மாவீரர் நாள் தடையுத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எதிர்மனு தள்ளுபடி-முன்னாள் அரசியல் கைதி செ. அரவிந்தன்

தடையுத்தரவிற்கு எதிராக தாக்கல் 

மாவீரர் நாளுக்கு எதிராக வழங்கப்பட்ட தடையுத்தரவிற்கு எதிராக தாக்கல்  செய்யப்பட்ட எதிர்மனு   தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அரசியல் கைதி செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (24) எதிர்மனு தாக்கல் வழக்கிற்கு நீதிமன்றிற்கு சென்றுவிட்டு ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மாவீரர் நாளினை நினைவு கூருவதற்கு வவுனியா நீதிமன்றினால் 8 பேருக்கு தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

வவுனியா நீதிமன்றினால் 8 நபர்களுக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவில் பிரதிவாதியாக கூறப்பட்டிருக்கின்ற செ.அரவிந்தனால் 22 ஆம் திகதி வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் எதிர் மனு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கின்  முழுமையான தீர்ப்பு இன்று புதன்கிழமை (24) வழங்கப்படும் என  நீதவானால் தெரிவிக்கப்பட்டிருந்தது.  அந்தவகையில் சுகாதார பிரிவினரதும், காவல்துறையினரின் அறிக்கையின் படியும் நீதிமன்ற கட்டளையை நீக்க முடியாதென கூறி குறித்த எதிர்மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக இன்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.