இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (09.06) 11மணியளவில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு போயிங் 737 என்ற விமானத்தில் 59 பேர் அடங்கிய குழுவினருடன் வந்து சேர்ந்தார். இதைத் தவிர இன்னுமோர் விமானமும் பாதுகாப்புக் கருதி இவர்களுடன் வந்து சேர்ந்தது. இந்த விமானம் தொடர்பாக குழப்பம் அடைந்து பின்னர் அது ஆய்வு செய்யப்பட்ட போது மோடியின் பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்ட விமானம் என அறியப்பட்டது. வந்த குழுவினர் 59 பேரில் 16பேர் இரண்டு விமானங்களின் விமானப் பணியாளர்களாவர்.
இவர்களை வரவேற்க சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்கள் சென்றிருந்தனர். மோடியின் வரவேற்பு நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில இடம்பெறவுள்ளது. கடும் மழையின் மத்தியில் மோடி விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார்.
மோடியின் விஜயத்தை முன்னிட்டு கொழும்பு நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் 11.00 மணிமுதல் 12.00 மணிவரையிலும், 1.45 முதல் 3.30 வரையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கட்டுநாயக்கா – கொழும்பு அதிவேக பாதையில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையம் வந்தடைந்த மோடி, கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியர் தேவாலயத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இங்கேயே ஏப்ரல் 21இல் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றிருந்தமை யாவரும் அறிந்ததே. தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடைபெற்ற இடமென்பதால் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியப் பிரதமர் மோடியை அங்கு செல்ல வேண்டாம் எனக் கூறப்பட்டது. ஆனாலும் அதையும் மீறி மோடி அங்கு சென்றிருந்தார்.
இந்த விஜயத்தின் போது மோடிக்கு எட்டு அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. குறித்த பகுதியில் தொலைபேசி சேவைகள் முடக்கப்பட்டிருந்தன.
தேவாலயத்திற்கு சென்ற மோடி அங்கு குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த நிகழ்வுகளைக் காட்டும் புகைப்படங்களை பார்வையிட்டார்.
இதன் பின்னர் காலிமுகத்திடலில் வரவேற்பளிக்கப்பட்டது. அதன் பின்னர் ஜனாதிபதி மாளிகையில் இசை வாத்தியங்கள் முழங்க சிங்கள பாரம்பரிய கண்டி நடனத்துடன் பெரும் மரியாதை செலுத்தப்பட்டது. கொட்டும் மழையிலும் குடைபிடித்து மைத்திரி அவரை வரவேற்றார். அங்கு மரநடுகை, இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு இடம்பெற்றது.
கடந்த 10 நாட்களில் தான் இரண்டாவது தடவையாக மைத்திரியை சந்திப்பதாக மோடி தெரிவித்திருந்தார். பயங்கரவாதம் என்பது ஒரு அச்சுறுத்தலாகும். ஒற்றுமையாகவும், ஒருமித்த நிலைப்பாட்டுடனும் அவற்றை எதிர்த்துப் போராட வேண்டும் என மோடி மைத்திரிக்குக் கூறினார். பாதுகாப்பான இலங்கைக்கும், வளமான எதிர்காலத்திற்கும் இந்தியா தொடர்ந்தும் உறுதுணையாக இருக்கும் என்றும் மோடி உறுதியளித்தார்.
இந்தியப் பிரதமர் மோடியின் வருகைக்கு நன்றி தெரிவித்த மைத்திரி, இலங்கை தொடர்பாக உங்கள் மதிப்பையும், ஆதரவு மற்றும் ஒத்துழைப்பையும் தான் மிகவும் பாராட்டுவதாகவும், நீங்கள் எங்கள் உண்மையான நண்பன் என்பதை நிரூபித்துள்ளீர்கள் என்றும் கூறினார்.
மோடிக்கு சிறிலங்கா பிரதமர் மைத்திரி ஓர் புத்தர் சிலையை பரிசாக வழங்கினார். சமாதி நிலையிலுள்ள வெண்தேக்கு மரத்தினாலான இந்த சிலையை செதுக்க 2 ஆண்டுகள் பிடித்ததாக அறிய முடிகின்றது.
இதனை பெற்றுக் கொண்ட மோடி, ஒரு சிறப்பு நண்பரிடமிருந்து கிடைத்த சிறப்புப் பரிசு இது எனக் கூறியதுடன், இந்த பரிசினால் தான் நெகிழ்ச்சியடைந்ததாகவும் கூறினார்.
பின்னர் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவை கொழும்பிலுள்ள தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 8 நிமிட சந்திப்பொன்றை இந்த தூதரகத்தில் மேற்கொண்டிருந்தனர். இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், பிரதமர் மோடி பதவியேற்றமைக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
சுதந்திரத்திற்கு பின்னரான அரசியலமைப்பு, தமிழ் மக்களுக்கு எதிராக அமைந்துள்ளதை சுட்டிக்காட்டிய கூட்டமைப்பினர், இலங்கையில் தமிழர்கள் சம அந்தஸ்தில் வாழ இந்தியா ஆகக்கூடிய கவனம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இது பற்றி முன்னரும் தன்னுடன் பேசியிருக்கின்றீர்கள் என்று கூறிய இந்தியப் பிரதமர், இந்தியாவிற்கு வந்து விரிவான கலந்துரையாடலில் பங்குபற்றி விரிவாக ஆராயும்படி தெரிவித்தார். அவர்களுக்கான பயண ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு தூதரக அதிகாரிகளிடம் மோடி தெரிவித்தார்.
பலாலி விமான நிலையத்தில் சிறியரக விமானங்களையாவது சேவையில் ஈடுபடுத்துமாறு கூட்டமைப்பினர் கேட்டுக் கொண்டமையையடுத்து, இது குறித்து கவனமெடுக்கும்படி தூதரக அதிகாரிகளிடம் மோடி கூறினார்.
இதனையடுத்து தூதரகத்தின் வெளியே இந்திய சமூகத்தினர் மத்தியில் உரையாற்றிய பின் மோடி சிறிலங்காவிலிருந்து புறப்பட்டு சென்றார்.
விமான நிலையத்தில் மோடியை வரவேற்றது முதல் மீண்டும் விமானம் ஏறும் வரை சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவருடன் கூட சென்றார். மோடிக்கும் ரணிலுக்குமான பேச்சுக்கள் அப்போது நடந்தன.