குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் தினமும் குவியும் மக்கள்-கட்டுப்படுத்த முடியாது அதிகாரிகள் அவதி

இலங்கையில் கடவுச்சீட்டுகளின் தேவை பாரியளவு அதிகரித்து, பிராந்திய அலுவலகங்களில் நிலைமை கட்டுப்படுத்த முடியாத அளவிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு நாள் சேவையின் கீழ் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச் சீட்டுகளின் சராசரி எண்ணிக்கை 2500 ஆகும். எனினும் ஏப்ரல் மாத இறுதியில் இருந்து நிலவும் அசாதாரண தேவையினால் இந்த சேவையை வழங்க முடியாதுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்குவதற்காக திணைக்களம் தனது சேவைகளை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.

சேவை காலத்தை அதிகரித்த போதிலும் பிராந்திய அலுவலகங்களில் நிலைமை இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். வெளிநாட்டு பயணச் சேவைகளுடன் தொடர்புடைய புகைப்படக் கலைஞர்களும் வழக்கத்திற்கு மாறான தேவை மற்றும் தொழில்நுட்ப பலவீனங்கள் காரணமாக சிக்கல்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil News