அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கான உணவு நெருக்கடி – இறைச்சி, மீன், முட்டை இடைநிறுத்தம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அரச வைத்தியசாலைகளில் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான உணவு வழங்குவதிலும் பெரும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அரச வைத்தியசாலைகளில் நோயாளர்கள் மற்றும் பணிக்குழாமினருக்கு ஒரு நேர உணவுக்காக வழங்கப்படும் இறைச்சி, மீன் மற்றும் முட்டை என்பன தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வைத்தியசாலைகளில் பரிந்துரைக்கப்பட்ட உணவுகளை கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவிலை போதனா வைத்தியசாலை மற்றும் மஹரகம அபேக்ஷா உள்ளிட்ட வைத்தியசாலைகளிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு ரிச்வே சிறுவர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் சிறுவர்களுக்கு காலை நேரம் வழங்கப்படும் பால்தேநீரும் நிறுத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அரச வைத்தியசாலைகளில் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான உணவு வழங்குவதிலும் நெருக்கடியேற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil News