அமெரிக்க காங்கிரஸில் புலிகளின் ஆதரவாளர்கள் உள்ளதாக இலங்கை குற்றச்சாட்டு

அமெரிக்க காங்கிரஸில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் உள்ளனர் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் மே 18 ம் திகதி சனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டொபோரா கே ரொஸ் உட்பட ஐந்து உறுப்பினர்கள் தீர்மானமொன்றை சமர்ப்பித்துள்ளதை கவனத்தில் எடுத்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மே 18 ம் திகதி சபையின் வெளிவிவகார குழுவின் பரிசீலனைக்கு அந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட தீர்மானத்தில் ஆதாரமற்ற அப்பட்டமான பொய்களை அடிப்படையாக கொண்ட குற்றச்சாட்டுகள் அடங்கியுள்ளன என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு இந்த தீர்மானத்தை கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானத்தின் நோக்கம் குறித்து கடும் சந்தேகங்கள் எழுவதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.