பிரதேசசெயலகம் தரமுயர்த்தப்பட்டால் மாத்திரமே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குங்கள். இன்றேல் எதிர்த்து வாக்களித்து வீட்டுக்கு அனுப்புங்கள்.இவ்வாறு கோரும் வேண்டுகோளை சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கல்முனை வாழ் தமிழ்மக்கள் அன்பாக விடுக்கின்றனர்.
கல்முனை வாழ் தமிழ்மக்கள் சார்பாக கல்முனையில் உண்ணாவிரதமிருந்த வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் சிவஸ்ரீ.சச்சிதானந்தசிவக்குருக்கள் மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் அ.விஜயரெத்தினம் அனைத்து இந்து ஆலயங்களின் தலைவரான கி.லிங்கேஸ்வரன் ஆகியோர் இணைந்து கோரிக்கைவிடுத்துள்ளனர்.
ரணில் அரசாங்கம் இந்த நாட்டில் தொடர்ச்சியாக தமிழ்மக்களை ஏமாற்றிவருகிறது. தமிழ்மக்களால் ஆட்சிக்குவந்த பிரதமர் அண்மையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் தமிழ்எம்பிக்களால் தப்பிப்பிழைத்த பிரதமர் ரணில் இம்முறை தமிழ்மக்களை ஏமாற்றமுனையக்கூடாது என்றும் கோருகின்றோம்.
அந்தக்கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 30வருடகாலமாக இத் தரமுயர்த்தல் கோரிக்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்படுகின்றபோதெல்லாம் ஒருசில முஸ்லிம் அரசியல்வாதிகள் முட்டுக்கட்டையாகஇருந்துவந்துள்ளனர். நாமும் பொறுமையாக இருந்துவந்தோம்.
எமது த.தே.கூட்டமைப்பினர் பல தடவைகள் கொழும்பில் பிரதமரையும் அமைச்சரையும் சந்தித்துப் பேசியுள்ளனர். எனினும் சிலபல தடங்கல்களால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுவந்துள்ளோம்.
ஹரீசின் எச்சரிக்கை!
விட்டுக்கொடுப்புக்கு இடமேயில்லை!
தமிழ்மக்களின் போராட்டம் வரலாறு தியாகம் என்ன என்பது தெரியாமல் வாய்க்குவந்தபடி பேசுகிறார் ஹரீஸ். இந்தச்சலசலப்புக்கெல்லாம் இந்த தமிழர் அஞ்சமாட்டார்கள்.வீரத்தோடு பிறந்து உலகம்போற்றும்வகையில் வீரத்தோடு வாழ்ந்தவர்கள் நாம்.
கல்முனை மாநகரம் தமிழர்தாயகம். அது எந்தக்காரணம் கொண்டும் யாருக்காகவும் யாருக்கும் விட்டுக்கொடுக்கமுடியாது. நாம் சாகும்வரை உண்ணாவிரதமிருந்தவர்கள். ஒரு மாதகாலத்துள் இது நிறைவேற்றப்படாவிட்டால் நாம் மீண்டும் உண்ணாவிரதத்தில் குதிப்போம். எமது இனத்திற்காக எமது உயிரை விடுவதற்கு கிஞ்சித்தும் தயங்கமாட்டோம்.
தமிழ்பாராளுமன்றஉறுப்பினர்களே!
எனவே தயவுசெய்து பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் மறத்தமிழன் என்றரீதீயில் ஒற்றுமையாக எமது கல்முனை உப பிரதேசசெயலகம் தரமுயர்த்தலுக்கு ஒத்துழைத்து உலகத்திற்கு ஒற்றுமையைக்காட்டுங்கள்.
பிரதேசசெயலகம் தரமுயர்த்தப்பட்டால் மாத்திரமே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குங்கள். இன்றேல் எதிர்த்து வாக்களித்து வீட்டுக்கு அனுப்புங்கள்.
இன்னும் ஓரிருதினங்களில் ஒவ்வொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கும் தனித்தனி கடிதம் அனுப்பிவைக்கப்படவுள்ளது எனவும் உண்ணாவிரதிகள் தெரிவிக்கின்றனர்.