இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி இலங்கையில் நிற்கிறது சீனாவின் உளவு கப்பல்

செயற்கைக்கோள்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கண்காணிக்கும் திறன் கொண்ட சீனக் கப்பல், இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் துறைமுகமான ஜியாங்யினிலிருந்து யுவான் வாங் 5 என்ற ஆய்வு கப்பல், நேற்று காலை 8.30 மணியளவில் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததாக துறைமுக கேப்டன் நிர்மல் டி சில்வா தெரிவித்துள்ளார்.

சீனாவின் உளவு கப்பல் அம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்படுவது குறித்து இந்தியா கவலை தெரிவித்த நிலையில், கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை சில வாரங்களுக்கு முன்பு கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் சீனாவின் கடும் அழுத்தம் காரணமாக இந்த கப்பலுக்கு சனிக்கிழமையன்று அனுமதி வழங்கப்பட்டது.

இலங்கை கடற்பரப்பில் இருக்கும் போது அதன் தானியங்கி அடையாள அமைப்பை (AIS) ஓன் செய்து வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் யுவான் வாங் 5 கப்பலை துறைமுகத்தில் நிறுத்த அனுமதிக்கப்பட்டது. மேலும் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் இந்த கப்பலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் ஆகஸ்ட் 16 மற்றும் 22 க்கு இடையில் எரிபொருள் நிரப்பும் நோக்கங்களுக்காக மட்டுமே கப்பல் வருகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.

கப்பலின் கண்காணிப்பு அமைப்புகள் மூலம் இந்தியாவை உளவு பார்க்க வாய்ப்புள்ளதாக இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை பாதிக்கும் எந்தவொரு விவகாரத்தையும் மத்திய அரசு கவனமாகக் கண்காணித்து, அவற்றைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது” என்று அவர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், “ இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக சில நாடுகள் பாதுகாப்புக் கவலைகள் என்று கூறுவது முற்றிலும் நியாயமற்றது. சீனாவின் கடல்சார் அறிவியல் ஆய்வு நடவடிக்கைகளை பகுத்தறிவு வெளிச்சத்தில் பார்க்க வேண்டும். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை சீர்குலைப்பதை நிறுத்துமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினரை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99 ஆண்டுகளுக்கு 1.12 பில்லியன் டொலருக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. சீனா இலங்கைக்கு அதிகளவில் கடன் வழங்கியுள்ளது. இலங்கையில் உள்ள மொத்த வெளிநாட்டுக் கடனில் 10 சதவீதத்திற்கும் அதிகமான கடனை சீனா வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தால் இந்த கப்பல் நிர்வகிக்கப்படுகிறது. 11000 மெட்ரிக் டன் எடையை சுமக்கும் திறன் இந்த கப்பலுக்கு உள்ளது. யுவான் வாங்-5 கப்பல் 222 மீற்றர் நிளமும், 26 மீற்றர் அகலமும் கொண்டது. இந்தக் கப்பலில் இருந்து 750 கிலோமீற்றர் தூரம் வரை கண்காணிக்கும் திறன் கொண்டது. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து தமிழ்நாடு 150 கிலோ மீட்டரில் உள்ளது. எனவே கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களை இந்த கப்பல் கண்காணிக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

நன்றி- காமதேனு