அகதிகளை ஏற்றுக் கொள்ளும் எண்ணிக்கையை அவுஸ்திரேலியா குறைத்திருக்கிறது’: அவுஸ்திரேலிய பசுமைக் கட்சி தலைவர் சொல்வது உண்மையா?

அகதிகளை ஏற்றுக் கொள்ளும் எண்ணிக்கை

இடம்பெயர்ந்த உக்ரேனியர்களுக்கு உதவுவதற்கான அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை கேள்வி எழுப்பியிருந்த அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் தலைவர் ஆடம் பாண்ட், ஆண்டு தோறும் அகதிகளை ஏற்றுக் கொள்ளும் எண்ணிக்கையில் 5,000 இடங்களை குறைத்ததற்கு அவுஸ்திரேலிய பிரதமரே பொறுப்பு எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அவ்வாறு அகதிகளுக்கான இடங்களை அவுஸ்திரேலியா குறைத்திருப்பது ‘உண்மையா?’ என ஆராய்ந்துள்ள AAP FactCheck நிறுவனம், அவரது கூற்று பொதுவாக ‘உண்மையானது!’ என்றும் ஆனால் அதில் சிறிய பிழைகள் மட்டும் உள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த 2020ல், அவுஸ்திரேலியா ஆண்டுதோறும் வழங்கும் அகதிகள் மற்றும் மனிதாபிமான விசாக்கள் எண்ணிக்கையை 18,750 இடங்களிலிருந்து 13,750 இடங்களாக அவுஸ்திரேலித பிரதமர் ஸ்காட் மாரிசன் தலைமையிலான அவுஸ்திரேலிய அரசாங்கம் குறைத்தது.

அதனடிப்படையில் பசுமைக் கட்சியின் தலைவர் அகதிகளுக்கான 5000 இடங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் குறைத்திருக்கிறது என்று கூறியது சரியே. எனினும், ஒதுக்கப்பட்ட அகதிகள் மற்றும் மனிதாபிமான விசாக்களை காட்டிலும் வழங்கப்பட்ட விசாக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அந்த வகையில், பசுமைக் கட்சி தலைவர் சொல்லிய எண்ணிக்கையை காட்டிலும் மேலும் அதிகமான இடங்கள் (அகதிகளுக்கான விசாக்கள்) வழங்கப்படாமல் இருப்பதாக இந்த ஆராய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Tamil News