ஆப்கானிஸ்தானில் பிரபல மசூதியில் குண்டுவெடிப்பு: 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு- 40பேர் காயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பிரபல மசூதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், 20க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மேலும் 40பேர் காயமடைந்தனர்.

காபூலின் கைர்கானா பகுதியில் அமைந்துள்ள ஒரு மசூதியில் நேற்று (புதன்கிழமை) மாலை தொழுகை நடந்து கொண்டிருந்தபோது பயங்கர சத்தத்துடன் இந்த குண்டுவெடித்துள்ளது.

மேலும் அவசரகால தன்னார்வ தொண்டு நிறுவனம், நகரின் ஒரு மருத்துவமனையில் மட்டும், 5 குழந்தைகள் உட்பட 27 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பின் போது, படுகாயமடைந்தவர்கள் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபகாலமாக ஆப்கானிஸ்தானில் நடக்கும் தாக்குதல்களுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று வரும் நிலையில், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.