வடக்கு கிழக்கில் சிங்கள மக்களை குடியேற்ற அனைத்து நவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது-இ.சாணக்கியன்

வடக்கு கிழக்கில் சிங்கள மக்களை குடியேற்ற

“வடக்கு கிழக்கில் சிங்கள மக்களை குடியேற்ற அனைத்து நவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. மகாவலி, வன இலாகா, தொல்லியல் திணைக்களம் என அனைத்து வழிகளிலாலும், காணிகள் துண்டாடப்படுகின்றன” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் இ.சாணக்கியன்   தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர்,

“நான் இங்கு பொய் பேச வரவில்லை. 29 வயதிலே உண்மை பேச இங்கு வந்தேன். மணல் பேமிற்றை பெற இங்கு வரவில்லை. என்னை பேச விடாமல் யாரும் தடுக்க முடியாது. இது என்னுடைய நேரம் நான் கதைப்பேன் நீங்கள் கேளுங்கள்.

கிழக்கு மாகாணத்தில் மரமுந்திரி செய்கை என்ற பெயரில் 500 பேர் வரை, வெளிமாவட்ட நபர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதே போல நீங்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 500 பேரை அனுராதபுரத்தில் அனுமதிப்பீர்களாக?.

அரசு சம்மதம் தெரிவித்தாலும், மக்கள் விட மாட்டார்கள். ஏன் என்றால் “எமது நிலம் எமக்கு வேண்டும்“ என்பதில் அனைவரும் தெளிவாக இருக்கிறார்கள். இதற்காகத் தான் காணி அதிகாரங்களை மாகாணசபைக்கு தருமாறு கோருகின்றோம். கிழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சேனைப் பயிர் செய்தவர்களை விரட்டுகிறீர்கள்.

முல்லைத்தீவில் குறுந்தூர் மலையில் சூலத்தை இழுத்து எறிந்து, புத்தர் சிலையை வைக்கிறீர்கள். உங்கள் பிரதேசத்தில் நாம் ஏதும் இப்படி செய்கிறோமா?. – என்றார்.

Tamil News