பசில் ராஜபக்‌ஷவுக்கு மீண்டும் பிடியாணை

மாத்தறை காணி கொள்வனவு வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாகவும் ஆஜராகத் தவறியதை அடுத்து, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக மீண்டும் பிடியாணையை மாத்தறை தலைமை நீதவான் செவ்வாய்க்கிழமை (21) பிறப்பித்துள்ளார்.

மாத்தறை, எலியகந்த வீதியில் அமைந்துள்ள பிரவுன்ஸ் ஹில் பகுதியில் 60 மில்லியன் ரூபா பெறுமதியான ஒன்றரை ஏக்கர் தென்னந்தோப்பு காணியைக் கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினாலேயே அவருக்கு எதிரான பிடியாணை உத்தரவை பிறப்பிக்க நீதவான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அத்துடன், முன்னாள் அமைச்சரின் நான்கு பிணையாளர்களுக்கும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள தலைமை நீதவான், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.