முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கதறக்கதற எரித்த சாபத்தையே இந்த ஆட்சியாளர்கள் அனுபவித்து வருகிறார்கள் – ரவூப் ஹக்கீம் 

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கதறக்கதற

கொரோனா வைரஸால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கதறக்கதற எரித்த சாபத்தையே இந்த ஆட்சியாளர்கள் அனுபவித்து வருகிறார்கள் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாட்டினுடைய பொருளாதார நெருக்கடியால் நாட்டு மக்களை படுபாதாளத்துக்குள் அரசாங்கம் தள்ளியுள்ளது. நாட்டு மக்களின் சாபத்தைப் பெற்ற அரசாங்கமாக இது இருக்கிறது. வீட்டுக்குப் போங்கள் என்று சொல்லுமளவுக்கு இன்றைய ஆட்சியாளர்கள் மாறியுள்ளதென்றும்  அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை இளைஞர் காங்கிரஸின் 5ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று மாலை இளைஞர் ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“இன்றைய ஆட்சியாளர்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று பிச்சை வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அண்மையில் இந்தியா ஒரு பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. இது இன்னும் இரண்டு மாதத்திற்குள் முடிந்து விடும். அதற்கு பிறகு எந்த நாட்டில் போய் வாங்குவது.

மீண்டும் இவ்வாறான நெருக்கடி ஏற்படும். இவ்வாறான நிலைமை கடந்த காலங்களில் கிரேக்கத்திலும், லெபனான் போன்ற நாடுகளில் ஏற்பட்டிருந்தன. அந்த நாடுகளில் அரசாங்கங்கள் மாறி மாறி ஆட்சியை அமைத்தாலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தன. அவ்வாறான நிலைமைதான் எமது நாட்டுக்கும் ஏற்படப் போகின்றது” என்றார்.

Tamil News