அவுஸ்திரேலியாவில் 70 ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளனரா?

அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக பணியாற்றி வரும் 70 ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதி வழங்க வாய்ப்பு கிடையாது என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல் தெரிவித்திருக்கிறார்.

அவுஸ்திரேலியாவில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், சரியான காரணமின்றி விசா கோருபவர்களுக்கு அவர் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

எந்த காரணமுமின்றி சாதாரணமாக வந்து நிரந்தரமாக வசிப்பதற்கான நாடு அல்ல அவுஸ்திரேலியா என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீலின் கூற்றுப்படி, கடந்த மே மாதம் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்த போது பரிசீலிக்கப்படாத நிலையில் சுமார் 10 லட்சம் விசாக்கள் இருந்ததாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்த நிலைக்கு கடந்த தாராளவாத தேசிய கூட்டணி ஆட்சியின் போது உள்துறை அமைச்சராக இருந்த பீட்டர் டட்டனே முக்கிய காரணம் என தற்போதைய உள்துறை அமைச்சர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

“பீட்டர் டட்டன் குடிவரவுத்துறை அமைச்சராக இருந்த போது, எல்லைகளைப் பாதுகாப்பதில் தான் எவ்வளவு கடுமையானவர் என்பதை நாடு முழுவதும் சொல்லி வந்தார். ஆனால், அவரது பார்வையின் கீழேயே அனைத்தும் நடந்திருக்கிறது. இது ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய ஆட்கடத்தல் மோசடியாக விவரிக்கப்படுகிறது,” என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல் குறிப்பிட்டிருக்கிறார்.