திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய உயரதிகாரி ஒருவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டதையடுத்து, பிரதேச செயலாளர் தொடக்கம் 57உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரதேச செயலாளர் த.கஜேந்திரன், உதவி திட்டமிடல் அதிகாரி செல்வி எம்.அனோஜா உள்ளிட்ட 57 உத்தியோகத்தர்கள் தங்கள் தங்கள் வீடுகளில் எதிர் வரும் எட்டாம் திகதி வரை தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
இதேவேளை தொற்றுக்குள்ளான உயரதிகாரி தற்சமயம் பாலமுனை இடைத்தங்கல் நிலையத்தில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். அவரது குடும்பமும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பிரதேச செயலகத்தில் 58பேருக்கு அன்ரிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்ட போது ஒருவரைத் தவிர ஏனையோருக்கு தொற்று இல்லை என தெரிய வந்தது.
எனினும் ஒருவர் தொற்றுக்குள்ளாகி இனங் காணப்பட்ட காரணத்தினால் அவருடன் பணியாற்றிய ஏனைய 57 பேரையும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்த சுகாதாரப் பகுதியினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
முக்கிய பொறுப்புக்களிலுள்ள பெரும்பாலான உத்தியோகத்தர்கள் இவ்விதம் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த போதிலும் பிரதேச செயலகம் மூடப்படவில்லை.
மாறாக நிருவாக உத்தியோகத்தர் பி.நடேசன் தலைமையிலான குழுவினர் அலுவலக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.