விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு அரசு உடனடித் தீர்வு காண கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் தற்போதைய அறுவடைக்கால சவால்கள், நெல் கொள்வனவுப் பிரச்சினைகள் மற்றும் நீண்டகாலத் தேவைகள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளரும் முழுநேர விவசாயியுமான சந்துருலிங்கம் கிருஷ்ணசந்திரன் அவர்கள் இன்று (16) செவ்வாய்க்கிழமை விசேட கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

அரசாங்கத்தின் சாதகமான நடவடிக்கைகள் சிலவற்றை வரவேற்ற அதேவேளை, உள்ளூர் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரத்தியேக சவால்களுக்கு அரசாங்கம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த கால அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில், தற்போதைய அரசு விவசாயிகளுக்குப் பெரும் சலுகைகளையும் மானியங்களையும் வழங்கியுள்ளது.

முன்னர் ஹெக்டேயருக்கு வழங்கப்பட்ட 15,000 ரூபாய் உர மானியத்தை, இந்த அரசாங்கம் இரண்டு மடங்காக அதிகரித்து ஹெக்டயருக்கு 30,000 ரூபாயாக வழங்கியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளின் யுத்த சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டு, தனியார் நிறுவனங்கள் உர விலையை உயர்த்த முயன்றபோதும், அதனை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து 10,100 ரூபாய் என்ற நியாயமான விலையில் விவசாயிகளுக்கு வழங்கியதை சிவில் சமூக செயற்பாட்டாளர் பாராட்டினார்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுநீர்ப்பாசனக் குளங்களின் கீழ் பரவலாக நெல் அறுவடை ஆரம்பமாகியுள்ளது.

ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்வதற்கு 125 முதல் 135 ரூபாய் வரை செலவாகிறது.

தற்போது சந்தையில் ஈரநெல் மூடை ஒன்று 4,500 முதல் 4,700 ரூபாய் வரையிலும், காய்ந்த நெல் 6,000 ரூபாய் வரையிலும் கொள்வனவு செய்யப்படுகிறது.

அரசாங்கம் அறிவித்துள்ள நெல்லுக்கான நிர்ணய விலையை இடைத்தரகர்களின் சுரண்டல்களுக்கு இடமளிக்காது முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுடன், இந்த ஜூன் மாத இறுதிக்குள் உத்தியோகபூர்வ விலை நிர்ணயத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

பொதுவாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நெல் அறுவடை முழுமையாக நிறைவடைந்த பின்னரே அரசாங்கம் நெல் நிர்ணய விலையை அறிவிக்கிறது. இதனால் மட்டக்களப்பு விவசாயிகளுக்குப் பலன் கிடைப்பதில்லை. மாறாக, அதன் பின்னரே அறுவடையைத் தொடங்கும் பொலன்னறுவை, அனுராதபுரம் போன்ற மாவட்ட விவசாயிகளுக்கே இதன் நன்மைகள் அதிகம் கிடைக்கின்றன. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் பெரும் சொத்தாகக் கருதப்படும் ‘தேவாபுரம் அரிசி ஆலை’ 1990 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் செயலிழந்தது. இன்றுவரை எந்தவொரு அரசாங்கமும் இதனைப் புனரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதைய அரசு தனது ஆட்சிக்காலத்திற்குள் இந்த ஆலையை மீள இயங்கச் செய்வதன் மூலம், மாவட்டத்தின் நெல் உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும்.

நெல் கொள்வனவுச் சபை கடந்த காலங்களில் ஒரு நெற்காணி ஆவணப் படிவத்திற்கு (PLR) 5,000 கிலோ நெல்லைக் கொள்வனவு செய்தது. ஆனால், கடந்த பெரும் போகத்தின் போது அது 2,500 கிலோவாக (37 மூடைகள்) பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பெருமளவு நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் வீடுகளில் முடக்கி வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

விவசாயிகளின் தற்போதைய இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் அல்லது ஏனைய அமைப்புகள் (ஏற்கட்சிகள்) சுயலாப அரசியலுக்காக கவடா நாடகங்களை அரங்கேற்ற முயன்று வருகின்றன. அரசாங்கம் இதற்கு எக்காரணம் கொண்டும் இடமளிக்கக் கூடாது.

விவசாயிகளின் நெல்லுக்கு முறையான நியாயமான விலையையும், உரிய மானியங்களையும் தங்குதடையின்றி வழங்கி, மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இந்த அரசு பாதுகாக்க வேண்டும் என சிவில் சமூக செயற்பாட்டாளர் சந்துருலிங்கம் கிருஷ்ணசந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.