யாழ். மாநகரசபை பிரதேசங்களில் புதிதாக அமைக்கப்படும் Smart Lamp Pole

யாழ். மாநகரசபைக்குட்பட்ட, வேறு இடங்களில் பொருத்தப்படும் Smart Lamp pole கம்பங்களில் 5G அலைக்காற்றை வழங்கப்போவதில்லை என யாழ். மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகரசபை ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த கம்பங்கள் தொடர்பில் சிலர் மக்கள் மத்தியில் போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு, மக்களை அச்சப்பட வைத்துள்ளனர்.

இந்த Smart Lamp pole ஊடாக 5G அலைக்காற்றை வழங்கப்படப் போவதில்லை எனவும் தெரிவித்தார். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும், நகரை எழில்மிகு நகரமாக்குவதற்காகவே மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றது என்றும் தெரிவித்தார்.

இது ஒருவருடத்திற்கு முன்னரே முறைப்படி சபையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விடாது சிலர் மக்களை தூண்டிவிட்டு குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை யாழ்.குருநகர் பகுதியில் இந்த மின்கம்பங்களை பொருத்த வந்தவர்கள் மக்களின் எதிர்ப்பினால் திரும்பிச் சென்றனர்.

இது இவ்வாறிருக்க கடந்த வாரம் இந்த Smart Lamp pole பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை மக்கள் திருப்பி அனுப்பினர். அந்த சமயத்தில் இந்த நடவடிக்கை பற்றி மாநகர சபைக்கு அறிவித்து, இதன் பதிலை முதல்வர் அறிவிக்காத போதிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், இவை தொடர்பாக மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்றும், மாநகரசபை உறுப்பினர்களான வ.பார்த்தீபன், இ.ரஜீவ் ஆகியோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.