Home Blog Page 123

இலங்கை – பிரான்ஸுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கைக்கும் பிரெஞ்சு குடியரசுக்கும் இடையிலான வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ், இருதரப்பு ஒப்பந்தத்தில் அதிகாரபூர்வமாக கையொப்பமிடப்பட்டது.

இந்த ஒப்பந்தம், இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல் திட்டத்தில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது. இது, கடன் நிலைத்தன்மையை மீட்டெடுத்து, நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் உறுதியை வலியுறுத்துகிறது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பை வழிநடத்துவதில் ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் இணைந்து, பிரான்ஸ் முக்கிய பங்கு வகித்து வருகிறது.  இருதரப்பு ஒப்பந்தத்தில், இலங்கை அரசாங்கத்திற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே. எம். மஹிந்தா சிறிவர்தன மற்றும் பிரான்ஸ் அரசாங்கத்திற்காக திறைசேரியின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பலதரப்பு விவகாரங்கள், வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக் கொள்கைத் துறையின் உதவிச் செயலாளர் வில்லியம் ரூஸ் ஆகியோர்  கையெழுத்திட்டுள்ளனர்.

வலி.வடக்கில் படையினரின் பாதுகாப்பு வேலியால் பாதிப்பு: பொதுமக்கள் குற்றஞ்சாட்டு

யாழ்ப்பாணம்: வலிகாமம் வடக்கின் பலாலி வடக்கில் கடந்த ஆண்டு விவசாய நடவடிக்கைக்காக காணிகள் விடுவிக்கப்பட்டு 15 மாதங்கள் கடந்துள்ளநிலையில், தற்போதும் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இறுக்கமான கண்காணிப்பிலே உள்ளதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

காணி விடுவிப்புக்காக 15 மில்லியன் ரூபா அரச நிதி செலவு செய்யப்பட்டு அந்தக் காணிகள் துப்புரவாக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பாதுகாப்பு வேலியை அகற்ற இராணுவத்தினர் 18 மில்லியன் ரூபா தேவை எனத் தெரிவித்து காணிகளை விடுவிக்க மறுத்து வருகின்றனர். அதனால் அந்தக் காணிகள் மீண்டும் பற்றைக்காடுகளாக மாற ஆரம்பித்துள்ளன.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவிவகித்தபோது கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி ஒட்டகப்புலத்தில் நடந்த நிகழ்வில் ‘உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் பலாலி வடக்கு ஜே/254, பலாலி கிழக்கு ஜே/253, பலாலி தெற்கு ஜே/252, வயாவிளான் கிழக்கு, ஜே/244.வயாவிளான் மேற்கு, ஜே/245 கிராம அலுவலர் பிரிவுகளில் 234.83 ஏக்கர் காணி விவசாய நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்பட்டது.

அவை 408 பேருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. காணிகளை விடுவிப்பதற்காக அவை 15 மில்லியன் ரூபா அரச நிதி செலவிடப்பட்டு துப்புரவாக்கப்பட்டன. ஆயினும் காணிகள் விடுவிக்கப்பட்டுத் தற்போது 15 மாதங்கள் கடந்துள்ளபோதும். அவை இன்னமும் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள்ளேயே உள்ளன. மக்கள் அந்தக் காணிகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமானால், அங்குள்ள பாதுகாப்பு வேலி அகற்றப்பட வேண்டும். ஆயினும் அங்குள்ள பாதுகாப்பு வேலியை அகற்றிப் பின்னநகர்த்துவதற்கு 18 மில்லியன் ரூபா தேவை என்று தெரிவித்து இழுத்தடித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

IMF உதவிகளைப் பெறாத நிலைமையை ஏற்படுத்துவோம்: ஜனாதிபதி அநுர தெரிவிப்பு!

1004391338 IMF உதவிகளைப் பெறாத நிலைமையை ஏற்படுத்துவோம்: ஜனாதிபதி அநுர தெரிவிப்பு!

இலங்கை தற்போது பெற்றுக்கொள்ளும் சர்வதேச நாணயநிதியத்தின் நீடிக்கபட்டபோது வசதித்திட்டத்தை, சவதேச நாணய நிதியத்துடன் இவ்வாறான ஒரு திட்டத்தில் ஈடுபடும் கடைசிச் சந்தர்ப்பமாக மாற்ற விரும்புகின்றேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணயநிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத்தின் பங்கேற்புடன் நேற்றுக்காலை கொழும்பில் நடைபெற்ற விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2028ஆம் ஆண்டுக்குள் கடன்களை அடைப்பதற்குத் தேவையான பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை உருவாக்கமுடியும் என்று இலங்கை நம்புகின்றது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத்துக்கும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையே நேற்றுக் கொழும்பில் சந்திப்பொன்று நடை பெற்றுள்ளது.

