சக கைதியின் குடும்பத்திற்கு வீடு வழங்கிய நாமல்

சிறையில் தன்னுடன் இருந்த சக கைதியின் குடும்பத்தினருக்கு தான் வாக்களித்தபடி வீடு ஒன்றை வழங்கியுள்ளார் நாமல் ராஜபக்ஸ. கிளிநொச்சி கனகாம்பிகைக் குளத்தைச் சேர்ந்த சவரிமுத்து லோகநாதன் என்பவரின் குடும்பத்தினருக்கே வீடு கையளிக்கப்பட்டது.

பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஸவுடன், இரணைமடு, கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதியொருவரும் இருந்துள்ளார்.

அவர் சிறையிலிருக்கும் போது, தான் வீட்டிற்குச் சென்றால் தனக்கு தங்குவதற்கு நிரந்தர வீடு இலலையென்றும், சிறையிலிருந்து சென்றால் தனக்கு வீட்டு வசதியேற்படுத்திக் கொடுக்குமாறும் நாமல் ராஜபக்ஸவிடம் கோரியிருந்தார்.

இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் 13ஆம் திகதி நாமல் ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர் கிளிநொச்சி, பன்னங்கண்டி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது, சிறையில் தனக்கு அறிமுகமான நபரின் குடும்பத்தினரை சந்தித்து வீட்டு வசதிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

இப்போது புது வீட்டை கட்டி முடித்து, அதற்கான உறுதியையும் அவரகளிடம் வழங்கியுள்ளார்.

மேலும் கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களை வழங்கி,  கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானத்தையும் பார்வையிட்டார்.