அமெரிக்காவுக்கு அனுப்பிய 6 இலட்சம் டொலர் காணாமல் போனமை குறித்து சி.ஐ.டி விசாரணை!

இலங்கை தபால் திணைக்களத்தினால் அமெரிக்க தபால் சேவைக்கு செலுத்தப்பட்ட 6 இலட்சம் அமெரிக்க டொலர், உரிய தரப்பைச் சென்றடையாமல் மாயமானமை குறித்து  விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம்  புதன்கிழமை (06) நீதிமன்றத்துக்கு  அறிவித்தது.

கொழும்பு கோட்டை நீதவான் பசந் அமரசேன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தகவலை தெரிவித்திருந்தனர்.

தபால்மா அதிபரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணையில், இரண்டு சந்தர்ப்பங்களில் குறித்த நிதி அனுப்பப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பான மின்னஞ்சல் பரிமாற்றங்களைக் கையாண்ட அதிகாரிகள் மற்றும் பிரதி பிரதி தபால்மா அதிபர் ஆகியோரிடம் ஏற்கனவே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், இதுவரை சந்தேகநபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என அதிகாரிகள் மன்றில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிவான், இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவை  தபால் திணைக்களத்துக்கு நேரில் சென்று தள ஆய்வு ஒன்றினை முன்னெடுக்குமாறும் உத்தரவிட்டார். குறித்த நிதி மோசடி தொடர்பாகக் கணினி குற்றங்கள் சட்டம், பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் இலங்கைத் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.