அம்பாறை; கொரோனா பீதியால் சுயமாகவே போக்குவரத்தை குறைத்துவரும் பொதுமக்கள்

13 0 1 அம்பாறை; கொரோனா பீதியால் சுயமாகவே போக்குவரத்தை குறைத்துவரும் பொதுமக்கள்அம்பாறை மாவட்டத்தில், தொடரும் கொரோனா பீதியால் பொதுமக்கள் சுயமாகவே பொதுப் போக்குவரத்தை குறைத்து வருகிறார்கள். வீதிகளில் வாகனப் போக்குவரத்து குறைந்து வருகின்றது. பஸ்களில் ஓரிருவரையே காணமுடிகின்றது.

ஊரடங்குச் சட்டம் பற்றி, பொதுமக்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. மாறாக அவர்களாகவே அடங்கி முடங்கி விடுவதைக் காணக் கூடியதாயுள்ளது. ஊரடங்கு விடயத்தைவிட விலைவாசி ஏற்றமே பேசுபொருளாக அவர்கள் மத்தியில் நிலவுகிறது.

பால்மா, காஷ் போன்றவற்றை சற்றும் காண முடியாத நிலை. மேலும், சீனியின் விலை 160ருபாவுக்கு மேல் எகிறிச் செல்கிறது. ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் பற்றியே மக்கள் தமக்குள் பொதுவாக பேசிக் கொள்கிறார்கள்.

அண்மைக் காலமாக, அம்பாறை மாவட்டத்தில் கொரோனா தொற்று படுவேகமாக பரவி வருகிறது. தினம்தினம் தொற்றாளர்களின் எண்ணிக்கை மோசமாக அதிகரித்து வருகிறது. மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கல்முனை பிராந்தியத்தை விட அம்பாறைப் பிராந்திய நிலைமை நாளுக்கு நாள் படுமோசமாக மாறி வருகிறது. நேற்று முன்தினம் இடம்பெற்ற டிசிசி கூட்டத்திலும் இதுவிடயம் பேசப்பட்டது.

பெரும்பாலானவர்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் சுயமுடக்கத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். அவசியமாக வெளியே சென்றாலும் மறுகணம் வீடு திரும்பி விடுகிறார்கள்.

மொத்தத்தில், இனம் புரியாத ஓர் அமைதி நிலை நிலவுகிறது. புயலுக்கு முந்திய அமைதியா? என்ற நியாயமான அச்சமும் நிலவுகின்றது.

ilakku-weekly-epaper-143-august-15-2021