மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தொடரும் – விவசாயிகள் அறிவிப்பு

விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக் கதவுகள் அடைக்கப்படவில்லை என சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே இதுவரை 11சுற்றுப் பேச்சு நடந்த போதும்  எந்த உறுதியான முடிவும் எடுக்கவில்லை.

அதே வேளை இந்த சட்டங்களை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.   மத்திய அரசும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த 18 மாதங்கள் நிறுத்திவைத்துள்ளது.

இந்நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்   கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையேயிலான பேச்சுவார்த்தை முடிந்துவிடவில்லை, தொடர்ந்து நடக்கும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து  சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பினர், நேற்று இரவு தங்களின் அறி்க்கையை வெளியி்ட்டனர்.

அந்த அறிக்கையில்,

“வேளாண் சட்டங்கள் குறித்து பேசுவதற்காகத்தான் விவசாயிகள் தாங்கள் தேர்ந்தெடுத்த அரசுடன் பேச டெல்லிக்கு வந்துள்ளார்கள். ஆதலால், மத்திய அ ரசுடன் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது, பேச்சுவார்த்தைக்கான கதவுகள் அடைக்கப்பட்டன என்ற கேள்விக்கே இடமில்லை.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், குறைந்தபட் ஆதார விலையை உறுதிசெய்ய சட்டபூர்வ அங்கீகாரம் தேவை ஆகிய கோரிக்கைகள் தொடர்ந்து வைக்கப்படும்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் போராட்டங்களை பலவீனமடையச் செய்யும் நோக்கில், சிதைக்கும் நோக்கில் போலீஸார் செய்த முயற்சிகளை நாங்கள் கண்டிக்கிறோம். அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்த  காவல்துறையினர் ஊக்கமளித்தார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது.

காவல்துறையினர் மற்றும் பாஜக குண்டர்கள் தொடர்ந்து செய்த வன்முறை மூலம் மத்தியஅரசுக்கு உள்ளூர அச்சம் ஏற்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. எங்கள் போராட்டம் நாடுமுழுவதும் அமைதியாகத் தொடரும் என உறுதியளிக்கிறோம்” என்றுள்ளது.