இலங்கையில் உணவுப் பஞ்சம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பெரும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதையடுத்து அங்கு வாழவே முடியாத காரணத்தினால் தமிழ்நாட்டிற்கு தப்பிவந்துள்ளதாக தனுஷ்கோடிக்கு அருகேயுள்ள மணல் திட்டில் மீட்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
தனுஷ்கோடிக்கு – அரிச்சல் முனைக்கு அருகே உள்ள 4ம் மணல் திட்டு பகுதியில் இன்று காலை காணப்பட்ட ஆறு பேரை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டு மண்டபம் முகாமுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு நடத்திய விசாரணையின் போதே இலங்கைத் தமிழர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் நாளாந்தம் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வது பெரும் சிரமமாக உள்ளது. கடும் உணவுப் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இனிமேலும் அங்கு வாழமுயாத நிலை ஏற்பட்டுள்ளதனால் தமிழ்நாட்டிற்கு தப்பி வந்துள்ளதாக அவர்கள் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன், மேரிகிளாரி அவர்களுடைய (நிசாத்) 4 மாத கைக்குழந்தையுடனும் மற்றும் கியூரி, எஸ்தர், மோசஸ் ஆகிய ஆறுபேரே இவ்வாறு அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர்.
சட்டவிரோமாக கடல்வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் ஆறு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தமிழக காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.