

இவை அனைத்துக்கும் நாம் சம்மதம் தெரிவித்திருந்தோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.இந்த விடயங்களை இறுதியாக கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வைத்து செல்வம் அடைக்கலநாதனிடம் கூறியிருந்தேன்.அவர் என்னை 8 ஆம் திகதி திருகோணமலையில் சந்திப்பதாக கூறியிருந்தார்.

எனினும் அவர் சந்திக்கவில்லை.பலமுறை நான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார். எனினும், விரைவில் அவர் என்னுடன் தொடர்பு கொள்வார் என்று நம்புகின்றேன் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.

ஈழப் புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் காலமானார்

“மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன் அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் புலி வீரர்…” என்ற புகழ்பெற்ற ஈழப் புரட்சிப்பாடலை எழுதிய கவிஞர் தமிழ் அறிஞர் பண்டிதர் வீ. பரந்தாமன் அவர்கள் காலமானார்.

கெரில்லாப் போர் விரகுகள் என்ற விடுதலைப் போராட்டம் சார்ந்த முக்கிய நூலையும் இவர் எழுதியுள்ளார். அத்துடன் மனிதரும் கடவுளும் மற்றும் வேர் – அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகரமுதலி முதலிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

தமிழீழம் கோரிய வட்டுக்கோட்டையை அழிக்கத்திட்டம்: கலாநிதி சிதம்பரமோகன் ஆதங்கம்

கடந்த காலங்களில் தமிழீழம் கோரிய முதல் இடமாக திகழ்ந்த வட்டுக்கோட்டையை திட்டமிட்டு அழிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக கலாநிதி சிதம்பரமோகன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அவர் தமது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துவெளியிட்ட அவர், சங்கானையை நகரசபையாக தரம் உயர்த்துமாறும், வட்டுக்கோட்டையை பிரதேச சபையாக மாற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
‘தமிழீழம் கேட்ட வட்டுக்கோட்டையில், தந்தை செல்வா காலம் தொடக்கம் இன்று வரை பொது மலசலம்கூட இல்லை’. ‘ஒரு காவல்நிலையம் மட்டும் உள்ளது’.எனவே, திட்டமிட்டு வட்டுக்கோட்டை அழிக்கப்படுகின்றதா? என்றும் கலாநிதி சிதம்பரமோகன் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என அரச அதிகாரிகள் இதன்போது பதிலளித்திருந்தனர்.

வடக்கு காவல் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்திய காவல்துறை!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த அநாமதேய தொலைபேசி அழைப்பு குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வட மாகாணத்திலுள்ள சுமார் 10 பொலிஸ் நிலையங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக இந்த தொலைபேசி அழைப்பின் போது எச்சரிக்கப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 11 ஆம் திகதி பிற்பகல் இந்த தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த அநாமதேய தொலைபேசி அழைப்பு குறித்து பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அத்துடன், நீதிமன்றத்துக்கும் சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
இதனிடையே வட மாகாணம் முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் அரசியலை விமர்சித்த கடற்றொழில் அமைச்சர்!

தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கப்பட்ட – துரோகியென முத்திரைக்குத்தப்பட்ட தரப்புடன், அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அப்படியான அரசியலை முன்னெடுக்கும் தரப்பின் முகத்திரை தற்போது கிழிந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். சாவக்கச்சேரியில் இன்று (14) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

நாடு தழுவிய ரீதியில் உள்ளூராட்சி சபைகளில் அமைக்கப்பட்டு வருகின்றது. வடக்கிலும் இதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றது. தெற்கில் கடைபிடித்த அணுகுமுறையை நாம் வடகிழக்கில் கடைபிடிக்கவில்லை. இங்கு நடுநிலை வகித்தோம் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

‘நாம் வாக்கெடுப்பில் பங்கேற்றிருந்தால் இங்குள்ள தமிழ்க் கட்சிகளின் கனவு சிதைக்கப்படும். மனக்கோட்டை,  மண்கோட்டையாக மாறிவிடும் என்பதை சொல்லி வைக்க விரும்புகின்றோம்’.
‘இங்கு யார் ஆட்சி செய்தாலும் அந்த ஆட்சிக்கு நாம் உதவியாக இருப்போம்’.

