பிரித்தானியா இளவரசர் பிலிப் இறுதி நிகழ்வு சனிக்கிழமை – முப்பது பேரே பங்குபற்றுகின்றனர்

மறைந்த இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்குகளை நாட்டில் அமுலில் உள்ள கொரோனா சுகாதார விதிமுறைகளை அனுசரித்து முப்பது பேருடன் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு St George’s Chapel இல் நடைபெறவுள்ள இறுதி நிகழ்வில் இளவரசர் ஹரி உட்பட நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முப்பது பேர் மட்டுமே பிரசன்னமாகுவர் என்று தெரிவித்து அவர்களது பெயர் விவரங்களை பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ளது.
முப்பது பேரில் ஒருவராக பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளமாட்டார் என்று அவரது டவுனிங் வீதி அலுவலகம் தெரிவித்துள்ளது. அரச குடும்பத்தில் நெருக்கமான வேறு ஒருவருக்கு இடமளிக்கும் பொருட்டே பிரதமர் இறுதி நிகழ்வைத் தவிர்க்கிறார் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா மகாராணி இரண்டாவது எலிசபதின் கணவரும் எடின்பரோ பகுதியின் இளவரசருமான பிலிப் மவுன்பட்டன் (99) கடந்த வெள்ளிக்கிழமை (09) வின்சர் அரண்மனையில் காலமானதாக பக்கிங்கம் அரண்மனை தெரிவித்திருந்தது.

1947 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் இளவரசியை அவர் மணமுடித்த பின்னர், ஐந்து வருடங்களில் எலிசபத் மகாராணியாக முடிசூடப்பட்டிருந்தார். அவர்களுக்கு நான்கு பிள்ளைகளும், 8 பேரப்பிள்ளைகளும் உண்டு.’

18 மாத குழந்தையாக இருந்த போது கிறீஸ் நாட்டில் இருந்து தோடம்பழ பெட்டிக்குள் மறைந்து இருந்து பிரான்ஸ்இற்கு அகதியாக குடும்பத்துடன் வந்த பிலிப், தனது முயற்சியால் மீண்டும் உயர்ந்து பிரித்தானியாவின் அரச குடும்பத்தில் இணைந்து கொண்டது, நம்பிக்கை உடைய எவரும் வீழ்வதில்லை என்பதை காட்டியுள்ளது.

அவரின் தந்தையார் டென்மார்க்கை சேர்ந்தபோதும், தாய் ரஸ்யா நாட்டை சேர்ந்தவர் என்பதுடன் இரண்டாம் உலகப்போரின்போது ஜேர்மனியில் இருந்த தனது உடன்பிறப்புக்களுக்கு எதிராகவும் அவர் போரிட்டிருந்தார்.

சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு இறுதி நிகழ்வு ஆரம்பிக்க முன்னர் நாடு
முழுவதும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும். பிலிப்பின் உடல் வைக்கப்பட்ட பேழையைப் பொதுமக்கள் எவரும் நேரில் பார்வையிட அனுமதி வழங்கப்பட மாட்டாது.
பிலிப்பின் உடல் விசேடமாக வடிவமைக் கப்பட்ட ‘லான்ட் ரோவர்’ (Land Rover) வாகனத்தில் இராணுவ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்படும். தனது உடலைச் சுமந்து செல்லும் இறுதி ஊர்வல வண்டியை வடிவமைப்பதில் இளவரசர் பிலிப்பும் பங்கு கொண்டார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் விதிகள் காரணமாக இரங்கல் செய்தி எழுதும் புத்தகங்கள் பொது இடங்களில் வைக்கப்பட மாட்டாது. அவை இணையத்தில் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.