இது தொடர்பில் கலாநிதி கீதா கோபிநாத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,

“பொருளாதார சீர்த்திருங்களில் இலங்கையின் வலுவான செயற்றிறன் மற்றும் உத்வேகத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் தொடர்பாக ஜனாதிபதி அநுரவுடன் கலந்துரையாடினேன். இந்தச் சீர்திருத்தங்களுக்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பு அனைத்து இலங்கையர்களுக்கும் நீடித்த நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்கு இன்றியமையாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இணைந்து பயணிக்க தமிழரசு முன்வரட்டும்: ஆனந்தசங்கரி அழைப்பு

தமிழரசுக்கட்சியினர் மீண்டும் எம்முடன் இணைந்து பயணிக்க வேண்டும். சுமந்திரனுக்கு இந்த அழைப்பை நான் விடுக்கின்றேன். தமிழர் விடுத்லைக் கூட்டணியில் மீண்டும் இணைவதன் மூலம் நன்மையான விடயங்களைப் பெறமுடியும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய அரசியலமைப்பு முறையிலான தீர்வையே நான் வலியுறுத்திவருகின்றேன். சிங்கள, இஸ்லாமிய மக்களும் அதனை வரவேற்றனர். அந்தத் தீர்வுத் திட்டத்துக்காக நாம் தொடர்ந்தும் முயற்சித்து வெற்றி பெறமுடியும். அதற்கான காலம் மீண்டும் உருவாகியுள்ளது.

அதனை உணர்ந்து செயற்பட வேண்டும். இன்று பதவிக்காக அலைகின்றனர். பதவிகளுக்காக கூட்டுச்சேருகின்றனர். நான் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை. இன்றைய அரசியல் சூழலைக் கருத்திற்கொண்டு அனைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து செயற்பட முன்வர வேண டும் – என்றார்.

பிரதமர் ஹரிணி IMF- ன் பிரதி முகாமைத்துவ இடையே சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பிரதமர் ஹரிணி அமர் சூரியவை திங்கட்கிழமை (16) அலரி மாளிகையில் சந்திதுள்ளார்.

இந்த சந்திப்பின் போது பிரதமர் ஹரிணி அமர் சூரிய சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத்திடம்,

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட பின்னர் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் செல்லும்போது, சர்வதேச பங்குதாரர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான இலங்கையின் வலுவான உறுதிப்பாட்டை நான் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பிரதமர் ஹரிணி அமர் சூரியவிடம்,

கடன் மறுசீரமைப்புக்கான அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையுடனான மற்றும் செயற்திறமான அணுகுமுறையை கலாநிதி கோபிநாத் பாராட்டியதுடன், இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் அரசாங்கத்தின் முயற்சிகளில் சர்வதேச நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதிலும் மீளக் கட்டியெழுப்புவதிலும் நாடு எதிர்கொள்ளும் சிக்கலான சவால்களையும் அவர் விசேடமாக குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்த சட்டகம், இலங்கையை போலவே நிதி மற்றும் கட்டமைப்பு சவால்களை எதிர்கொள்ளும் ஏனைய நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமைகிறது என்றும் கலாநிதி கோபிநாத் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் – ஈரான் போரில் உயிரிழப்புகள் அதிகரிப்பு

இஸ்ரேலுக்கு ஜூன் 16 அதிகாலை விடியலே ஈரானின் கடும் தாக்குதலோடுதான் தொடங்கியது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான மோதல் தொடங்கி திங்கள்கிழமையுடன் 4 நாட்கள் ஆகின்றன. ஆனால், இருதரப்பும் மோதலை முன்னெடுக்கும் வீச்சு, உலக நாடுகளை மிரள வைத்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் செவ்வாய்க்கிழமை மட்டுமே ஈரான் இராணுவத்தின் உளவுப் பிரிவு தலைவர் முகமது கசேமி உள்பட 4 முக்கியத் தலைவர்கள் உயிரிழந்தனர்.

சமீபத்திய நிலவரப்படி, ஈரானில் 220-க்கும் மேற்பட்டோரும், இஸ்ரேலில் 10-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்ததாக தகவல்கள் பதிவாகியுள்ளன. ஈரானில் உயிரிழந்தோரில் 90% பேர் அப்பாவி பொதுமக்களாவர். அடுத்ததாக, அணு ஆயுதங்கள் பற்றி ஈரான் பேசுகிறது. ஈரான் – இஸ்ரேல் மோதலில் அமெரிக்காவும் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் கூறியுள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மட்டுமல்லாது புவி அரசியலில் திகைக்க வைக்கும் திருப்பங்களை ஏற்படுத்தி வரும் இஸ்ரேல் – ஈரான் மோதலினால் ஏற்பட்ட சேதங்கள் மிகுந்த 4-வது நாளின் நிலவரம் குறித்த தொகுப்பு இது.