உள்ளூராட்சி சபைகள் ஊடாக மக்களுக்கு கிடைக்கப்பெறும் சேவைகள் சரியாக சென்றடைய வேண்டும். அதற்காக எமது உறுப்பினர்கள் தீவிரமாக செயற்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ‘மக்களை ஏமாற்றும் அரசியலை நாம் முன்னெடுக்கவில்லை. சாக்கடை அரசியல் செய்யவும் தயாரில்லை. அவ்வாறு செய்ய நினைத்திருந்தால் யாழ். மாநகரில் இன்று வேறொரு நபரே மேயராக வந்திருக்கக்கூடும்’
‘கடந்த காலங்கள் முழுவதும் தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட – துரோகிகள் என முத்திரை குத்தப்பட்ட – ராஜபக்சக்களின் அடிவருடி எனக் கூறப்பட்டவர்களுடன் கூட்டு சேரும் நிலைமை காணப்படுகின்றது.

இதனை மக்களும் இன்று புரிந்துகொண்டுள்ளனர்’ என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக அல்ல, தமது காவாலித்தனமான அரசியலை தக்கவைத்துக்கொள்வதற்காகவே இவர்கள் இவ்வாறு ஆட்சியமைக்கின்றனர்.
கடந்த காலங்களில் ஒருவரையொருவர் எப்படி விமர்சித்துக்கொண்டனர். ஆனால் வெட்கம் இல்லாமல் – அதிகாரத்துக்காக – கொள்கை துறந்து கூட்டு சேர்கின்றனர் என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விமர்சித்துள்ளார்.

இஸ்ரேலின் ‘சிங்கத்தின் எழுச்சி’ உலகப் போருக்கான தொடக்கமாகையில்; ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழரே பேண வேண்டிய நிலை | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 343

