வேலைவாய்ப்புக்காக வௌிநாடு செல்வோரின் உயிரியளவியல் தரவுகளை பெற்றுக்கொள்ள தீர்மானம்

வேலைவாய்ப்புக்காக வௌிநாடு செல்பவர்களின் உயிரியளவியல் (Biometrics) தரவுகளை பெற்றுக்கொள்ள தொழிலாளர் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஆட்கடத்தலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆட்கடத்தலை தடுக்கும் தேசிய செயற்குழு, இந்த செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போர்வையில் இடம்பெறும் ஆட்கடத்தலில் இருந்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2023 ஜனவரி மாதத்தில் 24,236 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெவ்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

உயிரியளவியல் (Biometrics) என்பது மனிதர்களின் உடல் அல்லது நடத்தை சார்ந்த உள்ளார்ந்த தனிப்பட்ட கூறுபாட்டைத் தனித்துவமான முறையில் அடையாளம் காண்பதற்கான அளவீடுகளும் கணக்கீடுகளும் சார்ந்த அறிவியல் முறையாகும்.