அமெரிக்கா- லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: அதிபர் ஜோ பைடன் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், கலிபோர்னியா ஆளுநரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தவறி விட்டனர் என்று புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் சாடியுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் கட்டுப்பாடு இல்லாமல் பரவி வரும் காட்டுத்தீக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

காட்டுத்தீ காரணமாக பரவலான அழிவு ஏற்பட்டு, அங்கு வசித்து வரும் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, ஹொலிவுட்டுக்கான குறியீடாக விளங்கும் ஹொலிவுட் மலைகளில், சன்செட் என்றழைக்கப்படும் புதிய தீ வேகமாக பரவி வருகிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத்துறையின் கூற்றுப்படி, சன்செட் தீ தற்போது 20 ஏக்கர் வரை பரவியுள்ளது. மேலும் அது ரன்யான் கன்யோன் முதல் வாட்டலஸ் பார்க் இடையேயான பகுதியை எரித்து நாசமாக்கியுள்ளது. ஹொலிவுட் அடையாளத்தை தவிர்த்து, ஆண்டு தோறும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் டோல்பி தியேட்டரும் சன்செட் தீ தாக்கும் அபாயத்தில் உள்ளது. அதேபோல் ஹொலிவுட்டன் பிற அடையாளங்களான, ஹொலிவுட் பவுல் வெளிப்புற ஆம்பிதியேட்டர் மற்றும் ஹொலிவுட் வாக் ஆஃப் ஃபேம் போன்றவையும் தீ தாக்கும் அபாயத்தில் உள்ளன.

புதிய தீ பரவல் காரணமாக லாரல் கன்யான் பவுல்வார்ட் முதல் முல்ஹேல்லண்ட்-ன் சில பகுதிகளில் கட்டாய வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அது பிரபலங்களின் குடியிருப்புக்கு பெயர் பெற்ற ஹொலிவுட் பவுல்வர்ட் தெற்கே வரை நடைமுறைப்படுத்தப்பட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸுக்கு மேற்கே பாலிசேட்ஸ் தீ விபத்து பகுதிக்கு அருகே உள்ளவர்களும் வெளியேறும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், ஹர்ஸ்ட் தீ விபத்துக்கு அருகில் உள்ள சான் ஃபெர்னான்டோ பள்ளத்தாக்கில் உள்ளவர்களும் தங்களின் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. ஈட்டன் தீ விபத்து காரணமாக சாண்டா மோனிகா மற்றும் அல்டாடேனாவின் சில பகுதிகளிலும் மக்கள் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

காட்டுத்தீ காரணமாக தங்களின் உடமைகளை விட்டு விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை சுமார் 1,37,000 பேர். இதனிடையே தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சுமார் 17 மில்லியன் மக்கள் வியாழக்கிழமை வரை புகை மண்டலம் மற்றும் துசுகளில் வசிக்கவேண்டியது இருக்கும் எனக்கூறப்படுகிறது.

புதன்கிழமை மதிய தகவலின் படி, 1.5 மல்லியன் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாக PowerOutage.us தெரிவித்துள்ளது. அதேபோல், வெண்டியுரா கவுன்டியில் சுமார் 3,34,000 மக்களும், லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டியில் 9,57,000 பேரும் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜனவரி 20-ம் திகதி பதவியேற்க உள்ள ட்ரம்ப், தற்போதைய காட்டுத்தீ பிரச்சினையை எதிர்த்து போராடுவதற்கு தேவையான ஆதாரங்களின்றி ஜோ பைடன் தன்னை விட்டுச் செல்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

இதுகுறித்து தனது சமூக வலைதளமான ட்ரூத் சோசியலில் ட்ரம்ப் கூறுகையில், “தீயணைப்பு இயந்திரங்களில் தண்ணீர் இல்லை, FEMA வில் பணம் இல்லை. இதைத்தான் ஜோ பைடன் எனக்கு விட்டுச்செல்கிறார். நன்றி ஜோ!” என்று தெரிவித்துள்ளார்.