ஈரானின் பல இடங்களில் இஸ்ரேலின் “சிங்கத்தின் எழுச்சி” என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட வான் படையெடுப்பு தாக்குதல்கள், உலகின் சமகால வர்த்தக போர் தொழில்நுட்பப் போர் நிலையை முழுஅளவிலான நாடுகளுக்கு இடையிலான பெரும் உலகப் போராக பரிணமிக்க வைப்பதற்கான முதல்நிலையினை யூன் 13ம் நாள் 2025இல் தொடங்கியுள்ளது. இதில் ஈரானின் தலைநகருக்கு 140 மைல் தூரத்தில் உள்ள நட்டான்ஸ் (Natanz) அணுசக்திக்கான யுரேனிய உற்பத்தி வளப்பகுதிகளை இஸ்ரேல் தாக்கினாலும் கதிர்வீச்சுக் கசிவு ஏற்படவில்லையென ஈரான் அறிவித்துள்ளது. ஆயினும் ஆறு ஈரானிய அணுசக்தி பேராசிரியர்களும் விரிவுரையாளர்களுமான விஞ்ஞானிகளை இஸ்ரேல் தாக்குதல் கொலைசெய்துள்ளது. ஈரான் இராணுவத்தின் துணைப்படையான ஈரானிய புரட்சிகர காவல் படையின் தலைமைத்தளபதியாக 2009 முதல் பொறுப்பில் இருந்த குசைன் சலாமியையும் இஸ்ரேல் தாக்குதல் கொன்றுள்ளது. இந்தப் பாரதூரமான அனைத்துலக சட்டங்களை மீறிய இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடியை ஈரான் வழங்குமென்று ஈரான் அறிவித்துள்ள நிலையில் நீண்டகால நேரடிப் பெரும்போர் மத்திய கிழக்கில் தோன்றியுள்ளமையை உலகு உணர்கிறது.
இத்தகைய உலகப் போர்ச் சூழல்கள் ஏற்படுகையில் உலகில் தங்கள் தன்னாட்சிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் சிறுதேச இனங்களின் மேலான அனைத்துலகக் கவனம் சிதறடிக்கப்படுவது உலக வழமை. இதனைப் பயன்படுத்திச் சிறுதேச இனங்களை ஆக்கிரமிப்பு ஆட்சிக்கு உட்படுத்தி நிற்கும் அரசாங்கங்கள் அவர்கள் உடைய இறைமையை இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பின் மூலம் ஒடுக்குவதும் உலக வழமை. இந்தப் பேரபாயத்ததுள் உலகின் மூத்த இனங்களில் ஒன்றாக இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள் இன்று உள்ளனர். இந்நிலையில் ஈழத்தமிழர்கள் உலக இனமாக இன்று உலகின் முக்கிய நாடுகளில் எல்லாம் வாழ்ந்து வரும் தங்களின் வரலாற்றுப் பரிணாமத்தைக் கவனத்தில் எடுத்து அனைத்துலக ஈழத்தமிழர்கள் பேரவை ஒன்றை இலங்கையிலும் உலகிலும் வாழும் அனைத்து ஈழத்தமிழர்களின் வறுமையையும் அறியாமையையும் நீக்கும் சமுகமூலதனப்பலத்தையும் அறிவூட்டலையும் அளிக்க வல்ல முறையில் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட முறையில் தாங்கள் தேசங்கடந்துறை மக்கள் என்ற பலத்துடன் அமைத்தாலே ஈழத்தமிழர்களின் இறைமை யைப் பாதுகாக்க இயலும் என்பது இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது.
இதனைப் பலமுறை இலக்கில் முன்னரும் கூறி வந்துள்ள போதிலும் இன்றைய உலக படைபல சமநிலை மாற்றங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு நாடும் தனது நாட்டின் மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் தேவையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய காலனித்துவல அரசாங்கத்தினால் தங்களின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தங்களின் அரசியல் எதிர்காலத்தை அமைக்கும் தன்னாட்சி உரிமையினை தங்களின் அரசியல் உரிமையாக ஈழத்தமிழர்கள் பயன்படுத்த இயலாதவாறு ஈழத்தமிழர்களின் இறைமை சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமைக்குள் 04.02. 