நான் தொடர்ந்தும் சேவையாற்றுவேன்-இராஜினாமா கடிதத்தில் கோட்டாபய தெரிவிப்பு

இலங்கை ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் தொடர்ந்தும் சேவையாற்றுவேன் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று வாசிக்கப்பட்ட அவரது இராஜினாமா கடிதத்திலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பாராளுமன்றம் கூடிய போது சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க வாசித்தார்.

அந்தக் கடிதத்தில், ஜனாதிபதியாக பதவியேற்ற 3 மாதங்களுக்குள் கோவிட் தொற்று உலகம் முழுவதையும் பாதித்துள்ளது.

அந்த நேரத்தில் இலங்கையை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து திருப்தியடைவதாக கோட்டாபய  தெரிவித்துள்ளார்.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பொது முடக்கங்களை அமுல்படுத்தியதன் மூலம், நாடு அந்நியச் செலாவணியை இழந்ததாகவும், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.