அசாதாரண நிலையால் அத்தியாவசிய பொருள்களை எடுத்து வருவதில் தாமதம் – அரசாங்க அதிபர் விடுத்துள்ள கோரிக்கை

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை காரணமாக அத்தியாவசிய பொருள்களை எடுத்து வருவதில் தாமதங்கள் ஏற்படலாம் என்பதால் யாழ்ப்பாணம் வர்த்தகர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் பொறுப்புடன் செயற்பட்டு பொதுமக்களுக்கு பொருள்களை வழங்கவேண்டும் என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய நிலையில் பொருள்களை பதுக்குதல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வதனை வர்த்தகர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் தவிர்க்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“சில இடங்களில் வர்த்தகர்கள் பொருள்களை பதுக்குதல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அவை தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை கண்காணிப்புகளை மேற்கொள்ளும்.

தென்னிலங்கையிலிருந்து அத்தியாவசியப் பொருள்களை எடுத்து வருவது ஒரு வாரம் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை பகிர்ந்து விற்பனை செய்வது தொடர்பிலும் தற்போதைய நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பிலும் யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தக சங்கங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுடன் பேச்சு நடத்தப்படவுள்ளது” என்றும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

Tamil News