1948 இல் உட்படுத்தப்பட்டதன் விளைவாக இன்று வரை காலனித்துவத்தால் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ள ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை அனைத்துலக நாடுகளின் மன்றமான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நல்லுறவு தொடர்பாலர் நியமனத்தின் மூலம் ஈழத்தமிழரின் தன்னாட்சி மூலம் அவர்கள் தங்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய முறையில் அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் செய்யப்பட வேண்டிய வொன்றாக உள்ளது. இதற்காக 2023இல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் குரல் எழுப்பிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திர குமார் பொன்னம்பலம் அவர்கள் தாயகத்தில் தமிழ்த்தேசியப் பேரவையாக ஈழத்தமிழ் அரசியல்வாதிகளை பொதுநோக்கில் இணைக்கும் பெரும் முயற்சியில் வெற்றிகரமாக பயணித்து வருகின்றார். ஆயினும் தமிழசுக்கட்சியினர் இந்த தமிழ்த்தேசியப்பேரவைக்கு ஈழத்தமிழ் மக்கள் அளித்த வாக்குப்பலத்தின் அடிப்படையிலான ஆணையின் கீழ் உள்ளூராட்சியில் அவர்கள் செயற்படாதவாறு சிங்கள பௌத்த பேரினவாதத்தின் முகவர்களாக தாயகத்தில் செயற்படும் கட்சிகளுடன் இணைந்து யாழ்ப்பாண மாநகரசபை உட்பட ஈழத்தமிழ்த்தேசியப் பேரவை ஆட்சி அமைக்கக் கூடிய பத்து முதல் பதின் மூன்று உள்ளூராட்சி சபைகளில் ஈழத்தமிழர்களின் வாக்களிப்பு நோக்குக்கு எதிரான வகையில் சனநாயகப்படுகொலை செய்து தங்கள் பதவிகளைப் பெற்றுள்ளனர்.
இதன்வழி ஈழத்தமிழர்களின் இறைமையும் தேசிய ஒருமைப்பாடும் ஒடுக்கப்படும் நிலையை இவர்கள் உருவாக்கியுள்ளனர். தந்தை செல்வநாயகத்தின் 1975ம் ஆண்டு சிறிலங்காப் பாராளுமன்ற வெளியேற்ற உரையான ஈழத்தமிழர் தன்னாட்சிப் பிரகடனத்துடன் நிறைவுற்றுவிட்ட தமிழரசுக்கட்சி என்ற 1949 மதல் 1975 வரையான 26 ஆண்டுகால கட்சியொன்றின் வரலாற்றுப் பெயரை இன்று தமது அரசியல் நோக்குகளுக்கான கட்சிப் பெயராகக் காட்டி மக்களை மயக்கி வரும் இன்றைய ஈழத்தமிழ் தமிழரசு அரசியல்வாதிகளை ஈழத்தமிழர்கள் இனங்கண்டு அவர்களுக்கான தமது எதிர்ப்பையும் வாக்கு மறுப்பையும் உறுதிப்படுத்துவதன் மூலமாகவே இன்றைய காலகட்டத்தில் சிறிலங்காவின் இன்றைய அரசின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் ஈழத்தமிழர் சிங்கள பௌத்த அரசில் வடக்கில் வாழும் கிழக்கில் வாழும் தனித்தனிச் சமுகம் என்ற அபாயகரமான புதிய அரசியல் வரவிலக்கணத்துள் இருந்து தப்பிக்க முடியும்.
தையிட்டியில் ஈழத்தமிழரின் தனிப்பட்ட நிலங்கள் பௌத்த பிக்குவால் அபகரிக்கப்பட்டுள்ள இன்றைய பிரச்சினையில் தேசிய மக்கள் சக்தி பிக்குவின் நில அபகரிப்பை அங்கீகரித்து பாதிக்கப்பட்ட காணிச் சொந்தக்காரருக்கு நட்டஈட்டுத் தொகை அல்லது இன்னொரு இடத்தில் காணி என்கின்ற தீர்வை அதன் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுதான் இலங்கைத் தீவில் இனப்பிரச்சினையில்லையென்ற ஈழத்தமிழின அழிப்புச் சிங்கள அரசத்தலைவர் மகிந்தாவின் வழியிலும் சிங்கள பௌத்த நாடாக எம்மை