இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள்: தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறும், பொதுமக்கள் அளிக்கு உதவிகள் மூலம் இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழகத்திலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். இதற்கான மத்திய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழகத்தில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இந்தச் சூழ்நிலையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது. எனவே மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் வழங்கிடும் உதவிகள் இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்களாக வாங்கி அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நன்கொடை வழங்க விரும்புவோர் பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் வழங்கலாம்.

> மின்னணு பரிவர்த்தனை மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர் நாட வேண்டியது: https://ereceipt.tn.gov.in.cmprf/cmprf.html

வங்கி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தலைமைச் செயலக கிளை, சென்னை – 600 009 சேமிப்பு வங்கி கணக்கு எண்: 117201000000070, IFSC குறியீடு : IOBA0001172, CMPRF பான் எண் : AAAGC0038F , SWIFT குறியீடு : IOBAINBB001 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய அலுவலகம், சென்னை. (வெளிநாட்டு பங்களிப்புகளுக்கு).

ECS மூலம் ஆன்லைனில் தொகையை அனுப்பும் பங்களிப்பாளர்கள், அவர்கள் வருமான வரி விலக்கு பெறுவதற்கும் அதிகாரபூர்வ ரசீதை அனுப்புவதற்கும் பங்களிப்பாளரின் பெயர்,பங்களிப்பு தொகை,வங்கி மற்றும் கிளை,பணம் அனுப்பும் தேதி, பரிவர்த்தனை குறிப்பு எண்,தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி,மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் / கைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும்.

UPI-VPA id : tncmprf@iob மற்றும் PhonePe, Google Pay, Paytm, Amazon Pay, Mobikwik etc. போன்ற பல்வேறு மொபைல் செயலிகள் மூலம் வழங்கலாம்.

> காசோலை, வரைவு காசோலை மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர்: The Joint Secretary to Government & Treasurer, Chief Minister’s Public Relief Fund, Finance (CMPRF) Department, Secretariat, Chennai 600 009,Tamil Nadu, India. அரசு இணைச் செயலாளர் & பொருளாளர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதி, நிதி (மு.பொ.நி.நி) துறை, தலைமை செயலகம், சென்னை 600 009, தமிழ் நாடு, இந்தியா.என்ற முகவரிக்கு காசோலையாகவோ, வரைவு காசோலையாகவோ அனுப்பிவைக்கலாம். அனுப்பி வைக்கப்பட வேண்டிய இவற்றை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும் வழங்கலாம்.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவோர் 80-G ன் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News