நிபந்தனைகளுடன் இலங்கைக்கு உதவுங்கள்! சர்வதேசத்திடம் கர்தினால் கோரிக்கை

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, நேர்மை மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தெளிவான நிபந்தனைகளுடன் இலங்கைக்கு உதவிகளை வழங்குமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மூன்று காரணிகளால், இலங்கையின் ஜனநாயகம் பாரியளவில் சிதைவடைந்துள்ளதாக மல்கம் ரஞ்சித் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டத்தின் ஆட்சி படிப்படியாக சீர்குலைந்து, நீதித்துறையில் அரசியல் தலைவர்களின் தலையீடானது, நீதியை ஒரு பிரச்சினையாக மாற்றியுள்ளது.

ஊழல்களை மேற்கொண்டு ஒரு சில குடும்பங்கள் மட்டுமே முடிவில்லாமல் சம்பாதித்து வருகின்றன. பல குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது, அவை அடக்குமுறைக்கு ஆளாகின்றன. எனவே இந்த தவறுகளை சரி செய்யப்படுவதை உறுதிப்படுத்த சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கர்தினால் கோரியுள்ளார்.

தவறான கொள்கைகளாலும், தவறான பொருளாதார நிர்வாகத்தாலும், நிதி நெருக்கடி, கடுமையாக மாறியுள்ளது. அரசாங்கங்களின் தவறான திட்டங்களால் நாட்டில் பெரும் கடன் பிரச்னை ஏற்பட்டு, அதிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியவில்லை.

அதனால், தேசிய வருமானமும், உற்பத்தித் திறனும் குறைந்துள்ளதால், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.