ஆட்சிக்குக் கொண்டு வந்த சிங்களவர்களுக்கே நாம் அரசு என்ற கோத்தபாய சிந்தனையின் வழியிலும் ஏக்கிய இராச்சிய என்ற ரணில் சிறிசேன சிங்கள அரசத்தலைவர்களின் கூட்டுப்படைப்பான ஒரே அரசு சிங்கள அரசு என்ற வழியிலும் ரணிலின் வடக்கு கிழக்கு என்று ஈழத்தமிழின இருப்பையே இல்லாதொழிக்கும் வழியிலும் இன்றைய தேசிய மகக்ள் சக்தி அரசாங்கமும் செயற்படுகிறது என்பதற்கான தெளிவான சான்றாகவுள்ளது. இந்நிலையில் தமிழரசுக்கட்சி இன்றைய அரசின் சிங்கள மயமாக்கல் முயற்சிகளை ஈழத்தமிழரிடை முன்னெடுக்கும் அரசியலைச் செய்கின்றார்கள் என்பதற்கு அவர்கள் ஈழத்தமிழினப் பகைமைகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தமையை விட இனியொரு சான்று தேவையில்லை.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நாளாந்த இதழ் ஒன்று ஈழத்தமிழ்த் தேசியம் குறித்து மீள்வரைவு செய்ய வேண்டும் என்னும் ஆசிரிய தலையங்கத்தைக் கடந்த வாரத்தில் எழுதியுள்ளது. இதனை வாசித்த பொழுது ஊடகங்களின் அறியாமையைத் தெளிவாக விளங்க முடிந்தது. அவ்வாறே தமிழகத்தில் திரைப்பட நடிகர் கமலகாசன் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று தனது ‘தக் லைவ்’ திரைப்பட வெளியீடு தொடர்பான கூட்டமொன்றில் பேசியமைக்குக் கன்னட நீதிமன்ற நீதிபதி மன்னிப்புக் கேட்க வேண்டுமென நீதிமன்றத்தால் வலியுறுத்தியும் கமலகாசன் கேட்க மறுத்தத்தமை குறித்த தமிழகத்தின் கல்வித்துறையிலும் தமிழ் இலக்கியத்துறையிலும் குறிப்பிடத்தக்க புகழ்படைத்த பெருமாள் முருகன் ‘த இந்து’ தமிழ் நாளிதழுக்கு கமலகாசனின் கருத்துச் சுதந்திர உறுதிப்பாட்டைப் பாராட்டி எழுதிய கட்டுரையில் மூலத் தமிழில் (Proto-Tamil) இலிருந்து மொழிகள் தோன்றின என்ற உண்மையை மறுத்து மூலத் திராவிட மொழியில் (Proto-Dravidian Language) இருந்தே கன்னடம் உட்பட்ட திராவிட மொழிகள் தோன்றின என்ற கருத்தை மக்கள் மயப்படுத்தியுள்ளார். இதனை வீரகேசரி மறுவெளியீடு செய்துள்ளது. இந்த ஊடக வெளிப்பாடுகள் இரண்டுமே ஈழத்தமிழினத்துக்கான அறிவூட்டலில் தேவையை வெளிப்படுத்தி உள்ளன. ஈழத்தமிழ்த் தேசியம் என்பது இந்த மண் எங்களின் சொந்த மண் என்கின்ற மக்களின் வரலாற்றுத் தாயகத்தினை மக்கள் மீட்கும் மண்மீட்பைக்குறிக்கிறது என்பதும் திராவிட மொழிக் குடும்பம் என மூலத் தமிழைக் கொண்ட மொழிகளின் குடும்பங்கள் குறிக்கப்பட்டனவே தவிர திராவிட மொழியென்று ஒரு மொழி இருந்தது இல்லை என்பதும் இவை குறித்து எழுதியவர்களுக்கே தெரியாத நிலை உள்ளது என்பதால் தான் ஈழத்தமிழர்களின் பொதுக்கருத்துக்கோளமொன்றை உருவாக்கிட வல்ல ஈழத்தமிழ்த் தேசிய ஊடகத்தை ஈழத்தமிழர்கள் உயிரோடைத் தமிழ் வானலையை இலக்கு மின்னிதழைக் கொண்டு பலமான ஈழத்தமிழர் ஊடகமாக உருவாக்குங்கள் என்று அடிக்கடி ஆசிரிய தலையங்கத்தில் எழுதி வருகின்றோம். உலகப் போர் மூண்டுவிட்ட இந்நிலையிலாவது தயவு செய்து விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஈழத்தமிழர்களுக்கான தேசிய ஊடகம் ஈழத்தமிழர்களுக்கான பொதுக்கட்டமைப்பு என்பவற்றில் உடனடிக் கவனத்தை ஒவ்வொரு ஈழத்தமிழரும் செலுத்த வேண்டும் என்பதே இலக்கின் இவ்வார கருத்தாகவுள்ளது.

