கல்வியில் முன்னேறி வரும் மட்டக்களப்பு மாவட்டம்

கல்வியில் முன்னேறி வரும் மட்டக்களப்பு மாவட்டம்

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் இலங்கையின் கல்வி வலய தரப்படுத்தலில் 45வது வலயமாகவிருந்த மட்டக்களப்பு கல்வி வலயம், 2020ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 17வது நிலைக்கு உயிர்ந்துள்ளதாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

2021ஆம்ஆண்டுக்கான கா.பொ.த.சாதாரண தர பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகின்றது. 2020ஆம்ஆண்டு நடைபெற்ற கா.பொ.த.சாதாரணதர பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளிவந்த நிலையில் தற்போது பரீட்சை திணைக்களம் பரீட்சையின் பெறுபேறுகளின் பகுப்பாய்வு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் மட்டக்களப்பு கல்வி வலயமானது இலங்கையில் உள்ள நூறு கல்வி வலயங்களுள் 79.38 என்ற சித்த வீதத்தினைப்பெற்று இலங்கையில் 17வது இடத்தினைப்பெற்றுள்ளது.2019ஆம் ஆண்டு கா.பொ.த.சாதாரண தர பரீட்சை சித்திவீத பெறுபேறுகளுடன் ஒப்பிடுகையில் இந்த சித்திவீதமானது 6.48என்ற வீத அதிகரிப்பினை காட்டுவதுடன் 2019ஆம் ஆண்டு நாங்கள் அகில இலங்கையில் 45வது இடத்தில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

2020ஆம்ஆண்டு நாடு முழுமையாக முடக்கப்பட்டிருந்த நிலையிலும் மாணவர்கள் பல இடர்பாடுகளுக்கு மத்தியில் தமதுகல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து இலங்கையில் முதல் 20 இடங்களுக்குள் வருவதற்கான வாய்ப்பினை பெற்றுத்தந்துள்ளார்கள்.

கிழக்கு மாகாணத்தில் இந்த விகிதாசார அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயம் இரண்டாம் இடத்தினைப்பெற்றுள்ளது. இந்த மாணவர்களை அக்கரையுடன் வழிநடத்தி கற்பித்த அதிபர்கள்,ஆசிரியர்கள் இந்தமாணவர்களுக்கான பரீட்சைகளை மேற்கொண்டு பகுப்பாய்வு செய்து அவர்களை வழிநடத்தி பெறுபேறுகளை பெறுவதற்கு உழைத்த வலய கல்வி அலுவலகத்தின் கல்விசார் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Tamil News