வடக்கில் ஒரேநாளில் 26 பேரை பலியெடுத்த கொரோனா

வடக்கில் ஒரேநாளில் 26 பேரை பலியெடுத்த கொரோனாவடக்கில் ஒரேநாளில் 26 பேரை பலியெடுத்த கொரோனா: வடபகுதியில் நேற்றைய தினம் கொரோனாவினால் 26 பேர் உயிரிழந்தனர் என அறிக்கையிடப்பட்டுள்ளது. வவுனியாவில் 16 பேரும், யாழ்ப்பாணத்தில் 10 பேரும் பலியாகியுள்ளார்கள். ஒரேநாளில் வடபகுதியில் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பது இதுதான் முதன்முறையபகும்.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று 16 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனாத் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 16 பேர் இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

நாள் ஒன்றில் வடக்கில் உள்ள மாவட்டம் ஒன்றில் பதிவாகிய அதிகபட்ச கொரோனா மரணங்கள் இதுவாகும். இந்நிலையில் மரணித்த 16 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று 10 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவ அறிக்கைகள் ஊடாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் மாவட்டச் செயலகம் ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையில் எண்மர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் 02 பேர், நல்லூரில் 02 பேர், சண்டிலிப்பாயில் ஒருவர், உடுவிலில் ஒருவர், தெல்லிப்பழையில் ஒருவர், கோப்பாயில் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று உயிரிழந்த பெண் ஒருவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்றுக் காலை தென்மராட்சியின் மட்டுவில் பகுதியில் உயிரிழந்த 65 வயதுப் பெண்ணுக்கும் அன்டிஜன் பரிசோதனை ஊடாக கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் யாழ்ப்பாணத்தில் நேற்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாகும்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021