ஆசிரியர்

Tamil News

Ilakku Weekly ePaper 343 | இலக்கு-இதழ்-343-யூன் 14, 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 343 | இலக்கு-இதழ்-343-யூன் 14, 2025

Ilakku Weekly ePaper 343

Ilakku Weekly ePaper 343 | இலக்கு-இதழ்-343-யூன் 14, 2025

Ilakku Weekly ePaper 343 | இலக்கு-இதழ்-343-யூன் 14, 2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

  • இஸ்ரேலின் ‘சிங்கத்தின் எழுச்சி’ உலகப் போருக்கான தொடக்கமாகையில்; ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழரே பேண வேண்டிய நிலை | ஆசிரியர் தலையங்கம்
  • பூகோளச் சிக்கலுக்குள் மீண்டும் இலங்கை (பகுதி-03) – விதுரன்
  • சந்திப்பு வருவது கண்டு சந்திக்கும் இடங்களும் உண்டு! சந்தர்ப்பவாத தமிழ்த் தேசிய அரசியல்.! –பா. அரியநேத்திரன்
  • கிளீன் சிறிலங்கா மூலம் சூழல் பாதுகாக்கப்பட்டதா ?கிண்ணியான்
  • தாயகத்தில் நடைபெறுகின்ற அரசியல் கட்சிகளின் கூத்துக்கள் அல்லது பிறழ்வுகள் குறித்து அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்
  • ‘காணிகள்’ வர்த்தமானியை மீளப்பெறுவதே ஒரே தீர்வு – நன்றி – (பகுதி-03 (இறுதிப்பகுதி)) ஆர்.ராம் ஆசிரியர் வீரகேசரி
  • ஒரு இனத்தைக் குறிவைத்துக் கொல்வது இனப்படுகொலையா….! (பகுதி-03 (இறுதிப்பகுதி) – வல்வை ந.அனந்தராஜ்
  • தமிழர் தேசமும் தொடரும் காணி அபகரிப்புகளும்… தாமோதரம் பிரதீவன், மனித உரிமை செயற்பாட்டாளர், அம்பாறை மாவட்டம்
  • வீழ்ச்சிப் போக்கில் உள்ள மலையக சுகாதார நிலை –மருதன் ராம்
  • தமிழ்நாட்டில் ஈழ ஏதிலியர் நிலை….? – ஜோஸ்-தமிழ் நாடு

180 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்குப் பற்றாக்குறை!

மத்திய மருந்து சேமிப்பு மையங்களில், சுமார் 180 அத்தியாவசிய மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மருத்துவமனைகளுக்குள், சுமார் 50 வகையான அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான மருந்துகள் உள்ளிட்ட பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

கடந்த பல மாதங்களாக புற்றுநோய் நோயாளிகளுக்கான மருந்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதன் விளைவாக புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சில வரையறைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியா: விமான விபத்தில் உயிரிழப்பு 274-ஆக உயா்வு

உலகை  உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 274-ஆக உயா்ந்துள்ளது. இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பிரதமா் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பெருந்துயா் நேரிட்ட இடத்தை நேற்று வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். காயமடைந்தோரை சந்தித்து நலம் விசாரித்த மோடி, உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

அகமதாபாத் சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏா் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனா் ரக விமானம் (ஏஐ 171), இங்கிலாந்து, கனடா மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினா் உள்பட 242 பேருடன் (12 ஊழியா்கள், 230 பயணிகள்) லண்டனுக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகலில் புறப்பட்டது.

ஓடு பாதையில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழ்நோக்கி இறங்கிய விமானம், அருகில் உள்ள மேகானிநகா் பகுதியில் பி.ஜே அரசு மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்களின் மீது விழுந்து தீப்பிழப்பாக வெடித்துச் சிதறியது.

நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்திய இந்த பயங்கர விபத்தில் ஒரேயொரு பயணி தவிர 241 பேரும் உடல் கருகி உயிரிழந்தனா். இவா்களில் குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானியும் ஒருவா். இந்தியப் பயணிகள் 169 பேருடன் பிரிட்டன் (52), போா்ச்சுகல் (7), கனடா (1) பயணிகளும் உயிரிழந்தனா்.

இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு:

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மீட்புக் குழுவினர் விமானத்தின் கருப்புப் பெட்டியையும், மேலும் 29 உடல்களையும் மீட்டுள்ளனர். விமானத்தில் பயணித்தவா்கள் தவிர, அது விழுந்த இடத்தில் உயிரிழந்தவா்களையும் சோ்த்து இறப்பு எண்ணிக்கை 274 ஆக உயா்ந்துள்ளது.

இவா்களில் மருத்துவ மாணவா்கள் 10 பேர், விடுதி கட்டடம் அருகே டீக்கடை நடத்தும் குடும்பத்தைச் சோ்ந்த சிறுவன் உள்பட மொத்தம் 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை 6 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அடையாளம் தெரியாத அளவில் உருக்குலைந்த நிலையில் உள்ள உடல்களை மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் காணும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடைய 3 நாள்கள் வரை ஆகும்.

மரபணு சோதனைப் பணிகள் முடிந்த பிறகு அரசுத் தரப்பில் முழு விவரங்கள் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.