த.தே.கூட்டமைப்பு இன நல்லிணக்கம் என்றபோர்வையில்  தமிழ்மக்களை ஏமாற்றமுனையக்கூடாது- கல்முனை தமிழ்மக்கள்

பிரதேசசெயலகம் தரமுயர்த்தப்பட்டால் மாத்திரமே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குங்கள். இன்றேல் எதிர்த்து வாக்களித்து வீட்டுக்கு அனுப்புங்கள்.இவ்வாறு கோரும் வேண்டுகோளை சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கல்முனை வாழ் தமிழ்மக்கள் அன்பாக விடுக்கின்றனர்.

கல்முனை வாழ் தமிழ்மக்கள் சார்பாக கல்முனையில் உண்ணாவிரதமிருந்த வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் சிவஸ்ரீ.சச்சிதானந்தசிவக்குருக்கள் மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் அ.விஜயரெத்தினம் அனைத்து இந்து ஆலயங்களின் தலைவரான கி.லிங்கேஸ்வரன் ஆகியோர் இணைந்து கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ரணில் அரசாங்கம்  இந்த நாட்டில் தொடர்ச்சியாக தமிழ்மக்களை ஏமாற்றிவருகிறது. தமிழ்மக்களால் ஆட்சிக்குவந்த பிரதமர் அண்மையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் தமிழ்எம்பிக்களால் தப்பிப்பிழைத்த பிரதமர் ரணில் இம்முறை தமிழ்மக்களை ஏமாற்றமுனையக்கூடாது என்றும் கோருகின்றோம்.

அந்தக்கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 30வருடகாலமாக இத் தரமுயர்த்தல் கோரிக்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்படுகின்றபோதெல்லாம் ஒருசில முஸ்லிம் அரசியல்வாதிகள் முட்டுக்கட்டையாகஇருந்துவந்துள்ளனர். நாமும் பொறுமையாக இருந்துவந்தோம்.
எமது த.தே.கூட்டமைப்பினர் பல தடவைகள் கொழும்பில் பிரதமரையும் அமைச்சரையும் சந்தித்துப் பேசியுள்ளனர். எனினும் சிலபல தடங்கல்களால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுவந்துள்ளோம்.

தமிழ்மக்களின் வாக்குகளை மாத்திரம் பெற்ற த.தே.கூட்டமைப்பினர் தமிழ்பேசும் மக்களுக்கான நிரந்ததீர்வை நோக்கி பயணிப்பதாக கூறுகின்றனர். அதற்காக வாக்களித்த மக்களை மறந்து  தமிழ்பேசும் மக்கள் என்று அடிக்கடி உச்சரித்தும் வருகின்றனர்.

ஹரீசின் எச்சரிக்கை!

த.தே.கூட்டமைப்பினர் தமிழ்பேசும் மக்கள் என்ற ரீதீயில் செய்றபட்டுவருகின்றனனர். ஆனால் ஹரீஸ் போன்ற எம்பிக்கள் அதனை உதாசீனப்படுத்தி தமிழர்பிரச்சினைக்கு தீர்வு என்பது எங்களில்தான் தங்கியுள்ளது என மார்தட்டுகிறார்.
கல்முனையில் தமிழ்த்தரப்பு விட்டுக்கொடுக்கவேண்டும் இன்றேல் வேறுபாதையில் பயணிக்கவேண்டிவரும் என்று எச்சரிக்கிறார்.இத்தனைக்கும் முஸ்லிம்கள் தமிழருக்காக விட்டுக்கொடுத்தது என்ன? ஆனால் தமிழர்கள் நியாயமான அனைத்துவிடயங்களிலும் விட்டுக்கொடுத்தே வந்துள்ளனர்.
இவர்களுக்கு இவ்வளவுகாலமும் கிழக்குமாகாணமுதலமைச்சர் தொடக்கம் அத்தனை விடயங்களிலும் விட்டுக்கொடுத்துவந்ததன் விளைவே அவரது முட்டாள்தனமான பேச்சு என்பதனை மறந்துவிடமுடியாது.
இனியாவது த.தே.கூட்டமைப்பு நல்லிணக்கம் இனஜக்கியம் என்றபோர்வையில்  தமிழ்மக்களை ஏமாற்றமுனையக்கூடாது.

 

விட்டுக்கொடுப்புக்கு இடமேயில்லை!

தமிழ்மக்களின் போராட்டம் வரலாறு தியாகம் என்ன என்பது தெரியாமல் வாய்க்குவந்தபடி பேசுகிறார் ஹரீஸ். இந்தச்சலசலப்புக்கெல்லாம் இந்த தமிழர் அஞ்சமாட்டார்கள்.வீரத்தோடு பிறந்து உலகம்போற்றும்வகையில் வீரத்தோடு வாழ்ந்தவர்கள் நாம்.

கல்முனை மாநகரம் தமிழர்தாயகம். அது எந்தக்காரணம் கொண்டும் யாருக்காகவும் யாருக்கும் விட்டுக்கொடுக்கமுடியாது. நாம் சாகும்வரை உண்ணாவிரதமிருந்தவர்கள். ஒரு மாதகாலத்துள் இது நிறைவேற்றப்படாவிட்டால் நாம் மீண்டும் உண்ணாவிரதத்தில் குதிப்போம். எமது இனத்திற்காக எமது உயிரை விடுவதற்கு கிஞ்சித்தும் தயங்கமாட்டோம்.


தமிழ்பாராளுமன்றஉறுப்பினர்களே!
தமிழ்மக்களால்தான்; நல்லாட்சி உருவானது. நாமே ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் அமைத்தோம். எனவே உங்களது ஆதரவு இல்லாவிட்டால் எந்தக்கொம்பனாலும் அரசாங்கம் கவிழ்வதைத்தடுக்கமுடியாது.

எனவே தயவுசெய்து பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் மறத்தமிழன் என்றரீதீயில் ஒற்றுமையாக எமது கல்முனை உப பிரதேசசெயலகம் தரமுயர்த்தலுக்கு ஒத்துழைத்து உலகத்திற்கு ஒற்றுமையைக்காட்டுங்கள்.

பிரதேசசெயலகம் தரமுயர்த்தப்பட்டால் மாத்திரமே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குங்கள். இன்றேல் எதிர்த்து வாக்களித்து வீட்டுக்கு அனுப்புங்கள்.

இன்னும் ஓரிருதினங்களில் ஒவ்வொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கும் தனித்தனி கடிதம் அனுப்பிவைக்கப்படவுள்ளது எனவும் உண்ணாவிரதிகள் தெரிவிக்கின்றனர்.