சீனாவுடனான தனது சொந்த வியாபார நடவடிக்கைகளை மறைக்கிறார் டிரம் – ஓபாமா

முன்னாள் ஜனாதிபதி ‘பராக் ஒபாமா’ புதன்கிழமையன்று பிலடெல்பியாவில் “பைடன்” சார்பாக உக்கிரமான பிரச்சார உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். அதிபர் ‘டிரம்ப்பை’ பென்சில்வேனியாவில் பிரச்சாரம் செய்வது, கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த தவறியது மற்றும் சீனாவுடனான தனது சொந்த வியாபார நடவடிக்கைகளை மறைப்பது குறித்து ‘ஒபாமா’ கேலி செய்தார்.

“அவர் இரகசிய சீன வங்கிக் கணக்கு ஒன்றினை வைத்திருப்பதால் சீனாவுடன் தொடர்ந்து தனிப்பட்ட வியாபாரம் செய்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அது எப்படிச் சாத்தியம்?” என ‘ஒபாமா’ தெற்கு பிலடெல்பியா விளையாட்டு வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் குழுமியிருந்த ஆதரவாளர்கள் கூட்டத்தை நோக்கிக் கேட்டார்.

சீன வங்கி ஒன்றில் உள்ள ‘டரம்பின்’ நிதி இருப்புக்களை வெளிப்படுத்திய ‘நியூயார்க் டைம்ஸ்’ அறிக்கையையே ‘ஒபாமா’ குறிப்பிடுகிறார் . அந்த நேரத்தில் ‘பைடனை’ அந்த நாட்டுடன் உறவு வைத்திருப்பதாக ‘ட்ரம்ப்’ விமர்சிக்கிறார் எனக் கேலி செய்தார்.

“எனக்கு ஒரு ரகசிய சீன வங்கிக் கணக்கு இருந்தால் உங்களால் கற்பனை செய்ய முடியுமா?” “நான் மறுதேர்தலில் போட்டியிடும் போது சீன வங்கிக் கணக்கு இரகசியமாக இருந்திருந்தால் உங்களால் கற்பனை செய்ய முடியுமா?” “அவர்கள் என்னை ‘பெய்ஜிங் பாரி’ என்று அழைத்திருப்பார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

“வெளிநாட்டினருக்குப் பணத்தைச் செலுத்த வேண்டிய ஒரு ஜனாதிபதியைக் கொண்டிருப்பது ஒரு சிறந்த யோசனையல்ல” என்று ‘ஒபாமா’ கூறினார். உயர்நிலைப் பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது ஐஸ்கிரீம் கடையொன்றில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது நான் செலுத்திய வரி ‘ட்ரம்ப்’ செலுத்திய வரியிலும் அதிகமாக இருந்திருக்கலாம் என்று கூறினார். ‘டிரம்ப்’ ஜனாதிபதியாக இருந்த முதல் இரண்டு ஆண்டுகளில் 750 டொலர்களையே வரியாகச் செலுத்தினார்.

ஒபாமாவின் ‘பைடன்’ ஆதரவுப் பிரச்சாரம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. அடுத்த இரண்டு வாரங்களில் ‘பைடன்-கமலா ஹாரிஸ்’ சார்பாகப் பல கூட்டங்களில் ஒபாமா உரைகளை வழங்க உள்ளார். ஒபாமா அந்த உரைகளில் ‘டிரம்பை’ மேலும் நேரடியாக கடுமையாகச் சாடுவார் என எதிர்பார்க்கலாம்.

‘ஒபாமா’ உரையாற்றிய ‘டிரைவ்-இன்’ பேரணியில் வாகன ‘கோர்ண்’ ஒலிகள் உரைக்கு ஆதரவாக எழுப்பப்பட்டன. சிறந்த சொற்பொழிவாளரான ‘ஒபாமா’ முத்திரை பதிக்கும் தனது சொல்லாட்சியால் ஜனநாயக கட்சி ஆதரவாளர்களை மேலும் உற்சாகத்தில் தள்ளினார். 2016 இல் தனது மனைவியின் சொல்லாடலால் ஈர்க்கப்பட்ட ‘ஒபாமா’,
அந்த மந்திரச்சொல்லில் இருந்து இப்பொழுது ஓரளவு திசைதிரும்பியுள்ளதாகத் தோன்றியது. “எப்போது அவர்கள் எங்களைத் தாழ்வாகச் சொல்கிறார்களோ, அப்பொழுதில் நாங்கள் உயரத்திற்குச் செல்கிறோம்.” என மிச்சேல், 2016 இல் பேசியிருந்தார்.

