சிறீலங்காவுக்கு சில்வா மிக முக்கியமானவர் – சிறீலங்கா அமைச்சர்

அமெரிக்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் அதிகளவு மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட அமெரிக்க படைத் தளபதி லைசிஸ் கிரான்ட் அமெரிக்காவுக்கு எவ்வளவு முக்கியமானவரோ அதே அளவுக்கு சில்வா சிறீலங்காவுக்கு முக்கியமானவர் என சிறீலங்காவின் அபவிருத்தி அமைச்சர் சம்பிக் ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் பேசும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்கா அரச தலைவரே நாட்டின் பாதுகாப்புக்கு தலைவராவார் எனவே அவருக்கு இராணுவத்தளபதியை நியமிக்கும் அதிகாரம் உண்டு.

அமெரிக்காவில் அரச தலைவர் லிங்கனின் ஆட்சிக்காலத்தில் உள்நாட்டுப் போர் இடம்பெற்றது. அதன்போது போரை முறியடிப்பதற்காக ஜெனரல் லைசிஸ் கிரான்ட் கடுமையான படை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார், பல மனித உரிமை மீறல்களையும் மேற்கொண்டிருந்தார்.

அவர் மீது போர்க்குற்றச்சாட்டுக்கள் உள்ளன ஆனாலும் அவர் அமெரிக்காவின் முக்கிய நபராக கருதப்படுகின்றார். அதேபோலவே சில்வாவும் சிறீலங்காவுக்கு மிகவும் முக்கியமான நபராவார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.