சட்டமுரணாக இந்தியா செல்ல முயன்றவர்கள் கைது: இருவருக்கு விளக்கமறியல் – 11 பேருக்கு பிணை

இந்தியா செல்ல முயன்றவர்கள் கைது

திருகோணமலை தில்லை நகர் பகுதியைச் சேர்ந்த 3 ஆண்கள், 3 பெண்கள் 5 சிறுவர்கள் மற்றும் படகோட்டிகளான பலாலி அண்ரனிபுரம் பகுதியைச் சேர்ந்த  2 ஆண்களும் உள்ளடங்கலாக 13 பேர், யாழ்ப்பாணம் பலாலி கடற்பரப்பின் ஊடாக வெள்ளிக்கிழமை இரவு இந்தியா நோக்கி படகொன்றில் பயணித்த வேளை கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் அவர்கள் பயணித்த படகு மற்றும் அதற்கான வெளியிணைப்பு இயந்திரம், இயந்திரத்திற்கு தேவையான எரிபொருள் என்பவையும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட 13 பேரையும், மீட்கப்பட்ட படகு, இயந்திரம் உள்ளிட்டவற்றை கடற்படையினர் சட்ட நடவடிக்கைக்காக பலாலி காவல்துறையினரிடம் கையளித்தனர்.

பொலிஸார் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தினர். அத்துடன் சான்று பொருட்களாக படகு, வெளியிணைப்பு இயந்திரம் உள்ளிட்டவற்றையும் மன்றில் பாரப்படுத்தினர்.

வழக்கினை விசாரித்த மல்லாகம் நீதவான் படகோட்டிகள் இருவரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறும், ஏனைய 11 பேரையும் பிணையில் செல்ல அனுமதித்த நீதவான் 12 ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்து கட்டளையிட்டார்.

Tamil News