“டரம்பின் தொலைக்காட்சி மதிப்பீடுகள் குறைந்துவிட்டன. எனவே அது அவரைத் துன்புறுத்துகிறது என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் விடயம் என்னவென்றால், இது ‘ரியாலிட்டி ஷோ’ அல்ல. இது உண்மையான களம். அவர் அதிபர் வேலையைத் தீவிரமாக எடுத்துக் கொள்ள இயலாது என்று நிரூபித்ததன் விளைவுகளால் நாங்கள் இன்று துன்பப்பட வேண்டியிருக்கிறது.”

ஒபாமா, தனது முன்னாள் துணை ஜனாதிபதிக்காக இணைய வழி மூலம் மில்லியன் கணக்கில் தேர்தல் நிதியைத் திரட்ட உதவியுள்ளார். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க் காலகட்டம் ஆதலால் பிரச்சார நிகழ்வுகளில் நேரில் முன்பு தோன்றியிருக்கவில்லை.

“இந்த தொற்றுநோய் ஆரம்பித்து எட்டு மாதங்கள், மீண்டும் தொற்றுநோய் அதிகரித்து வருகின்றது,” ‘டொனால்ட் டிரம்ப்’ திடீரென்று நம் அனைவரையும் பாதுகாக்கப் போவதில்லை. அவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான அடிப்படை நடவடிக்கைகளைக் கூட எடுக்க முடியாத ஒருவர்” எனவும் ‘ஒபாமா’ சொன்னார்.

ஒபாமா’, தனது உயர்ந்த பிரச்சார நடையை ஒரு தருணத்தில் ஒதுக்கி வைத்து, ‘ட்ரம்ப்’ சொன்ன பொய்யான தகவலை ஆயுதமாக்கினார். ‘டிரம்ப்’ செவ்வாயன்று மேற்கு பென்சில்வேனியாவில் நடந்த பேரணி ஒன்றில் ஆதரவாளர்களிடம் கூறியதை நினைவு கூர்ந்தார்.

“ஜனாதிபதி ட்ரம்ப் நேற்றிரவு ‘எரியில்’ சிறிது நேரம் கழித்தார், வெளிப்படையாக அவர் இங்கு பயணம் செய்ய வேண்டி வந்துவிட்டது எனப் புகார் கூறினார், பின்னர் அவர் பிரச்சார நிகழ்வின் நேரத்தைக் குறைத்தார். நான் அப்படி உணரவில்லை. பென்சில்வேனியாவுக்கு வருவது எனக்கு மிகவும் பிடிக்கும்.”

‘ட்ரம்ப்பின்’ செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், அந்த நபர் பள்ளி முதல்வர், பயிற்சியாளர் அல்லது குடும்ப உறுப்பினராக இருந்தால் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

பைடனை இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் முன்னிலைக் கருத்துக் கணிப்பு காரணமாக கவனத்தைக் கைவிட்டு விடக்கூடாது என்று அவர் ஜனநாயகக் கட்சியினரை எச்சரித்தார், மேலும் சிலர் 2016 இல் “சோம்பேறிகளாக” மாறிவிட்டனர் என்றும் கூறினார். 2016இல் கிலாறி கிளின்டனும் கூட கருத்துக் கணிப்பில் முன்னணியில்தான் இருந்தார். முடிவில் பலனளிக்கவில்லை” என்பதையும் ஒபாமா ஞாபகப்படுத்தினார்.

பார்வையாளர்கள் ஒன்றுசேர்ந்து கூச்சலிடத் தொடங்கியபோது, ​​”நாங்கள் தவறாது வாக்களிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

ஒபாமா தனது அடுத்த நிகழ்வைச் சனிக்கிழமையன்று மியாமியில் நடத்த திட்டமிட்டுள்ளார். அடுத்த வாரம் ஆர்லாண்டோவில் மற்றொரு பேரணியும் நடைபெறும் என்று ஜனநாயகக் கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

நன்றி: நடராஜா முரளிதரன்