நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள பிள்ளையானுக்கு அனுமதி

ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் 2015ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுவரும் நிலையில் கடந்த பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விரும்புவாக்குகளைப்பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில் எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் அதில் கலந்துகொள்ளுவதற்காக மட்டக்களப்பு மேல்நீதிமன்றில் நகர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கான அனுமதி கோரப்பட்டிருந்தது.

இதனை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டி.எம்.சூசைதாசன்,பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கும் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கலந்துகொள்வதற்குமானு அனுமதியை வழங்கியுள்ளார்.

நீதிமன்றில் இருந்து சிறைச்சாலைக்கு சந்திரகாந்தனை கொண்டுசெல்லும்போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த சந்திரகாந்தன் விரைவில் விலங்கினை உடைத்துவெளியில் வந்து அனைவருடனும்பேசுவதாக தெரிவித்தார்.