இன்று (திங்கள்கிழமை) அதிகாலை ஈரான் அடுத்தடுத்து இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசியது. ஈரானிய ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகளிலிருந்தும் ஏவுகணைகள் பாய்ந்தன. இதனால் பயங்கர சத்தம் ஏற்பட்டது. ஏவுகணைகள் மோதல் சத்தமும், நெரும்பும் அதிகாலையில் டெல் அவிவை உலுக்கியது. சிறிது நேரத்தில் டெல் அவிவ் நகரின் மீது கரும்புகை சூழ்ந்தது. டெல் அவிவ் மட்டுமல்லாது இஸ்ரேலின் ஜெருசலேம், பெட்டா டிக்வா நகரங்களையும் ஈரான் ஏவுகணைகள் தாக்கின.

அடுத்தடுத்த தாக்குதல்களால், திங்கள்கிழமை காலை இஸ்ரேல் இராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில், “பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட இடத்துக்குள் நுழைந்து மறு அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டது.

தாயகத்தின் முதுபெரும் கலை இலக்கிய பேராளர் வீரகத்திப்பிள்ளை பரந்தாமனின் இறுதி வணக்க நிகழ்வு

தாயகத்தின் முதுபெரும் கலை இலக்கிய பேராளரும் கல்விசார் ஆசிரியருமான பால பண்டிதர்வீ ரகத்திப்பிள்ளை பரந்தாமனின் இறுதிக் கிரிகைகள் இன்று (16) இடம்பெற்றன உடல்நல குறைவால் நேற்று முன்தினம் (14) அவர் காலமானார்.

அவர் வடமராட்சி புலோலியில் 1942 ஆம் ஆண்டு வீரகத்திபிள்ளை பார்வதி பிள்ளை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.கலை இலக்கிய துறையிலும் கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் பாடல் ஆசிரியராகவும் பல பட்டங்களை பெற்றிருந்த இவர் மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி, போடு போடு வீர நடை போடு, நெஞ்சினிலே நெருப்பேந்தி வாருங்கள், தம்பிகளே அன்பு தங்கைகளே போன்ற தாய எழுச்சி பாடல்களையும் எழுதி இருந்தார்.

அவரின் புகழுடல் புலோலி தெற்கில் உள்ள அன்னாரின் இல்லத்தில் உள்ள மாமறவர் மணிமண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதி வணக்க அஞ்சலியை தொடர்ந்து இன்று (16) தகனம் செய்யப்பட்டது.

மன்னாரில் இணைந்து சபை அமைக்க ஜனநாயக தமிழ் தேசிய  கூட்டணி முன்வர வேண்டும் : சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை

மன்னார் மாவட்ட மக்களின் அரசியல் நலன் சார்ந்து செயல்பட இலங்கை தமிழரசுக் கட்சியுடன்  ஜனநாயக தமிழ் தேசிய  கூட்டணி இணைந்து சபை அமைக்க முன்வர வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார் மாவட்ட மக்களின் அரசியல் நலன்  சார்ந்து செயல்படுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தயாராக இருக்கிறது. எனவே ஜனநாயக தமிழ் தேசிய  கூட்டணி மன்னார் மாவட்டத்தில் எங்களுடன் இணைந்து சபை அமைக்கும் விடயத்தில் முன் வருவார்கள் என நம்புவதாக வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (16) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடந்து முடிந்து தற்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கான சபைகளை அமைக்கும் நடவடிக்கைகள் உள்ளுராட்சி ஆணையாளரினால் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 24 ஆம் மற்றும் 25 ஆம் திகதிகளில் 5 சபைகளுக்கான தவிசாளர்களை தெரிவு செய்கின்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் நோக்கம் தமிழ் கட்சிகள் அதிக ஆசனங்களை கைப்பற்ற வேண்டும் என்பதே ஆகும். அதன் மூலம் சபைகளை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, நாங்கள் செயல்பட்டு இருந்தோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்கள் தெரிவின் போது கூட மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக வீட்டுச் சின்னத்தில் தமிழரசுக் கட்சியும் சங்கு சின்னத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் போட்டியிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் ஒரு இனக்கப்பாடு ஏற்பட்டு இருந்தது. ஒவ்வொரு சபைகளிலும் அதிக ஆசனங்கள் எடுக்கின்ற கட்சிக்கு மற்றைய கட்சி ஆதரவு வழங்குவதாக இனக்கப்பாடு ஏற்பட்டது.
அதனடிப்படையில் மன்னார் நகர சபை, மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபைகள் ஆகிய மூன்று உள்ளூராட்சி சபைகளிலும் ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடுகின்ற போது இலங்கை தமிழரசு கட்சி அதிக ஆசனங்களை பெற்றுள்ளது.

தொடர்ச்சியாக 3 தடவைகள் பேச்சுவார்த்தை நடைபெற்று மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையில் மாந்தை மேற் பிரதேச சபையில் தவிசாளர் தெரிவில் முதல் 2 வருடம் தமிழரசுக் கட்சிக்கும் அடுத்த 2 வருடம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் வழங்குவது என இரு தரப்பினருக்கும் உடன்பாடு எட்டப்பட்டது.
மாந்தை மேற்கில் தமிழரசுக் கட்சிக்கு அதிக ஆசனங்கள் இருக்கின்ற காரணத்தினால் எங்களுக்கு முதல் 2 வருடங்களை வழங்க கோரிக்கை விடுத்தோம்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் யோசித்து விட்டு கூறுவதாக சொன்னார்கள். ஆனால் அவர்கள் இன்று வரை எந்த முடிவையும் எமக்கு அறிவிக்கவில்லை என்று வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

குறித்த மூன்று சபைகளுக்குமான தவிசாளரை நாங்கள் அறிவிக்க இருக்கின்றோம். நானாட்டான் பிரதேச சபை குறித்து கட்சிகளுக்கு இடையிலான இணக்கப்பாட்டின் பின்னர் முடிவுகள் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக ஆசனம் பெற்ற சபைகளில் தமிழ் கட்சிகள் முன் வந்து நிபந்தனையற்ற வகையில் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும். மேலும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் பதவியை முதல் 2 வருடங்கள் தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய 2 வருடங்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் வழங்க இலங்கை தமிழரசு கட்சி தயாராக இருக்கிறது என்றும் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச வர்த்தக போர் காரணமாக இலங்கையின் ஏற்றுமதி தொழில்துறை பாதிப்பு : வொல்கர் ரெக் எச்சரிக்கை

சர்வதேச வர்த்தக போர் காரணமாக இலங்கையின் ஏற்றுமதி தொழில்துறை மிகப் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் வொல்கர் ரெக் எச்சரித்துள்ளார்.

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 59வது அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சமீபத்தைய வரிகள் குறித்தே அவர் தமது உரையில் முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அமெரிக்க வர்த்தகப் போரின் அதிர்ச்சிகள் மூன்றாம் உலக நாடுகளை சுனாமியின் வலுவோடு தாக்கும் என வொல்கர் ரெக் தெரிவித்துள்ளார். கரீபியன் நாடுகள், அபிவிருத்தி அடைந்துவரும் சிறிய தீவு நாடுகள் ஆகியவை மோசமான பாதிப்பை எதிர்கொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

இலங்கை, பங்களாதேஷ், கம்போடியா, வியட்நாம் போன்ற ஏற்றுமதி தொழில்துறையை அடிப்படையாகக் கொண்ட நாடுகள் பெரும் பேரழிவு பாதிப்புகளை எதிர்கொள்ளும் எனவும் வொல்கர் ரெக் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர், வடக்குக்கு விஜயம் செய்ய வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி யோகராசா கலாறஞ்சினி இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
அத்துடன், செம்மணி சிந்துபாத்தி மனித புதைக்குழி விடயம் மூடி மறைக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அந்தப் பகுதியினை பார்வையிட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு மாநகர சபை தேசிய மக்கள் சக்தி வசம்

கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இதன்படி, மாநகர முதல்வராக வ்ராய் காலி பல்தசார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் 61 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ரிசா சரூக் 54 வாக்குகளை பெற்றார்
இரண்டு வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

கொழும்பு மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (16) முற்பகல் 9.30 க்கு ஆரம்பமானது.
எனினும், இந்த அமர்வில் முதல்வரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு பகிரங்கமாக நடத்தப்பட வேண்டுமா? இரகசியமாக நடத்தப்பட வேண்டுமா? என்பது குறித்து இரண்டு தரப்புக்குமிடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இறுதியில், முதல்வரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பை இரகசிய வாக்கெடுப்பாக நடத்துவதற்கு தீரமானிக்கப்பட்டது. இதனையடுத்து, மேல் மாகாண ஆணையாளர். மாநகர சபை உறுப்பினர்கள் 117 பேரின் பெயர்களையும் வாசித்தார்

அதனடிப்படையில், உறுப்பினர்கள் தமது இரகசிய வாக்கை பதிவு செய்தனர்
இதேவேளை, கொழும்பு மாநகர சபையின் பிரதி முதல்வராக தேசிய மக்கள் சக்தியின் ஹேமந்த குமார நியமிக்கப்பட்டுள்ளார்.